25/02/2026
“டீப் ஸ்டேட்” (Deep State) எனப்படுவது, மக்களது ஆணையுடன் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும், கண்களுக்கு புலப்படாத ஒரு பொறிமுறை அமைப்பாகும்.
அமெரிக்காவில், டீப் ஸ்டேட் யூத-அமெரிக்க வர்த்தக உயர்வர்க்கத்தினரால் வழி நடத்தப்படுகின்றது.
இந்தியாவில், அது உயர்மட்ட அரச நிர்வாக அதிகாரிகளால் இயக்கப்படுகிறது.
பாகிஸ்தானில், அது மூத்த இராணுவ அதிகாரிகளின் செல்வாக்கில் உள்ளது.
இந்த நாட்டில் டீப் ஸ்டேட்டிற்கு நீண்ட வரலாறு கிடையாது. வடக்கு–கிழக்கில் புலிகளுக்கெதிராக யுத்தம் செய்யும் காலத்தில் இத்தகைய அமைப்பு இருக்கவில்லை; அது நாட்டின் கஜானாவை சுத்தம் செய்யும் காலகட்டத்திலே உருவானதாகும்.
2009 க்குப் பின்னர் இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அந்த நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சில இராணுவ அதிகாரிகள் ராஜபக்சக்களிடம் அரசியல் பாதுகாப்பை நாடினர்.
2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, புதிய அரசு யுத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கவில்லை. அதனால், இவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இராணுவ அதிகாரிகள் பின்வரும் தரப்புகளுடன் ஒரு கூட்டணிக்குள் வந்தனர்;
1. இராணுவ அதிகாரிகள்
2. காவி தரித்தவர்கள்
3. பக்கச் சார்பான ஊடகப் பிரதிநிதிகள்
4. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்
5. வர்த்தகர்கள்
சிங்கள-பௌத்த மேலாதிக்க சிந்தனை இவர்களின் பொதுவான கருத்தியலாக விளங்கியது.
2015 இல் தோல்வியை தழுவிய ராஜபக்சக்கள் மீண்டும் அதிகாரத்தை தம்வசப்படுத்திக்கொள்ள இந்த கும்பலை பயன்படுத்தினர். இந்த குழுவினரை பயன்படுத்தி “புலிகள் மீண்டும் எழுச்சி பெறுகின்றனர்”, “மின்சார கதிரைகளுக்கு கொண்டு செல்கின்றனர்” என்ற நாடகங்களை அரங்கேற்றினர்.
சிவாஜிலிங்கம் போன்ற செல்வாக்கிழந்த தமிழ் அரசியல்வாதிகளை பயன்படுத்தி கொல்லப்பட்ட பிரபாகரனுக்கு மீண்டும் உயிரூட்ட முனைந்தனர்.
ஒருபுறம், சிவாஜிலிங்கத்தை ஜெனீவா மனித உரிமை மாநாட்டிற்கு அனுப்பினர். மறுபுறம், அவரோடு மோதலை உருவாக்க மற்றுமொரு (Sri Lanka Global Forum) குழுவினரையும் ஜெனீவாவுக்கு அனுப்பினர்.
அங்கே இவ்விரு தரப்புகளுக்கும் இடையில் விராந்தைகளிலும் மூலை முடுக்குகளிலும் மோதல்கள் உருவாக்கப்பட்டன. தெரண போன்ற தொலைக்காட்சி ஊடகங்கள் இந்நிகழ்வுகளை பெருமிதத்துடன் மக்களுக்கு பெரிதுபடுத்திக் காட்டின.
இந்த இரு அணியினரும் ராஜபக்சக்களின் கையாட்களாகத்தான் செயல்பட்டனர் என்பதை பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. தெரண மக்கள் மயப்படுத்துவது நாடகம் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளவில்லை.
போருக்குப் பின்னர் திலித் ஜயவீரவால், மஹிந்தவுக்கு தெரியாமல் கோட்டாபயவை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த முயற்சிக்கு சிங்கள-பௌத்த சுயநலவாத மேலாதிக்கச் சிந்தனை கொண்ட (டீப் ஸ்டேட் போன்ற) குழுக்களின் ஆதரவு பெறப்பட்டது.
திலித், ராஜபக்ச குடும்பத்தினரின் விருப்பத்தையும் மீறி இந்த திட்டத்தை முன்கொண்டு சென்றார்.
LTTE அச்ச சூழலுக்கு புறம்பாக, முஸ்லிம் அச்ச நிலவரமும் திலித்தினால் உருவாக்கப்பட்டது. அப்துல் ராஸிக்கை உபயோகப்படுத்தி முஸ்லிம் அச்சக்களம் உருவாக்கப்பட்டது.
அலுத்கம, திகன சம்பவங்கள், ஹலால் புறக்கணிப்பு, “வந்தக் கொத்து” சர்ச்சை, ஈஸ்டர் தாக்குதல் போன்றவை தனித்தனியான நிகழ்வுகள் அல்ல; கோட்டாபயவின் அரசியல் பிரவேசம் தொடர்பான திரைப்பட காட்சிகளின் பாகங்களாகும்.
ஒரு நெருக்கடிச் சூழலை உருவாக்கி அதிகாரத்திற்கு வந்த கோட்டாபயவுக்கு தொடர்ந்து வந்த கொரோனா உருவாக்கிய நெருக்கடிச் சூழலுடன் இறுதி ஊர்வலம் செல்ல வேண்டிய நிலை வந்தது.
கோட்டாவின் கப்பல் சூராவளியில் சிக்கி தத்தளிக்கும் போது திலித் அதிலிருந்து குதித்துவிட்டார். அதுமட்டுமன்றி, அவர் சிங்கள பௌத்த சுயநல, மேலாதிக்கவாத சிந்தனைகொண்ட குழுக்களுக்கு தலைமை வழங்கினார். ராஜபக்ச முகாமை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியிலும் அவர் பின் நிற்கவில்லை.
இலங்கையில் “டீப் ஸ்டேட்” எனப்படுவது தேசப்பற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக வயிற்றுப் பிழைப்புக்கானதும் மற்றும் சிங்கள-பௌத்த சுயநலவாதத்தை அடிப்டையாகக் கொண்டதுமானதொரு குற்றவாளிக் கும்பலேயாகும்.
மூலம் (சிங்களத்தில்) : Keerthi Ratnayake