07/03/2018
கண்டியின் தற்போதைய நிலை - பாடசாலைகளுக்கு பூட்டு
*ஊரடங்கு சட்டம் நிறைவு
*கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு நேற்று இரவு 8.00 மணி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், தெல்தெனியா, திகன மற்றும் பல்லேக்கலை ஆகிய பிரதேசங்களில் காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக, இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது அங்கு சாதாரண நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினமும் மூடப்படுவதாக மாகாண முதலமைச்சர் சர்த் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டின் சில இடங்களில் நிலவுகின்ற அதிருப்திக்குரிய பாதுகாப்பு நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாம் பிரிவை செயற்படுத்தி, இந்த அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ், அவசர நிலைமைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு, காவற்துறையினருக்கும், முப்படையினருக்கும் உரிய அதிகாரங்களை வழங்கும் வகையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார்.
கடந்த நாட்களில் கண்டி, அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களால் சொத்து மற்றும் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இது முழு நாட்டு மக்களது இயல்பு வாழ்வை பாதித்துள்ளது.
இந்த சம்பங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள், அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் கடுமையாக எடுப்பதற்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தவும், பிரதேசத்தின் அமைதியை நிலைநாட்டவும் காவற்துறையினர், காவற்துறை விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு படையினர், அரச அதிகாரிகள், பிரதேச அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அத்துடன் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ மத குருமார்களும் அமைதியைப் பெணுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
www.solaitv.lk