03/08/2026
பேஸ்புக்கில் எழுதுபவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை!
(Facebook Writers' Survival Guide)
1. ஒரு பதிவை வெளியிடுவதற்கு முன், குறைந்தது மூன்று முறை "இதைப் பதிவிடலாமா, வேண்டாமா?" என்று உங்களையே கேட்டுப் பாருங்கள்.
2. "இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை" என்று குறிப்பிட்டாலும், பெரும்பாலோர் அது யாரையோ குறிப்பிட்டே எழுதப்பட்டது என்று எடுத்துக்கொள்வார்கள்.
3. "நீளமான பதிவு... நேரமிருந்தால் வாசியுங்கள்" என்று தொடங்கினால், முதல் கேள்வியே: "சுருக்கமாகச் சொல்ல முடியுமா?"
4. பதிவைப் படிக்காமல், கருத்துப் பகுதியைப் படித்துவிட்டு கருத்து சொல்லும் உரிமை சமூக ஊடகத்தில் அனைவருக்கும் உண்டு!
5. உங்கள் பதிவின் கருத்துப் பகுதியில் இருவர் சண்டை போட ஆரம்பித்தால், அந்தப் பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டது என்று நினைத்துக்கொள்ளலாம்.
6. உவமை அல்லது உருவகமாக எழுதியிருந்தாலும், குறைந்தது இரண்டு பேர் அதை நேரடிப் பொருளாகவே புரிந்துகொள்வார்கள்.
7. நீங்கள் பதிவிட்ட ஐந்து நிமிடங்களுக்குள், யாரோ ஒருவர் அதையே கொஞ்சம் மாற்றி, தன் பெயரில் பதிவிடுவார். அதற்குக் கீழே வரும் கருத்துகள்: "மாஷா அல்லாஹ்! உங்கள் சிந்தனை வேற லெவல்!" அசல் எழுதிய உங்களுக்கே, "இது நம்ம பதிவுதானா?" என்ற சந்தேகம் வந்துவிடும்.
8. கவிதை எழுதினால் "புரியவில்லை, விளக்கம் சொல்லுங்கள்" என்பார்கள். காதல் கவிதை எழுதினால் "யாரைக் காதலிக்கிறீர்கள்?" என்று கேட்பார்கள். சோகமாக எழுதினால் "வீட்டில் எல்லாம் சரிதானே?" என்று விசாரிப்பார்கள்.
9. ஒரு பெண் எழுத்தாளரின் பதிவுக்குக் கீழ் இரண்டு வகை விமர்சனங்கள் உறுதி: ஒன்று எழுத்தைப் பற்றி; மற்றொன்று, எழுத்தாளரைப் பற்றி.
10. ஆண்களின் புகைப்படங்களில் முகம் மட்டும் கவனிக்கப்படும். பெண்களின் புகைப்படங்களில் முகம், உடை, சிரிப்பு, அமர்ந்த விதம், பின்னணி, நோக்கம், குடும்பம் என அனைத்தும் ஆராயப்படும்.
11. உங்கள் பதிவுக்கு 'லைக்' போடாமல் அமைதியாகச் சென்றவர்கள் கூட, பின்னால் அதைப் பற்றி மணிக்கணக்கில் விவாதித்திருக்கலாம். 'லைக்' என்பது எப்போதும் வாசிப்பின் அடையாளமல்ல.
12. உங்கள் பதிவு யாருக்கும் புரியவில்லை என்றால், "ரொம்ப சிக்கலா எழுதியிருக்கீங்க!" என்பார்கள். எல்லோருக்கும் புரிந்துவிட்டால், "இதுல என்ன பெரிய விஷயம்?" என்பார்கள்.
13. "இன்று மனசு சரியில்லை" என்று எழுதினால் பத்து பேர் ஆறுதல் சொல்வார்கள். "இன்று மனசு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என்று எழுதினால், "என்ன விசேஷம்?" என்று உள்பெட்டியில் விசாரணை தொடங்கிவிடும்!
முடிவில்:
சமூக ஊடகத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அதனால், பொறுப்புடன் எழுதுங்கள், மரியாதையுடன் விவாதியுங்கள், விமர்சனங்களை பக்குவமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.