Meelparvai Media Centre

Meelparvai Media Centre சமூக மாற்றத்திற்கான குரல் - www.meelparvai.net

பாராளுமன்றம், மக்கள், புதிய ஜனாதிபதி – கற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான பாடங்கள்Daily FT இணையத்தள ஆசிரியர் தலையங்கம் - வியா...
22/07/2022

பாராளுமன்றம், மக்கள், புதிய ஜனாதிபதி – கற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான பாடங்கள்

Daily FT இணையத்தள ஆசிரியர் தலையங்கம் - வியாழன், 21 ஜூலை 2022

தமிழாக்கம் : முஹம்மத் பகீஹுத்தீன்.

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்காவை 20 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றம் தெரிவு செய்தது. அவர் 223 வாக்குகளில் 134 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார். பிரதான எதிர் தரப்பு போட்டியாளரான டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளுக்குகள் மாத்திரமே கிடைத்தன.

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் இடைக்கால ஜனாதிபதியை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கும் இரண்டாவது நிகழ்வு இதுவாகும். இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் டி.பி. விஜேதுங்க பிரேமதாசவின் எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அன்று இடக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட விஜேதுங்க அவர்கள் பிரேமதாசவினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகவும் மற்றும் அவரது இயல்பான வாரிசும் ஆவார். அவரது கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் இருந்தது. மேலும் பிரேமதாசாவின் எஞ்சிய பதவிக்காலத்தில் பணியாற்றுவதற்கான சட்டப்பூர்வத்தன்மையும் மக்களின் ஆணையும் அவருக்கு இருந்தது.

2022 ஆண்டில் நிகழ்நதுள்ள விடயங்களும் மிகவும் வித்தியாசமானது என்று குறிப்பிடுவதற்கு இல்லை.

80 ஆண்டுகளாக இலங்கை மண்ணில் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய மிகவும் பழமை வாய்ந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே விக்கிரமசிங்க ஆவார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க கால்நூற்றாண்டு காலம் ஐ.தே. கட்சியின் தலைவராக இருந்த நிலையில் 2020 ஆண்டில் நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தார். அவரது தலைமையின் கீழ் களமிறங்கிய ஐ.தே.கட்சி நாடளாதவிய ரீதியில் பெற்ற வாக்குகள் வெறும் 3 வீதத்திற்கும் குறைவானதாகும். படுமோசமான தோல்வியை சந்தித்த அந்தத் தேர்தலில் ஐ.தே.க.வின் எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. ஆனால் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையின் புண்ணியம் காரணமாக அக்கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது.

ஜனநாயகத்தை மதிக்கும் எந்த கட்சியாக இருந்தாலும், அந்த கட்சியின் தலைவர் இவ்வளவு மோசமான படுபயங்கரமான தோல்வியை சந்திக்க நேரிட்டால் கட்டாயமாக ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதுதான் ஒரு கனவான் அரசியல்வாதிக்கு மரியாதையாகும். இங்கு அதற்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்ட தனியொரு ஆசனத்தை நிரப்புவதற்காக ரணில் விக்கிரமசிங்க தன்னை தானே நியமித்துக் கொண்டார்.

கடந்த மே மாதம், கோட்டாபய ராஜபக்ஷவின் விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு யூ.என்.பி தலைவர் ஒப்புக்கொண்டமை யாருமே எதிர்பார்க்காத விடயமாகும். இதனால் ஜனாதிபதி கோட்டாபயவை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடுமுழுவதும் பொங்கி எழுந்த மக்கள் இயக்கத்தின் உயிரோட்டத்தையே அவர் நிலைகுலையச் செய்து விட்டார்.

ரணிலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இருந்த இறுக்காமான சம்பந்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு கடும் நஞ்சாகவே பட்டது. அவர்கள் 'கோட்டா கோ ஹோம்' என்ற எதிர்ப்புக் கோஷத்துடன் விக்கிரமசிங்கவும் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாகவே முன்வைத்தனர்.

இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் தனது பதிவி காலத்தில் இராஜினாமா செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான ஆணையைப் பெற்ற ராஜபக்ச அவர்கள் மிக மோசமனா முறையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யதன் காரணமாக ஆட்சி செய்வதற்கான சட்டபூர்வ தன்மையை இழந்தவராகக் கருதப்பட்டார்.

இலங்கை மண்ணில் ஜூலை 9 ஆம் திகதியன்று மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்ததை உலகமே அறிந்தது. பொங்கியெழுந்த மக்களின் ஆக்ரோசம், வெறுப்பு கடும் அதிருப்தி காரணமாக, ரணில் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் முற்றிலும் இழந்துவிட்டார் என்பதையே அது நிரூபித்துள்ளது.

தற்போது நாட்டில் பற்றி எரியும் சில கேள்விகள் உள்ளன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவரினால் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஒருவர் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் இருக்கும் போது ஆட்சியதிகாரம் செய்வது தர்மமாகுமா? அது ஒரு கனவான் அரசியலாகுமா? விக்கிரமசிங்கவை தெரிவு செய்ததன் மூலம் மக்கள் எழுச்சி இயக்கத்தின் விருப்பத்தை பாராளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளதா? போராட்டக்காரர்களின் அழைப்புக்கு பாராளுமன்றம் செவிசாய்த்துள்ளதா?

நேற்றைய வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்றத்தின் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், இந்தக் கேள்விகளுக்கான பதில் 'இல்லை' என்பதே திட்டவட்டமான பதிலாகும்.

சந்தேகத்திற்கு இடமின்றி ஜனாதிபதி விக்கிரமசிங்க சட்டப்பிரகாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத்தின் பொறிமுறையும் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையில் சட்டப்படியும் அமைந்தன. ஆனால் சட்டபூர்வதன்மையுடையது என்பதற்கும் சட்டப்படி என்பதற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. பாராளுமன்றம் நேற்று ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளமை இந்த வேறுபாட்டை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆணை கிடையாது. அவர் ஒரு கும்பலின் பிரதிநிதியாக இருந்தன் மூலம் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார். உண்மையில் அவர் பெரும்பான்மையான SLPP வாக்குகளின் பலத்தால் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை பொதுசன முன்னணி (SLPP) எனும் அரசியல் கூட்டணி பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த கடும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஒரு கட்சியாகும். அக்கூட்டணி ஆட்சிக்கு கொண்டு வந்துள்ள ஜனாதிபதியும் மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் அல்ல என்பது தெளிவு.

பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபயவிற்கு பாதுகாவலராக வரக்கூடிய ஜனாதிபதிகள் விக்கிரமசிங்கவாக அல்லது வேறு பிரதிநிதிகளாக இருக்கட்டும், அவர் யாராக இருந்தாலும் பதவியில் இருந்து வெளியேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றே மக்கள் எழுச்சிப் போராளிகள் உறுதியளித்துள்ளனர்.

அமைதியும் ஸ்திரத்தன்மையும் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற இலங்கை தேசத்திற்கு, கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு அவருடைய ஒரு பாதுகாவலராக அமையும் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதால் அந்த இலக்கை அடையவே முடியாது. மக்கள் எழுச்சி இயக்கமானது, ராஜபக்ச கும்பல்களால் தெரிவு செய்யப்படும் அடுத்த வாரிசை நிச்சயமாக எதிர்க்கும். துரிதமான பாரிய ஒரு செயற்திட்டம் அல்லது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கான விரைவான ஒரு திட்டம் கொண்டுவரப்படாத வரை எழச்சிப் போராளிகளின் அழுத்தும் கூடுமே தவிர குறையாது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தீர்க்கமான ஒரு தெரிவுதான் உள்ளது. அது என்ன வென்றால், 19வது திருத்தத்தில் பொதிந்துள்ள கட்டமைப்புகளையும் கட்டுப்பாடுகளையும் மற்றும் ஒழுங்குவிதிகளையும் குறைந்தபட்சம் மீட்டெடுக்கும் வகையில் 21வது திருத்தத்தை விரைவாக நிறைவேற்றுவதாகும். அதுவே தற்போதைய ஸ்திரத்தன்மைக்கான ஒரே வழியாகும்.

அடுத்த தேர்தலில் மக்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வரையில் ஒரு அமானிதமாகவே ஜனாதிபதி ரணில் தனது பதவியை வகிக்கிரார் என்பதை இடைக்கால ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டம் கட்டமான மாற்றம் வேண்டும் என்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற பெரும் கூச்சல் நிறைந்த சூழலில், வீதியில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு சாதகமான சமிக்ஞையை கொடுக்காமல் ஜனாதிபதி விக்கிரமசிங்க வினைத்திறனுடன் ஆட்சி செய்வார் என நம்ப முடியாது. அதுவும் அவர் தனக்கு முன்சென்றவரின் கசப்பான பாடங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினாலே தவிர நிறைவேறாது.

*அரசியல், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வது குறித்து பேராசிரியர் ஜயதேவ உயன்கொட வழங்கிய கருத்துக்கள்.*தமிழ் வடிவம்...
17/07/2022

*அரசியல், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வது குறித்து பேராசிரியர் ஜயதேவ உயன்கொட வழங்கிய கருத்துக்கள்.*

தமிழ் வடிவம் :முஹம்மத் பகீஹுத்தீன்

ஜூலை 14, 2022 அன்று தனியார் இணையச் செய்திச் செனலுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறைப் *பேராசிரியர் ஜயதேவ உயன்கொட வழங்கிய நேர்காணல் இது.* அதில் இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வது குறித்து அவர் முனமொழிந்துள்ள கருத்துக்களை கீழே தருகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் அடுத்த கட்டம் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாகும். அது பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கக் கட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். இந்த வகையான அரசாங்கம் சுமார் ஆறு மாத காலத்திற்கு வரையறுத்த நிகழ்ச்சி நிரலையும், இறைமையையும் கொண்டிருக்கும்.

அதன் செயல்பாடுகள் குறுகிய கால நிகழ்ச்சித் திட்டங்களாக அமைய வேண்டும். எனவே இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் உடன்பாடு காண வேண்டும்.

அரசியல் மட்டத்தில் இடைக்கால அரசாங்கம் எடுக்க வேண்டிய பல முக்கிய நடவடிக்கைகள் உள்ளன. புதிய அரசாங்கம் கொடூரமான நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கு முதலில் நாட்டில் நிலவும் அரசியல் பதட்டத்தைத் தணிக்க வேண்டும்.

இதற்கு ஜனாதிபதியின் ராஜினாமா மட்டுமல்ல, பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டபூர்வத் தன்மை கிடையாது. அவர் மக்கள் விருப்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அல்ல. மேலும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பதை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விரும்பவுமில்லை. அவர் உண்மையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களின்படி ராஜபக்ச குடும்ப நலன்களின் ஆதரவாளராகவும் பாதுகாவலராகவும் தன்னை மாற்றிக்கொண்டவர்.

*எனவே பிரதமருக்கு நம்பகத்தன்மை மட்டுமின்றி சட்டபூர்வத் தன்மையும் இல்லை. எனவே, அவர் ராஜினாமா செய்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்க வேண்டும்.*

பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரை, இலங்கை அரசாங்கம் சில வாரங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரிச் சென்றது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகிவிட்டது.
எனவே ஒரு ஆரம்ப கட்ட உடன்பாட்டுக்கு வந்தாக வேண்டும். நிதி அமைச்சு அல்லது மத்திய வங்கி அதிகாரிகளை கொண்ட இலங்கை தரப்புக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு வேலைத் திட்டம் வரையப்பட வேண்டும்.

இதற்கு நிச்சயமாக அரசியல் ஆதரவு தேவை. அந்த வகையில் இலங்கையில் சட்டபூர்வமான ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் இருக்க வேண்டும். கொழும்பில் ஒரு நிலையான அரசாங்கமும் இருக்க வேண்டும், அது சட்டபூர்வமானதுடன், மக்கள் ஆதரவையும் பெற்றிருக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச கடன் வழங்குபவர்கள் இதைத்தான் எதிர்பார்த்து நிற்கின்றனர். அதன் பிறகு IMF மற்றும் உள்ளூர் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை தொடர புதிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு இருக்க வேண்டும். ஏனெனில் நிறைய தனியார் கடன் வழங்குநர்கள் உள்ளனர். ஆனால் இலங்கை தனது கடன்களைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் உள்ளதால், கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் சட்டபூர்வமான மற்றும் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய நிலையான அரசாங்கம் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது இலங்கை கவனத்திற் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் .

அதே சமயம், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் மட்டும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைத்து விடாது. அதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம்.

முதலாவது: கடன் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கென்று பிரத்யேகமாக சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் இலங்கைக்கு நிதியுதவி வழங்காது.

மாறாக அது என்ன செய்யும் என்றால், தனியார் கடனாளர்களுடன் இலங்கையின் கடனை திருப்பிச் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும். மேலும் ஐஎம்எப் இடம் பல வருட கடன் மீட்பு திட்டமும் உள்ளது .

இரண்டாவது: சர்வதேச நாணய நிதியத்தில் உதவி பெறுவதற்கு ஏறாளமான நிபந்தனைகள் உள்ளன. அவற்றை முன்கூட்டியே செயல்படுத்துமாறு கட்டாயக் கோரிக்கையாக முன்வைக்கும்.

எடுத்துக்காட்டாக, அரசாங்கம் பொதுச் செலவினங்களைக் குறைத்து வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும். மேலும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அதிகரிக்கும் புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்தும். பொதுத்துறையில் வேலைவாய்ப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கும் .

மேற்கூறிய நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக மிகப் பெரிய சமூக விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில், இதுவரை யாரும் பேசாத மிகக் கடுமையான சமூக நெருக்கடியை இலங்கை அனுபவித்து வருகிறது.

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் வறுமையின் அவலங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. மற்றும் மக்கள் வேலைகளையும் வருமான மூலங்களையும் இழந்துள்ளனர். அதனால் நாட்டில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பை நிறையவே காணுகிறோம். மேலும் சமூக நெருக்கடிகள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் எழுச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, IMF கொத்து கொத்தாக முற்படுத்தும் நிபந்தனைகள் சமூக நெருக்கடியை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது நாட்டில் அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும். அதனால் சமாளிப்பதற்கு மிகவும் கடினமான நெருக்கடி நிலையை இலங்கை எதிர்கொள்ள வேண்டி வரும்.

எந்தவொரு இடைக்கால அரசாங்கமும் சில ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்த பின்னர் கொழும்பில் நிலையான அரசாங்கம் உருவாக வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்த பாராளுமன்றம் சட்டபூர்வ தன்மையை இழந்து நிற்கிறது. காரணம் தற்போதுள்ள பாராளுமன்றம் ஜனநாயக வழியில் வந்ததல்ல. இது வடிகட்டிய எதேச்சதிகார சர்வாதிகாரியை தெரிவு செய்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றமாகும்.

எனவே, அத்தகைய பாராளுமன்றத்தால் ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியாது. இலங்கைக்கு ஒரு புதிய பாராளுமன்றம் தேவை, காரணம் மக்கள் கருத்து கடுமையாக மாறியுள்ளது. 2019 இல் இருந்த நிலைமை இப்போது இல்லை.

எனவே இலங்கையின் தற்போதைய பாராளுமன்றம் ஆளும் கட்சியின் முழுமையான பெரும்பான்மையுடன் இருப்பதால், நாட்டு மக்களின் உண்மையான கருத்தையும் அரசியல் சமநிலையையும் பிரதிபலிக்கவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ மாட்டாது. எனவே நாட்டில் நிலவும் உண்மையான அரசியல் சமநிலையையும் மக்கள் கருத்தையும் பாராளுமன்றம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய பாராளுமன்றம் ஒன்று தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

மற்றுமெரு சாரார், புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப் படுத்தும் வகையில் அதன் திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார்கள்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், எந்த ஒரு அரசாங்கமும் சில மாதங்களில் செல்வாக்கற்றதாகிவிடும். அதாவது ஒவ்வொரு முறையும் மக்கள் கருத்து மாறும்போது அவர்கள் மீண்டும் தேர்தலுக்கு செல்ல வேண்டும். இதுதான் வாடிக்கையாய் போயுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வழி உள்ளது. அதாவது இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பொருளாதார மீட்சியின் சுமையை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மீது சுமத்தாத சீர்திருத்தப் பொதிக்காக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தொடர்ந்து காணப்படும் பிரச்சனை என்னவென்றால், IMF அல்லது உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்கள் இலங்கைக்கு ஆணையிடும் விதிமுறைகளையும் நிபந்தனை பொதிகளையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக்கொள்வதாகும்.

ஆதரவையும் உதவியையும் கோரும் இலங்கை, நிபந்தனைகளை விதிக்கும் நிலையில் இல்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதையே எதிர்பார்க்கிறது.

கடந்த ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியை சந்தித்த பொருளாதார பிரதிநிதிகளின் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் அந்த சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் இல்லை. அவர்களோடு எதிர் வாதம் செய்வதும் இல்லை. இந்நிலை மாற வேண்டும்.

புதிய அரசாங்கம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் ஒரு புதிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். மற்றும் மறைமுக வரிகள் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீது பொருளாதார மீட்சியின் சுமையை சுமத்துவது உண்மையில் நிலைமையை படுமோசமாக்கி விடும். ஏனெனில் மக்கள் தொழில்களை இழந்துள்ளனர். உண்மையான வருமானம் பாரிய அளவில் அளவில் குறைந்துள்ளது.

இலங்கைக்கு ஒரு வலுவான மனிதாபிமான நியாயம் உள்ளது. எனவே பொருளாதார வீழ்ச்சியிலிருந்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைப் பாதுகாக்கும் கொள்கைகளை வகுத்து வலுவான ஆதாரங்களுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக வேண்டும்.

தற்போதைய இந்த இக்கட்டான காலகட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு ஆளுமை தான் இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க பொருத்தமானவர் என்று பெருமளவிலான மக்கள் நினைக்கிறார்கள் அல்லது நம்புகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்தை எதிர் கொள்வதற்கான திறனும் மற்றும் சர்வதேச அமைப்புகளை அணுகுவதற்கான சாமர்த்தியமும் உள்ளவர் என ஊடகங்களும் சில அரசியல் கட்சிகளும் ஒரு பெரிய கட்டுக்கதை மக்கள் மனங்களில் உருவாக்கியுள்ளன.

ஆனால் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் பக்கம் உள்ள தொழில்முறை பொருளாதார வல்லுநர்களிடம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் நிலைப்பாடுகளை சவால் விட போதுமான புலமையும் தகுதியும் இல்லை. எனவே புதிய அரசாங்கத்தில் உள்ள நிதியமைச்சர் இலங்கையின் பொருளாதார கொள்கை வகுப்பாளர்களுக்கு அரசியல் வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.

போராட்டக்காரர்கள் வலியுறுத்தும் ஆட்சி மாற்றக் கோ‌ரி‌க்கையில் மூன்று முக்கிய மாற்றத்துக்கான நிலைகள் உள்ளன.

முதலாவதாக, தற்போது அதிகார வெறிபிடித்த ஊழல் அரசியல் கும்பல்களினால் நாடு நடத்தப்படுகிறது.
சட்டத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் முன்னிலையில் வகைகூறும் பொறுப்பற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு பொருத்தமற்ற அரசியல் அமைப்பாகும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதிக ஜனநாயகத்துடன் கூடிய மக்கள் சார்ந்த அரசியல் அமைப்பு உருவாக வேண்டும்.

இரண்டாவதாக ஆட்சி மட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள். இலங்கையில் ஜனநாயகமற்ற, ஊழல் மற்றும் பொறுப்புக் கூற முடியாத ஆட்சி முறை உள்ளது. அது முடிவுக்கு வர வேண்டும். பின்னர் சிறுபான்மையினர் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்படுவது இல்லாமலாக்கப்பட வேண்டும். ஒற்றைப் பெரும்பான்மை நாடாக மாறியுள்ள இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றம் வர வேண்டும். சிறுபான்மையினருடன் அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டு ஒவ்வொரு தரப்பும் சமமாக நடத்தப்பட வேண்டும்.

மூன்றாவது நிலை ஜனநாயகம் குறித்த நிலைப்பாடாகும். ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையின் தற்போதைய பிரதிநிதித்துவ ஜனநாயக முறையை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பாராளுமன்றம் சென்றுள்ள அரசியல் கட்சிகள் மக்களின் அபிலாஷைகளை விட்டும் வெகு தொலைவில் இருப்பதாகவும், ஊழல் நிறைந்த அமைப்பினால் இயங்குவதாகவும் கூறுகின்றனர்.

உண்மையில், முழு ஜனநாயக அமைப்பிலும் ஊழல் புற்று நோயாக படர்ந்துள்ளது. தேர்தல் செயல்முறையும் சிதைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் வழங்கிய ஆணையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.

எனவே தற்போதைய பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அனைத்து பலவீனங்களையும் குறைபாடுகளையும் இரண்டு வழிமுறைகளில் தீர்ப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்கள்.

முதலாவது இலங்கையின் தற்போதைய பிரதிநிதித்துவ ஜனநாயக முறையின் குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்தல்.

இரண்டாவது நேரடி ஜனநாயகம் மற்றும் மக்கள் இறையாண்மை ஆகியவற்றின் கூறுகளை ஜனநாயக செயல்முறையில் அறிமுகப்படுத்தல்.

அதனால்தான் அவர்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நேரடி ஜனநாயகத்துடன் இணைக்க விரும்புகிறார்கள், அதற்கு அரசியலமைப்பு மாற்றம் மட்டுமல்லாமல் புதிய அரசியலமைப்பு மாற்ற சிந்தனையும் தேவைப்படுகிறது.

பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நெருக்கடியை வரையறுத்துக் கொள்வது எவ்வாறு என பழமைவாத சிந்தனையில் உள்ள அரசியல்வாதிகளால் இயலாமல் இருப்பதும் இலங்கையின் அரசியல் பிரச்சினையில் உள்ளதாகும்.

பிரதிநிதித்துவ ஜனநாயக முறையின் மூலம் நேரடி ஜனநாயகத்தின் சில முக்கிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பதும் மொத்த மாற்றத்தில் உள்ளடங்கும்.

Address

Focus Media (Pvt) Ltd
Colombo
012

Alerts

Be the first to know and let us send you an email when Meelparvai Media Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meelparvai Media Centre:

Share

Meelparvai Newspaper

Meelparvai Newspaper, Sri Lanka

20 Years Journey