04/11/2025
ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சி - 2025
✍️ எஸ். சினீஸ் கான்
எதிர்வரும் நவம்பர் 9 முதல் 12 வரை சவூதி அரேபியா தனது ஐந்தாவது ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சியை “மக்காவிலிருந்து உலகம் நோக்கி” என்ற தலைப்பில் ஜித்தா சூப்பர்டோம் (Jeddah Superdome) அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.
இந்த சர்வதேச நிகழ்வு, சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தினால் (Ministry of Hajj and Umrah) ஏற்பாடு செய்யப்படுவதுடன், உலகம் முழுவதிலுமிருந்து ஹஜ் பயணிகளை சேவையாற்றும் முறைமைகளை மேம்படுத்துவதில் சவூதி அரசின் தொடர்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த உயரிய முயற்சி, இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவூதி அரேபியாவின் மன்னருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சௌத் அவர்களின் கருணைமிக்க தலைமையிலும், இளவரசர் முகம்மத் பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சௌத் அவர்களின் புதுமைமிக்க பார்வையிலும் முன்னெடுக்கப்படுகிறது.
இவர்களின் புத்திசாலித்தனமான வழிநடத்தல் மற்றும் Vision 2030 இலக்குகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பு, ஹஜ் மற்றும் உம்ரா துறையை உலக தரத்துக்கு உயர்த்தியுள்ளது.
இந்த மாநாடு, ஹஜ் சேவைகள் துறையில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய தீர்வுகளை ஆராயவும் ஒரு மேடை அமைக்கிறது. மேலும, மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் ஹஜ் பயண அனுபவத்தின் தரத்தை உயர்த்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
மொத்தம் 52,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இக்கண்காட்சியில் 13 துறைகளிலிருந்து 260-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. சுற்றுலா, சுகாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 95 சர்வதேச நிபுணர்கள் 80 கலந்துரையாடல்கள் மற்றும் 60 பணிமனைப் பயிற்சிகளில் பங்கேற்று, எதிர்கால சவால்களுக்கு 100-க்கும் மேற்பட்ட புதுமையான தீர்வுகளை முன்வைக்க உள்ளனர். 150000 மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், இந்நிகழ்வில் சில முக்கிய புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்துகிறது. அவற்றில் “E’asha-thon” எனப்படும் உணவு விநியோக முறைமையை நவீனப்படுத்தும் திட்டம், “Humanizing the Holy Sites” எனும் புனித இடங்களில் பயணிகளுக்கான வசதிகளை மனிதநேயமான முறையில் மேம்படுத்தும் முயற்சி, மற்றும் “Sustainable Solutions” எனும் சுற்றுச்சூழல் நட்பு ஆற்றல், சீரான வள மேலாண்மை போன்ற நிலைத்தன்மை முயற்சிகள் அடங்கும்.
மேலும், “Innovation Zone” பகுதியில் 15 தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் கூட்ட நெரிசல் முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு திறனை மேம்படுத்தும் தொடர்பில் கலந்துரையாடப்படும்.
மாநாட்டின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன. இவை ஹஜ் துறையில் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, சேவைத் தரம், மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மாநாடு மூன்று முக்கிய கருதுகோள்களை மையமாகக் கொண்டுள்ளது - டிஜிட்டல் மாற்றம் (Digital Transformation), செயல்முறை முகாமைத்துவம் (Smart Management) மற்றும் செயற்பாட்டு நிலைத்தன்மை (Operational Sustainability).
இவை அனைத்தும் சவூதி அரேபியாவின் Vision 2030 மற்றும் Pilgrim Experience Program இலக்குகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் ஹஜ் பயணத்தை மேலும் எளிதாக்கி, பாதுகாப்பானதும் ஆன்மீகத்தன்மையுடனும் ஆக்குவது இதன் பிரதான நோக்கம்.
“மக்காவிலிருந்து உலகம் நோக்கி” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சி, மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகம்மத் பின் சல்மான் ஆகியோரின் முன்னோக்கிய பார்வை, தலைமைத் திறன், மற்றும் புனித ஹஜ் பயணத்தின் அனுபவத்தை உயர்த்தும் அவர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் உலகளாவிய ஆன்மீக மற்றும் தொழில்நுட்பச் சந்திப்பாக அமைய உள்ளது.