04/05/2023
ஏறாவூர் புத்தக கொண்டாட்ட வேலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நண்பர்கள் பலர் புத்தக கொண்டாட்டம் தவிர்த்து ஏறாவூரில் என்ன விடயங்களைப் பார்க்கலாம், என்ன ஸ்பெஷல் எனக் கேட்கிறார்கள். குடும்பத்துடன் வருகிறோம் புதிதாக ஏதாவது இருந்தா இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.
புத்தக கொண்டாட்டத்துடன் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களையும் அமைத்துள்ளோம். பத்து நாட்களும் பல நிகழ்வுகள் அரங்கேற்றப்படவிருக்கின்றன. கூத்து, கூத்துப் பாடல்கள், பறைமேளக்கூத்து, கோலாட்டம், சீணடி, பக்கீர்பைத், பெரெஹெரா நடனம், பட்டிமன்றம், வீதிநாடகம், பாடல், நாடகம், ஆய்வுகள், இலக்கிய நிகழ்வுகள் என ஆயிரத்தெட்டு விடயங்கள் உள்ளன. புத்தகங்கள் வாங்காவிடினும் ஆறுதலாக ஒரு கதிரையில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். இம்மைதானத்துக்கு அருகாமையில் அழகான வாவி ஒன்று உள்ளது. சிறந்த பூங்கா உள்ளது. படகு சவாரி செய்யலாம். மருத மரத்திற்கு கீழ் அமர்ந்து காற்றுவாங்கலாம். பலர் தரிசித்துச் செல்கின்ற இயற்கை எழிலான ஆறும் பூங்காவும் உண்டு. மைதானத்துக்கு அருகாமையில் நானூறு வருடங்கள் பழமைவாய்ந்த பள்ளிவாயல் என தொல்பொருள் திணைக்களத்தால் பிரகடணப்படுத்தப்பட்ட பழைய பள்ளிவாயலின் அம்சங்களை அப்படியே கொண்ட ஆற்றங்கரை பள்ளிவாயல் உள்ளது.
புன்னைக்குடா, சவுக்கடி என இரண்டு அழகான கடற்கரைகள் உள்ளது. புன்னைக்குடா குளிப்பதற்கு வசதியானது. ஆழம் குறைந்தது. அலைகள் ஆர்ப்பரிப்பதில்லை. சவுக்கடி இதற்கு நேர்மாறானது. ஆனால் இரண்டுமே ஓய்வெடுப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் பொருத்தமான இடம்.
இடங்கள் ஒரு புறமிருக்கட்டும். சாப்பாட்டுக்கு வருவோம். மரவள்ளிக்கிழங்கை பொரித்து அதற்குள் பொரித்த இறைச்சி, நுரையீரல், குடல் போன்றவற்றையும் பாபத் கறி எனப்படும் ஆடு மாட்டுக்குடல்களின் கறியையும் ஊற்றி தாலிப்பு, வெங்காயம்,தூள் என எல்லாவற்றையும் போட்டு சாப்பிடத் தருவார்கள். மிக அருமையாக இருக்கும். அவ்வாறான டேஸ்ட் கடைகள் அதிகம் உண்டு. மேலதிகமாக கடலைக் கரத்தை எனப்படும் ஒரு அம்சமும் உண்டு. அவித்த கடலை, பருப்பு, கிழங்குச் சீவல், தூள், எல்லாம் போட்டு ஒரு பெரிய இரும்பு கப்பில் போட்டு அடித்து நொருக்கித் தருவார்கள். மிக மிக ருசியாக இருக்கும்.
வழமை போன்று நான்கு விடயங்களுக்கு ஏறாவூர் பேர் போனது. கஜு எனப்படும் முந்திரியம்பருப்பு, நெய், தயிர் மற்றும் பனையோலைப் பொருட்கள். மேலுள்ள மூன்றுக்கும் இலங்கையிலே ஏறாவூர் பேர்போனது. அதனை வாங்கிச் செல்லலாம். சாப்பிடலாம். ஏதாவது செய்யலாம்.
18 கிலோ மீட்டர் தூரத்தில் பாசிக்குடா உள்ளது. வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசங்கள் உள்ளது. எதிர்ப்புறமாக 14 கிலோமீட்டரில் மட்டக்களப்பு உள்ளது. அதிலிருந்து 06 கிலோமீட்டர் தூரத்தில் காத்தான்குடி உள்ளது. மிக அருகில் கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளது.
இஸ்லாமிக் புக் ஹவுஸ், குமரன் பதிப்பகம், சமுத்ரா புத்தக நிலையம், பேஜஸ் புத்தக நிலையம், ஃப்ளாஸ் புக்ஸ், பாத்திமா புத்தக கடை, Books for children's, அல் அமீன் புத்தக நிலையம் போன்றவை அமையப்பெற்றிருக்கும். தேவையான புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விடயங்களை Eravur Book Celebration பக்கம் ஊடாக பார்வையிடலாம்.
வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்.