09/11/2025
அணிநடை எருமை!
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வட பகுதியில் அமைந்துள்ளது மாராசோ தீவு (Marajó Island). இத்தீவில் மழைப்பொழிவு அதிகமென்பதால் சாலைகளில் சேறும் சகதியும் சில மாதங்களுக்கு நிறைந்திருக்கும். எனவே இத்தீவிலுள்ள காவல்துறையினர் தம்முடைய ரோந்துப் பயணங்களுக்கு (patrol) மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை; சேற்றிலும் சகதியிலும் நடப்பதில் வல்லவையான எருமைகளையே பயன்படுத்துகின்றனர். மாராசோ தீவிலுள்ள சோரே (Soure) எனும் நகரத்தைச் சேர்ந்த காவல்துறையினர் இருவர் எருமைமீது கம்பீரமாகப் பயணிக்கும் காட்சியைத்தான் படத்தில் காண்கிறீர்கள். 🙂
பயணத்துக்குப் பெயர்பெற்ற குதிரையைப் பயன்படுத்தாமல் எருமையை ஏன் இவர்கள் பயன்படுத்துகின்றனர்? 🤔
குதிரைகள் விரைந்து செல்லக்கூடியவை; ஆனால், அவற்றின் குளம்புகள் குறுகலாக (narrow hooves) இருப்பதால் சேற்றில் பயணிக்கும்போது அதில் சிக்கிக்கொள்ள வாய்ப்புண்டு; ஆனால் எருமைகளின் குளம்புகள் அகலமானவை; விரிந்தவை; (broad, splayed hooves); எனவே சேற்றில் சிக்கிக்கொள்ளாமல் பயணிக்க வல்லவை. அதனால்தான் காவல்துறையினர் எருமைகளில் பயணிக்கின்றனர். இத்தீவுவாழ் பொதுமக்களும்கூடச் சேறும் சகதியும் நிறைந்த சாலைகளைக் கடக்க எருமைகளைப் பயன்படுத்துகின்றனர்.
எருமைப் பயணமென்பது இந்தத் தீவின் அடையாளமாகவே மாறியிருப்பதால் சுற்றுலாப் பயணிகளையும் இஃது ஈர்ப்பதாகத் தெரிகின்றது. எனவே எருமையால் இத்தீவின் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. இங்கு மக்கள்தொகையைவிட எருமைகளின் தொகை அதிகமாம்! 🙂
எருமைகள் தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவையல்ல. அப்படியானால் இவை இத்தீவுக்கு வந்ததெப்படி எனும் வினா எழுகின்றது அல்லவா?
இந்த எருமைகள் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து இத்தீவுக்கு 19ஆம் நூற்றாண்டில் இறக்குமதியாகியிருக்கின்றன.
எருமைகளை இத்தீவுவாசிகள் வரவழைத்ததென்னவோ உழவுத்தொழிலுக்கும் எருமைகளிலிருந்து கிடைக்கும் பால், இறைச்சி, தோல் போன்றவற்றைப் பயன்கொள்வதற்கும்தான்! ஆனால் இவற்றின் தடையற்ற ’நடை’த்திறனைக் கண்டதும் சதுப்புநிலப் பகுதிகளைக் கடப்பதற்கான வாகனமாகவும் இவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
*****
எருமைகளை இத்தீவுக்கு நல்கிய நாடுகளுள் ஒன்று நமது பாரததேசம் எனும்போது நம்மவர் எருமையின் பெருமையை அறியாதிருப்பரோ?
எருமைக்கும் நமக்குமான தொடர்பு நெடியது. சங்க இலக்கியமான ஐங்குறுநூற்றில் மருதநிலத்து விலங்கான எருமையின் செயற்பாடுகளை விரிவாகப் பேசும் வகையில் ’எருமைப் பத்து’ என்றே ஒரு பத்து இருக்கின்றது. அதிலொரு பாடல் எருமையின் நடையை ’அணிநடை’ அதாகப்பட்டது ’அழகான நடை’ என்று வருணிக்கின்றது. நோட் திஸ் பாயிண்ட்!😁
”அழகுநடை போடும் எருமையானது ஆடித் திளைத்த சேற்றில் நெய்தலும் ஆம்பலும் பூத்திருக்கும் கழனிகள் கொண்ட ஊரனின் மகள்” என்று தலைவி இதில் சுட்டப்பெறுகின்றாள்.
”அணிநடை எருமை ஆடிய அள்ளல்
மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்
கழனி ஊரன் மகளிவள்…” (ஐங். 96)
தமிழ்நாட்டுச் சிறுவர் எருமைமீது ஏறிக்கொண்டு தம் தொழில்களை மேற்கொள்ளச் செல்லும் வழக்கம் அந்நாளில் இருந்திருக்கின்றது (பழைய தமிழ்த்திரைப்படங்களில்கூட இக்காட்சிகளைக் காணலாம்). அவ்வாறு சிறுவர்கள் எருமைமீது அமர்ந்துசெல்லும் காட்சியைக் கண்டார் மருதன் இளநாகனார் எனும் சங்கப் புலவர். 🧐அவருக்கு எருமை, குன்றுபோலவும் அதில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் மந்திகள்போலவும் காட்சியளித்திருக்கின்றனர். 😁அக்காட்சியைப் பாட்டாகவே பாடிவிட்டார் புலவர்.
”…………..திரிமருப்பு எருமை
மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம்
சிறுதொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத்
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்.” (அகம். 206)
வீரத்தோடும் எருமையை இணைத்துப் பார்த்திருக்கின்றது தமிழ் மரபு. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடாமல் நின்று, அஞ்சியோடும் தன் வீரர்களை எருமைபோலப் பாதுகாத்து நிற்பவனின் வீரத்தை ’எருமை மறம்’ என்கிறது தமிழ். 💪
காரான், மையான், மை, மேதி, மூரி எனப் பல பெயர்கள் எருமையைக் குறிப்பதற்கு நம்மிடமிருக்கின்றன.
கர்நாடகத்திலுள்ள மைசூரை நாமறிவோம். எருமையூர் என்ற பெயரே மையூர் என்றாகிப் பின் மைசூர் என்றானதாகச் சொல்லப்படுகின்றது. எருமைகள் மிகுந்த பகுதியாக ஒருகாலத்தில் இவ்வூர் இருந்ததனால் இப்பெயர் பெற்றிருக்கவேண்டும். 😇
’எருமை வெளியனார்’ எனும் பெயரில் சங்கப் புலவரொருவர் இருந்திருக்கின்றார். இங்கே ’எருமை’ என்பது அவரது ஊர் எனக் கருதப்படுகின்றது.
ஆமாம்…இத்துணைச் சிறப்புவாய்ந்த அணிநடை எருமையை நம் மக்கள் எமனேறும் வாகனமாக்கியது ஏன்?🤔
பயணிக்கும் பாதை எத்தனை கடினமாக இருப்பினும் எருமை இருந்தால் எமன் அதிலேறிக் கவலையில்லாமல் கடந்துசென்று உயிரைக் கவர்ந்துவிடலாம் எனும் எண்ணத்தால் இருக்குமோ?!😎
~மேகலா இராமமூர்த்தி
#மாராசோ
́
#அணிநடைஎருமை
#மைசூர்
#எருமைமறம்
#எருமைவெளியனார்