17/05/2026
இதய பலவீனம் கொண்டவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது.
ஒருவேளை நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பவராகவோ அல்லது எதையும் மிகவும் சென்சிட்டிவாக எடுத்துக் கொள்வவராகவோ இருந்தால், இந்த திரைப்படம் உங்களை ஆழமாக பாதிக்கக்கூடும்.
மலையாள திரைப்படங்களுக்கு உலகளவில் பெரிய வர்த்தக சந்தை இல்லாவிட்டாலும், அதை ரசிப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில், வலுவான கதைக்களத்துடன் உருவான சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இந்த படம் திகழ்கிறது. பெரும்பாலானோருக்கு அதிகம் தெரியாத, ஆனால் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு தரமான திரைப்படம் இது.
🎬 இரட்ட (Iratta)
2023 பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான இந்த மலையாள திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். பின்னர் மார்ச் 3ஆம் தேதி “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியாகிய இந்த படத்தை தமிழ் டப்பிங்கில் பார்த்து ரசித்தேன்.
இந்த திரைப்படத்தில் பிரமோத் மற்றும் வினோத் என்ற இரட்டை சகோதரர்களாக ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார்.
கதை:
பிரமோத் மற்றும் வினோத் இருவரும் இரட்டை சகோதரர்கள். சிறு வயதில் தந்தையின் மோசமான நடத்தையால் குடும்பம் சிதறி, பிரமோத் தாயிடமும் வினோத் தந்தையிடமும் பிரிந்து வளர்கிறார்கள்.
காலப்போக்கில் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக மாறுகிறார்கள். அதில் பிரமோத் உயரதிகாரியாகவும், வினோத் அவரின் கீழ் பணிபுரியும் அதிகாரியாகவும் இருக்கிறார்.
ஒரு நாள் காவல் நிலையத்தில் விழா நடைபெறவிருக்கும் நேரத்தில், வினோத் மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடக்கிறார்.
அது தற்கொலையா? கொலையா?
கொலை என்றால் யார் செய்தது?
வினோத்தின் குணாதிசயம் என்ன?
அவருக்கு எதிராக இருந்தவர்கள் யார்?
இந்த சம்பவத்தில் பிரமோத்துக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா?
இப்படி பல கேள்விகளுக்கான பதில்களே படத்தின் மீதிக்கதை.
விமர்சனம்:
ஒரு அருமையான கதையை சரியான வேகத்திலும் பதட்டத்திலும் கொண்டு சென்று, இறுதி வரை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறார் இயக்குநர் ரோஹித்.
ஜோஜு ஜார்ஜ் ஏற்கனவே “ஜோசப்”, “நாயட்டு” போன்ற திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் முற்றிலும் வேறுபட்ட உடல்மொழி மற்றும் நடிப்பால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.
“குரூரம், கோபம், அதிகாரம், திமிர்” நிறைந்த வினோத் கதாப்பாத்திரத்தையும், “பொறுமை, நிதானம், புத்திக்கூர்மை” கொண்ட பிரமோத் கதாப்பாத்திரத்தையும் அவர் மிகத் தெளிவாக வேறுபடுத்தி நடித்துள்ளார்.
குறிப்பாக படத்தின் கடைசி அரைமணி நேர காட்சிகள், இறுதியில் உருகி அழும் தருணங்கள், இறந்து கிடக்கும் சகோதரனை பார்க்கும் காட்சிகள் — இவை அனைத்திலும் ஜோஜு ஜார்ஜின் நடிப்பு மனதை கலங்க வைக்கிறது.
அதேபோல் அஞ்சலி, சுனில் சூர்யா, சாபுமோன் அப்துசமத், அபிராம் ராதாகிருஷ்ணன், ஸ்ரீந்தா, ஆர்யா சலீம், ஷெபின் பென்சன், ஸ்ரீஜா, ஜீத்து அஷ்ரப் உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும், விஜயின் ஒளிப்பதிவும் படத்தின் பதட்டத்தை மேலும் உயர்த்துகிறது.
படம் பார்க்கலாமா?
திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் திரைப்படங்களை விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை ரசிப்பார்கள். குறிப்பாக ஜோஜு ஜார்ஜின் இயல்பான மற்றும் வித்தியாசமான நடிப்பை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.
மொத்தத்தில், “இரட்ட” திரைப்படம் இறுதி வரை “என்ன நடந்தது?” என்ற கேள்வியுடன் பார்வையாளர்களை கட்டிப்போட்டு, கடைசியில் மனதை கனக்கச் செய்து முடிகிறது.