01/06/2026
முறையற்ற சிகை அலங்காரங்களால் மாணவர்களின் கல்வி பாதிப்பு:
சிகை அலங்கார நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?
கந்தளாய் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள சில சிகை அலங்கார நிலையங்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளால், பாடசாலை மாணவர்களின் கல்வியும் ஒழுக்கமும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மைக் காலமாக கந்தளாய் நகர் மற்றும் கிராமப்புறங்களில் இயங்கும் சில சிகை அலங்கார நிலையங்கள், பாடசாலை விதிமுறைகளுக்கு முரணான ‘ட்ரெண்டிங்’ (Trending) பாணியிலான சிகை அலங்காரங்களை மாணவர்களுக்கு செய்து வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாகரீகம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சிகை அலங்காரங்கள் காரணமாக, மாணவர்கள் பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் எச்சரிக்கப்பட்டுத்தி , பாடசாலைக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பெற்றோர்கள், “
இன்றைய மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய வயதில் தேவையற்ற நாகரீக மோகத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதற்கு சில சிகை அலங்கார நிலையங்களின் செயற்பாடுகளும் காரணமாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன,” எனத் தெரிவித்தனர்.
மேலும், முறையற்ற வகையில் முடி வெட்டப்பட்ட மாணவர்களை பாடசாலை ஒழுக்க விதிமுறைகளுக்கு ஏற்ப மீண்டும் திருத்துவதற்காக அதே சிகை அலங்கார நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு செல்லும் போது மீண்டும் முழுமையான கட்டணம் அறவிடப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில், இவ்வாறான கூடுதல் செலவுகள் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வலயக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?
இந்த விவகாரத்தில் பிரதேச சபை மற்றும் வர்த்தக சங்கங்களின் தலையீட்டுடன், கந்தளாய் வலயக் கல்வி அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.
மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வி சூழலைப் பாதுகாக்கும் நோக்கில்,
அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சிகை அலங்காரம் தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கான ஒழுக்க விதிமுறைகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து, பாடசாலை மாணவர்களுக்கு விதிமுறைகளுக்கு முரணான சிகை அலங்காரங்களைத் தவிர்க்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
எனவே, மாணவர்களின் ஒழுக்கத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கந்தளாய் பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம் AI