08/07/2026
தாய்லாந்தில் ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்க முத்திரை மோதிரம் மீட்பு!
தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ள ‘டான் யாய் தாங்’ (Don Yai Thong) என்ற கிராமத்தில் நடைபெற்ற அகழாய்வில், சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பிராமி (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்கள் மிக நெருங்கிய வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்பதற்கு இது மிக முக்கிய வரலாற்றுச் சான்றாக அமைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நெல் வயல் ஒன்றில் வெண்கல முரசுத் துண்டுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து தொல்லியல் துறை கடந்த பிப்ரவரி முதல் அங்கு தீவிர அகழாய்வை மேற்கொண்டு வருகிறது.
இத்தளம் சுமார் 1,500 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக்காலத்தைச் சேர்ந்ததாகும். இங்கு இதுவரை 8 மனித எலும்புக்கூடுகள் மற்றும் பழங்கால ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள 4-ஆம் எண் எலும்புக்கூட்டின் அருகில் இரண்டு தங்க மோதிரங்கள் கிடைத்தன. அதில் ஒன்றில் பழங்கால இந்திய எழுத்து வடிவமான பிராமி (தமிழி) எழுத்துக்கள் தலைகீழாகச் செதுக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் கல்வெட்டு ஆய்வாளர்களின் முதற்கட்ட ஆய்வில், இந்த மோதிரத்தில் ‘புசரகிதாஸ’ (பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்) எனப் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழறிஞர்களின் கூற்றுப்படி, மெழுகிலோ அல்லது களிமண்ணிலோ அச்சடிப்பதற்காகத் தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள அந்தத் தமிழ்ப் பெயர் ‘அளரி வைரதன்’ என்பதைக் குறிக்கிறது. இதில் ‘அளரி’ என்பது வளமான மருத நிலத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல்லாகும்.
இந்த மோதிரம் பண்டைய இந்தியாவின் வணிகர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெரும் வணிகருடையதாக இருக்கலாம் எனத் தாய்லாந்து தொல்லியல் துறை கருதுகிறது. ஏற்கனவே தாய்லாந்தின் கிராபி மற்றும் சூம்போன் ஆகிய கடலோரப் பகுதிகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு பண்டைய கடல்வழி வணிகப் பாதையில் தமிழர்களின் ஆதிக்கத்தை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது