10/07/2021
Muhammed Nowfas
அநியாயம்; வேரற்ற மரம் போன்றது.
நந்தவனத்தை உடையவரும்,அதில் மலர்ந்த மொட்டுவும் இணைந்து பயணித்த முட்கள் நிறைந்த கரடு,முரடான பாதை.
"அவர்களை நோக்கி, அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது.அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்.
விசுவாசிகள் யாவரும் அல்லாஹ்வையே நம்பியிருக்கவும்.என்று (நபியே) கூறுவீராக."
(அல்-குர்ஆன்,09: 51)
“தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் அல்லாஹ் மிக்க மேலாகத் தீர்ப்பளிப்போனாக இல்லையா?”
(அல்-குர்ஆன்,95:08)
பெருமதிப்புக்குரிய உஸ்தாத் அவர்களே,
மேற்படி வலிமைமிக்க வல்லோனின் உயிரோட்டமான ஆறுதல் வார்த்தைகளையும்,எனது பிரார்த்தனையையும் காணிக்கையாக உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
“இன்னும் அவனிடமே மறைவானவற்றின் சாவிகள் இருக்கின்றன;அவற்(றிலுள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியார்;மேலும் கரையிலும்,கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான்;அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை;பூமியின் (ஆழத்தில்)அடர்ந்த இருள்களில் (புதைந்து) கிடக்கும் வித்தும்,பசுமையானதும்,உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.
(அல்-அன்ஆம்:59)
இந்த வசனமே உங்களின் ஒவ்வொரு உரையின் ஆரம்பத்திலும் கம்பீரமாக உச்சரிக்கப்படும்.
ஆக உங்கள் கைது பற்றிய ஞானமும்,தெளிவும் அவனிடம் மட்டுமே உள்ளது.
யா அல்லாஹ்!
‘ஆணியை அடித்துவிட்டு அது உறுதியாக உள்ளதா? என்று அசைத்துப் பார்ப்பது போல,சோதனைகள் மூலம் நீ ஈமானை உரசிப்பார்க்கிறாய்’
என்ற,
பேரறிஞர் முஹம்மத் குதுப் (ரஹ்) அவர்களின் கூற்றுக்கிணங்க;
உஸ்தாதின் ஈமான் பலமுறை உரசப்படுகிறது.
‘செல்வம்....அதை அடைந்து கொண்டவர்கள் செல்வந்தர்களாகி விடுகின்றார்கள்.ஆனால் நளீம் ஹாஜியாரை அது அடைந்தபோது அது அவரை வறியவராக்கிவிட்டது.அவர் அல்லாஹ்விடம் கையேந்தும் ஏழையாகி விட்டார்.செல்வம் எதனையும் சாதிக்காது;தன்னைவிட பெரும் செல்வம் கொண்டவர்கள் உலகில் இருக்கவே செய்கின்றார்கள்;அல்லாஹ்வின் அருள் வேண்டும்,அவனது நாட்டமும் விருப்பமும் வேண்டும்;இவைகள் இல்லாது போனால் செல்வம் பயனற்றதாகிவிடும் என்பதைப் புரிந்து கொண்டவர் நளீம் ஹாஜியார்.அதனால் செல்வத்தைக் கண்டு அவர் செல்வந்தராகி விடவில்லை.அந்த செல்வத்தை பயனுள்ளதாக மாற்றும் பேரருளாளனின் உதவியை நாடி நிற்கும் ஏழையாகிவிட்டார்.
அவர் கண்ட செல்வம் வேறொன்று.பணத்தால் ஒரு பெருவாழ்வு வாழ்வதை பெறற்கரிய செல்வமாக அவர் கருதவில்லை.அழிந்து போகும் தனது செல்வங்களைப் பசளையாக்கி அவர் வளர்த்தார்.ஒரு இஸ்லாமியப் பூங்கா அதன் மலர்கள் பரப்பும் பிரார்த்தனை மணத்தில் மனம் நெகிழ்ந்து வாழ்வதையே செல்வமாகக் கருதுபவர் நளீம் ஹாஜியார்.
அந்த நந்தவனத்தில் மலர்ந்த ஒரு மொட்டு என்ற பெருமை என்னை மகிழ்விக்கிறது.
எனது உயர்வில் அவரது பங்கு எத்தகையதோ அதேயளவு எனது பிரார்த்தனையில் அந்த மகானுக்கும் பங்குண்டு என்பதை மறவாத ஒரு சேவகனாக என்றுமிருப்பேன்.’
- உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்-
உஸ்தாத்,
இது நீங்கள் பேருவளை,சீனன்கோட்டை சமூகம் 12.12.1998 அன்று மர்ஹூம் எம்.ஐ.எம்.நளீம் ஹாஜியார்;நாட்டுக்கும்,
சமூகத்துக்கும் செய்த அளப்பரிய சேவைகளை நினைவுகூறி வெளியிடும் சேவை நலன் பாராட்டு மலரில் சிந்திய முத்துக்கள்.
அந்த மகானுக்காக இன்று நீங்கள் யதார்த்தமாகவே பிரார்த்தனை செய்வீர்கள் ஏனெனில் அவரும் அநியாயமான முறையில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அநுபவித்த துன்பியல் இன்னல்களை இன்று நீங்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள்.
மர்ஹூம் நளீம் ஹாஜியார் தனது சிறைவாழ்வின் அநுபவத்தைப் பற்றிச் சொல்லும் போது,
நாற்பது நாட்களுக்கு மேலாக நான் தனிமையில் அநுபவிக்கும் இந்தவேதனை எனது சக்தியை அப்படியே பிழிந்தெடுத்து,இப்போது எனது மனோ உறுதியையும் தளரச் செய்ய ஆரம்பித்தது.விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வெளியே காதைத்துளைக்கும் பயங்கரமான ஓர் இடிமுழக்கம் கேட்டது.
அந்த இடி நான் இருக்கும் இந்த இடத்தில் விழக்கூடாதா?அப்போதாவது எனக்கு இந்த வேதனையிலிருந்து விடுதலை கிடைக்குமே என நான் எனக்குள் எண்ணிக் கொண்டேன்.வெளியே எங்கோ விழுந்த அந்தப் பேரிடியின் அதிர்ச்சியில் எனது விசாரணை நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்த பொருட்கள் எல்லாம் ஆட்டங்கண்டன.மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த இடம் இருள்மயமாகியது.அந்த இடத்திலிருந்த கல்லச்சு இயந்திரம் சேதமாகியது.உடனே எனது விசாரணை நிறுத்தப்பட்டு,நான் எனது சிறைக்கூடத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டேன்.
(நன்றி,நூல்;
நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும்
பக்கம்:98)
நளீம் ஹாஜியாருக்கு ஏற்பட்ட இந்த சோதனையை நீக்கும்படி அல்லாஹ்விடம் கையேந்தி ஆயிரமாயிரம் உள்ளங்கள் நெஞ்சுருகப் பிரார்த்தித்தன.அந்த தொடரில் பெரியார் ஸெய்யித் அமீன் குத்பி அவர்கள் புனித கஃபாவை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.அவர்களை மிக மரியாதையுடன் நெருங்கிய மஸ்ஊத் ஆலிம்,ஸெய்யித் அவர்களே!சகோதரர் நளீம் ஹாஜியை அநியாயமாக குற்றம் சுமத்தி தடுப்புக்காவலில் சிறைவைத்துள்ளார்கள்.
அவருக்காக துஆச் செய்யுங்கள் என்று கூறினார்... அந்த பெரியாரின் பார்வை அல்லாஹ்வின் புனித ஆலயமான கஃபதுல்லாஹவை நோக்கித் திரும்பியது.
‘மஸ்ஊத் அப்ஷிர் லி ஹாஜி நளீம்’
நீங்கள் ஹாஜி நளீமுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நற்செய்தியை அறிவியுங்கள் என்றார்கள்.
அல்லாஹ்விடம் அவர்களுக்காக கை உயர்த்திப் பிரார்த்தித்த ஆயிரமாயிரம் தூய்மையான உள்ளங்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் அங்கீகரித்தான்.
அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு 47ஆவது நாளன்று விசாரணை முடிவில் அவர்மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லையென்றும்,
அவர் நிரபராதி எனவும் கூறி நளீம் ஹாஜியார் விடுதலை செய்யப்பட்டார்.இதனை தினகரன் பின்வருமாறு வெளியிட்டது.
‘நளீம் ஹாஜியார் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார்.ஒரு சிறு குற்றச்சாட்டுக்கூட குற்றஞ்சாட்ட அவர் மீது இருக்கவில்லை.’
(தினகரன் 31.01.1979)
'கவலைகள் வேண்டாம்,
ரணமான பொழுதில்தான்
உள்ளங்களில் வேட்கைகள்
உதிக்கின்றன.
மழை பொழிவதெல்லாம்,
இருள் சூழ்ந்த மேகத்திலிருந்துதான்.'
- மௌலானா ஜலாலுத்தீன் ரூமி -
நந்தவனத்தை உருவாக்கியவர் எந்த பிரார்த்தனைகளால் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை பெற்றாரோ,
அவ்வாறே மொட்டும் அதே பிரார்த்தனைகள் மூலம் விடுதலை பெற வல்லவன் அல்லாஹ் பேருதவி செய்வானாக.
-நௌபாஸ் ஜலால்தீன்-