24/01/2022
சாவகச்சேரியில் ரயில் மோதி விபத்து; உயர்தர மாணவன் பரிதாபச் சாவு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி - சங்கத்தானை பகுதியில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி - சங்கத்தானை பகுதியில் உள்ள புகையிரத கடவையை நடந்து கடக்க முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அருவி இணையத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி ரயிலுடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தைச் சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் ரயில் பாதையை நடந்து கடந்த வேளை யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் நாளை பாடசாலையில் நடைபெறும் சோர்சல் நிகழ்வுக்கு ஆடைகளைத் தைக்கச் சென்றபோதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.