02/06/2026
*சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் அடையாள கைப்பட்டி முறை நாளை முதல் அமுல்*
நோயாளர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் முதல் முறையாக நோயாளர் அடையாளம் காணும் கைப்பட்டி (Patient Identification Wristband) அணிவிக்கும் திட்டத்திற்கான பயிற்சிப்பட்டறை இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வு, வைத்தியசாலையின் முதல்வர் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி. பிரபா சங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் அன்டன் சுவர்ணன், கைப்பட்டி முறையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். நோயாளிகளுக்கு ஏதேனும் மருந்து அல்லது உணவு ஒவ்வாமை (Allergy) இருப்பின் அதனை உடனடியாக அடையாளம் காண இந்த முறை உதவும் என்றும், தவறான சிகிச்சைகள் மற்றும் அவசர நிலைமைகளைத் தவிர்த்து பல உயிர்களை பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய நோயாளர் அடையாள கைப்பட்டி முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளர் பாதுகாப்பு, சிகிச்சைத் தரம் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் பல்வேறு முன்மாதிரி வேலைத்திட்டங்களை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தொடர்ச்சியாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Thiran TV Thiranoli Thiranoli Media Nowshad A Careem Ansath Ansath