ஏகத்துவ மெய்ஞானம்

ஏகத்துவ மெய்ஞானம் வஹ்ததுல் வுஜூத் எனும் இறைஞானத்தை போத

 #உன்னையே_வணங்குகிறோம்_உன்னிடமே_உதவி_தேடுகிறோம்!إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ،தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்த...
03/08/2025

#உன்னையே_வணங்குகிறோம்_உன்னிடமே_உதவி_தேடுகிறோம்!

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ،

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் #மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

மேலே சொன்னது போல் தொழுகையில் ஓதிவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தேனீர் கேட்பவன் யாரிடம் உதவி கேட்கிறான்? இவன் முஸ்லிமா? காபிரா?

தொழுகையில் “பாதிஹா ஸூறா” ஓதுவது கடமை. தவறினால் தொழுகை “பாதில்” வீணாகிவிடும். நிறைவேறாது.

ஒருவன் மேற்கண்ட திரு வசனத்தை نَعْبُدُكَ وَنَسْتَعِيْنُكُ என்று தொழுகையில் ஓதினால் அவனின் தொழுகை நிறைவேறாது. அது மட்டுமன்றி திருக்குர்ஆன் வசனத்தை மாற்றி ஓதிய குற்றவாளியாகவும் ஆகிவிடுவான்.

இந்த வசனத்திற்கும், திருக்குர்ஆன் வசனத்திற்கும் பொருளிலும், வசன அமைப்பிலும் வித்தியாசம் உண்டு. திருக்குர்ஆன் வசனம் பின்வருமாறு.

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ،

முதலில் கண்ட சாதாரண வசனத்திற்கும், இந்த திருக்குர்ஆன் வசனத்திற்கும் வித்தியாசமிருப்பது அறிவுள்ளவர்களுக்கு மறைவானதல்ல. எனினும் அதைச் சுருக்கமாகச் சுட்டிக் காட்டுகிறேன்.

نَعْبُدُكَ وَنَسْتَعِيْنُكُ

என்றால் நாங்கள் உன்னை வணங்குகின்றோம், இன்னும் உன்னிடம் உதவியும் தேடுகிறோம் என்று பொருள் வரும்.

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ،
என்றால் நாங்கள் உன்னை(யே) வணங்குகிறோம், இன்னும் உன்னிட(மே) உதவியும் தேடுகிறோம் என்று பொருள் வரும்.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால் சாதாரண வசனத்தில் உன்னை(யே) வணங்குகிறோம், உன்னிட(மே) உதவி தேடுகிறோம் என்று வணக்கத்தையும், உதவி தேடுதலையும் உறுதி செய்து சொல்லப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆன் வசனத்தில் குறித்த இரண்டு அம்சங்களையும் உறுதி செய்து சொல்லப்பட்டுள்ளது.

இத்தகைய விஷேடம் திரு வசனத்திற்கு எதனால் ஏற்பட்டதென்று ஆய்வு செய்வோம்.

இவ் ஆய்வு نَحْوُ எனும் அறபு மொழி இலக்கணத்தோடு சம்பந்தப்பட்டதாகும். இது அறபு மொழி இலக்கணம் கற்றவர்களுக்கும், கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியும். இக்கலையோடு சம்பந்தப்படாதவர்களுக்கு தெரியாது. இக்கலையோடு தொடர்பில்லாதவர்கள் இப்பகுதியை வாசிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மொழியிலக்கண விளக்கம்:

نَعْبُدُ
என்றால் நாங்கள் வணங்குகின்றோம் என்று பொருள். إِيَّاكَ نَعْبُدُ என்றால் உன்னையே வணங்குகிறோம் என்று பொருள்.

உன்னையே வணங்குகின்றோம் என்ற வசன அமைப்பு “வேறான்றையும் நாங்கள் வணங்கமாட்டோம்” என்ற கருத்தை தருகிறது.

نَعْبُدُكَ
என்ற வசனம் உன்னை வணங்குகின்றோம் என்ற பொருளை மட்டுமே தருகிறது. “வோறொன்றையும் நாங்கள் வணங்கமாட்டோம்” என்ற கருத்தை தரவில்லை.

இந்த வகையில் திருக்குர்ஆன் வசனமே சாதாரண வசனத்தை விட அர்த்த புஷ்டி உள்ளதாகவும், உறுதியானதாகவும் விளங்குகிறது.

ஆகையால் இதே கருத்தை குறித்த சாதாரண வசனம் தருவதாயிருந்தால் نَعْبُدُكَ என்ற சொல்லில் உள்ள كَ “க” என்ற எழுத்தை نَعْبُدُ என்ற சொல்லுக்கு முன்னால் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வருவதாயின் كَنَعْبُدُ என்று கொண்டு வர வேண்டும். இவ்வாறு கொண்டு வருதல் சட்ட விரோதமானதாகும். இவ்வாறு வசனம் வராது.

ஆகையால் نَعْبُدُكَ என்ற சொல்லின் கடைசியில் உள்ள كَ “க” என்ற எழுத்தை إِيَّاكَ என்று மாற்றிக் கொண்டு வருதல் வேண்டும். அவ்வாறாயின் نَعْبُدُكَ என்ற சொல்லின் கடைசியில் உள்ள كَ “க” என்ற எழுத்தை إِيَّاكَ என்று மாற்றி முன்னால் கொண்டு வர வேண்டும். إِيَّاكَ نَعْبُدُ என்பது போன்று. இவ்வாறு அமைப்பதால் ஏற்படுகின்ற விஷேட பயன் என்னவெனில் உன்னை என்ற கருத்தை “உன்னையே” என்று மாற்றித் தரும்.

இது தொடர்பாக இன்னும் விளக்கம் சொல்லலாம். ஆயினும் புத்தியுள்ளவர்களுக்கு இது தாராளம்.

إِيَّاكَ نَعْبُدُ
என்று நாம் எவ்வாறு அமைத்தோமோ அதற்குப் பின்னால் وَإِيَّاكَ نَسْتَعِيْنُ என்று வந்துள்ளதும் இவ்வாறு அமைக்கப்பட்டதேயாகும். இவ்வாறு அமைத்தவன் அல்லாஹ்தான். அவனுக்கு எல்லா இலக்கணமும் தெரியும்.

إِيَّاكَ نَعْبُدُ

“உன்னையே வணங்குகிறோம்” வேறெவரையும், எதையும் வணங்கவில்லை.

முஸ்லிம்களாயினும், முஸ்லிம்கள் அல்லாதவர்களாயினும் வணங்குகின்ற அனைவரும் அல்லாஹ்வையே வணங்குகிறார்கள். யார் எதை வணங்கினாலும் வணங்கப்படுபவன் அல்லாஹ்தான். (கடவுள்தான், இறைவன்தான்) இதுவே எதார்த்தம். இதில் கருத்து வேறுபாடு கிடையாது.

لَا إلهَ إِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ،

கோவிலாயினும், தேவாலயமாயினும், பள்ளிவாயல்களாயினும் அனைத்து இடங்களிலும் வணங்கப்படுபவன் அல்லாஹ்வேயன்றி வேறு யாருமில்லை.

இது எந்த சமயத்திற்கும் பொருத்தமான பொதுவான தத்துவமாகும். எவரால் அவன் வணங்கப்பட்டாலும் வணங்கும் முறையில் பிழை இருக்கக் கூடாது.

முஸ்லிம்களும் அல்லாஹ்வையே வணங்குகிறார்கள். ஆயினுமவர்கள் எந்த ஓர் குறிப்பிட்ட உருவத்தையும் முன் வைத்து அதை இறைவனை நினைவூட்டும் சின்னமாக்கி வணங்குவதில்லை. முஸ்லிம் அல்லாதவர்கள் எதார்த்தத்தில் இறைவனை வணங்கினாலும் ஏதேனும் ஓர் உருவத்தை நினைவுச் சின்னமாக்கியே வணங்குகிறார்கள். கோடான கோடி உருவங்களில் தோன்றும் வல்லமையுள்ள ஏகனை ஏதோ ஓர் உருவத்தில் மட்டும் கட்டுப்படுத்தி வணக்கம் செய்தல் அவனை வணங்கியதாகாது. பொதுவாக ஏதோ ஒன்றில் கட்டுப்படுத்தி வணக்கம் செய்தல் என்பது “ஷிர்க்” இணை வைத்தலாக ஆகிவிடும்.

اَللهُ تَعَالَى إلهٌ مُطْلَقٌ لَا مُقَيَّدٌ بِأَيِّ قَيْدٍ،
அல்லாஹ் என்பவன் “முத்லக்” எந்த ஒரு கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட பொதுவானவன். இதுவே சரியான தீர்வு.

அவன் எந்த ஓர் குறிப்பிட்ட உருவம் உள்ளவனல்ல. அவனின் கோடான கோடி உருவங்களை ஒன்றில் மட்டும் கட்டுப்படுத்த யாரால் முடியும்? அவனின் உருவங்கள் என்பன மனித உருவங்களை மட்டும் குறிக்காது. உயர்திணை, அஃறிணை அனைத்தின் உருவங்களையும் மற்றும் அல்லாஹ் படைத்த அனைத்து வஸ்துக்களின் உருவங்களையும் குறிக்கும். இவ்வாறு நாம் கணக்கெடுத்தால் எண்ணிலடங்கா உருவங்களை கணக்கெடுக்க வேண்டும். இது சாத்தியமற்றதாகிவிடும். அவ்வாறு கணக்கெடுக்க முடியுமாயிருந்தாலும் கூட அவையாவையும் ஒன்றில் கட்டுப்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்? சாத்தியமேயாகாது.

முஸ்லிம்கள் அல்லாதவர்கள் ஏதோ ஒன்றில் அவனைக் கட்டுப்படுத்தி வணங்கினால் கூட அதை மட்டும் அவனின் உருவமாகக் கொள்ள முடியாது.

وَإِيَّاكَ نَسْتَعِيْنُ
நாங்கள் உன்னிடமே உதவி தேடுகிறோம். அதாவது உன்னிடம் மட்டுமே உதவி தேடுவோம். வேறு எவரிடமும் உதவி கேட்க மாட்டோம்.

إِيَّاكَ نَعْبُدُ
என்பதற்கு மேலே சொல்லப்பட்ட விளக்கம் எல்லாம் இதற்கும் பொருத்தமானதாகும். மீண்டும் எழுதத் தேவையில்லை.

இத்திரு வசனத்திற்கு விளக்கம் சொல்லும் இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் ஆகியோரின் ஆதரவாளர்கள் அல்லாஹ்விடம்தான் உதவி கேட்கலாமேயன்றி அவ்லியாஉகளிடமும், ஷெய்குமார்களிடமும் உதவி கேட்பது இத்திரு வசனத்திற்கு முரணானது என்றுதான் சொல்கிறார்களேயன்றி அல்லாஹ் தவிர வேறு எவரிடமும், எதனிடமும் பொதுவாகப் படைப்பிடம் உதவி கேட்கலாகாது என்று சொல்கிறார்களில்லை. திருக்குர்ஆனின் வசனத்தின் படி விளக்கம் சொல்வதாயின் அல்லாஹ் தவிர வேறு எவரிடமும் உதவி கேட்கலாகாதென்றுதான் சொல்ல வேண்டுமேயன்றி அவ்லியாஉகளிடமும், ஷெய்குமார்களிடமும் உதவி கேட்கலாகாதென்று சொல்ல முடியாது. இவர்களுக்கு அவ்லியாஉகளின் மீதும், ஷெய்குமார்களின் மீதும் என்னதான் கோபமோ தெரியவில்லை.

இவ்வாறு சொல்பவர்களிடம் ஏன் அவ்லியாஉகளிடமும், ஷெய்குமார்களிடமும் உதவி கேட்க கூடாதென்று சொல்கிறீர்கள்? என்று கேட்டால் அவர்கள் மரணித்துவிட்டார்கள். மரணித்தவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று பதில் சொல்கிறார்கள். அவ்வாறாயின் உயிருள்ள அவ்லியாஉகளிடமும், உயிருள்ள ஷெய்குமார்களிடமும் உதவி கேட்கலாமா? அது ஆகுமா? என்று கேட்டால் அது ஆகும் என்று சொல்கிறார்கள். அல்லது கேள்விக்கு பதில் கூற முடியாமல் தலை குனிகிறார்கள்.

இவர்களின் இக்கூற்றின் படி உயிரோடுள்ள அவ்லியாஉகளிடமும், உயிரோடுள்ள ஷெய்குமார்களிடமும் யா வலிய்யல்லாஹ்! யா ஷெய்கீ! எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்க முடியும் என்று சொல்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டால் உயிரோடுள்ளவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்றும், மரணித்தவர்களால் உதவி செய்ய முடியாது என்றும் விடை சொல்கிறார்கள். இதற்கு திருக்குர்ஆனிலிருந்தோ, நபீ மொழியிலிருந்தோ ஓர் ஆதாரமாவது கூற முடியுமா? என்று கேட்டால் உயிருள்ளவனால்தானே செய்ய முடியும். மரணித்தவன் எவ்வாறு செய்வான் என்று வரட்டுத் தத்துவம் பேசுகிறார்களேயன்றி தமது வாதத்தை நிறுவ ஓர் ஆதாரம் கூட காட்டுவதற்கு முன் வருகிறார்களில்லை.

உயிருள்ளவனால் செய்ய முடியும், உயிரில்லாதவனால் செய்ய முடியாதென்பது - இந்த நம்பிக்கை பிழையானதாகும். ஏனெனில் செய்பவன் அல்லாஹ் மட்டும்தான். உயிருள்ளவனாலும் சுயமாகச் செய்ய முடியாது. உயிரில்லாதவனாலும் சுயமாகச் செய்ய முடியாது. சுயமாகச் செய்பவன் அல்லாஹ் மட்டும்தான். அவன் நாடினால் உயிரில்லாதவனையும் பேச வைப்பான். உயிரில்லாதவன் மூலமும் செயல்களை வெளிப்படுத்துவான்.

எனவே, உயிரில்லாதவனால்தான் செய்ய முடியாதென்ற குருட்டு ஞானத்தை தூக்கியெறிந்து விட்டு எதையும் ஆதாரத்தின் மூலம் நிறுவ முன் வர வேண்டுமென்று ரிஸ்வீ போன்ற அரை வேக்காடுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

“ஹகீகத்”தில் - எதார்த்தத்தில் எது செய்வதாயினும் அதை அல்லாஹ்தான் செய்கிறான். இவ்வடிப்படையில் செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியனவே தவிர உயிரோடுள்ளவனுக்குமில்லை, செத்துப் போனவனுக்குமில்லை.

கலிமது தையிபாவின் யதார்த்தமான விளக்கம் இக்கடிதத்தில் பேசப்படுகிறது. உலமாக்கள் கவனத்துடனும் ஆர்வத்துடனும் வாசித்தால் சமூக...
26/11/2024

கலிமது தையிபாவின் யதார்த்தமான விளக்கம் இக்கடிதத்தில் பேசப்படுகிறது. உலமாக்கள் கவனத்துடனும் ஆர்வத்துடனும் வாசித்தால் சமூகத்துக்கு பிரயோசனம் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்

DR. SM றயீஸுத்தீன் மௌலவீ அவர்கள் எனக்கு அனுப்பிய கடிதத்துக்கான பதில்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ.

நீங்கள் கடந்த 20.11.2024 அன்று திகதியிட்டு அனுப்பிய கடிதம் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்! இதற்கு முன்னரும் நீங்கள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தீர்கள். அதற்கு பதில் எழுதும் நோக்கில் தயாராகிக் கொண்டிருந்த வேளை நீங்கள் நமது பிள்ளைகளுடன் வட்ஸ்அப் குழுமத்தில் உரையாடிய விதம் பற்றி அறிந்தேன். நான் எப்போதும் சத்தியத்தை அறியும் எண்ணத்துடன் கேட்பவர்களுக்கே பதிலளிப்பது வழக்கம். எவ்வாறேனும் மறுக்க வேண்டும் அல்லது விவாதித்து வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் கேள்விகளைத் தொடுப்பவர்களுக்கு பதிலளிப்பதில்லை. அதனால் அதைக் கைவிட்டுவிட்டேன்.

இருந்த போதிலும் மீண்டும் நீங்கள் என்னை நோக்கி சில கேள்விகளைத் தொடுத்து கடிதம் அனுப்பியுள்ளீர்கள். உங்களின் ஆர்வத்தை மதித்து இந்த பதிலை எழுதுகிறேன்.

திருக்கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை எவ்வித வலிந்துரையுமின்றியே விளங்க வேண்டும் என்ற உங்களின் நிலைப்பாட்டை கூறியுள்ளீர்கள். நாமும் அதே கருத்திலேயே உள்ளோம். அல்ஹம்து லில்லாஹ்!

அடுத்து நீங்கள் இமாம் பக்றுத்தீன் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின்

ومتى كان الأمر كذلك لم يكن بنا حاجة إلى ذلك الإضمارالبتة، فصحّ أنّ قولنا لا إله إلا الله يفيد المقصود بظاهره من غير حاجة البتة إلى الإضمار،
என்ற வசனத்தை நான் ஆதாரமாகக் காட்டி திருக்கலிமாவுக்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று நீங்கள் கருத்துக் கூறுவது பிழை, அவ்வாறு வலிந்துரை வைக்காதீர்கள் என்று கூறுவதாகவும், இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் இங்கு “தஃவீல்” பற்றிப் பேசவில்லை. என்றும் எழுதியிருந்தீர்கள்.

இவ்வாறு எழுதிய நீங்கள் تأويل என்றால் என்ன? إضمار என்றால் என்ன? அவ்விரண்டுக்குமிடையிலான வேறுபாடு என்ன? என்ற விளக்கத்துடன் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். உங்களின் அறிவுப் புலமையையும் அது காட்டியிருக்கும்.

இக்கடிதத்தை எழுதிய உங்களின் நிலைப்பாடு எவ்வித “தஃவீலோ”, “இழ்மாறோ” தோவையில்லை என்தபாகும். அதே நேரம் மேற்குறித்த வசனத்தில் இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் அறவே எந்த “இழமார்” உம் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.

எனவே, எனது நிலைப்பாட்டின் அடிப்படையிலும், உங்களின் நிலைப்பாட்டின் அடிப்படையிலும், “ஷெய்குல் இஸ்லாம்” இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்களின் கருத்தின் படியும் திருக்கலிமாவை எவ்வித “இழமாறோ”, “தஃவீலோ” இன்றி அதன் வெளிப்படையான சொற்களைக் கொண்டே விளங்க வேண்டும்.

அதேபோன்று இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் தங்களின் “தப்ஸீர்” திருமறை விளக்க நூலில் குறிப்பட்ட

وذلك لأنك إذا قلنا: لَا إِلَهَ فِي الْوُجُودِ لَا إِلَهَ إِلَّا هُوَ كَانَ هَذَا نَفْيًا لِوُجُودِ الْإِلَهِ الثَّانِي، أَمَّا لَوْ لَمْ يُضْمَرْ هَذَا الْإِضْمَارُ كَانَ قَوْلُكَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ نَفْيًا لِمَاهِيَّةِ الْإِلَهِ الثَّانِي، وَمَعْلُومٌ أَنَّ نَفْيَ الْمَاهِيَّةِ أَقْوَى فِي التَّوْحِيدِ الصِّرْفِ مِنْ نَفْيِ الْوُجُودِ، فَكَانَ إِجْرَاءُ الْكَلَامِ عَلَى ظَاهِرِهِ، وَالْإِعْرَاضُ عَنْ هَذَا الْإِضْمَارِ أَوْلَى،
வசனத்தை மேற்கோள்காட்டி وَالْإِعْرَاضُ عَنْ هَذَا الْإِضْمَارِ أَوْلَى “இழ்மார்” ஐப் புறக்கணிப்பது ஏற்றமானது என்றுதான் குறிப்பிட்டுள்ளார்களேயன்றி அவ்வாறு “இழ்மார்” வைத்தால் தவறில்லை என்று கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் தவறில்லாத ஒரு விடயத்தை விளங்கப்படுத்தவா தனது தப்ஸீர் நூலிலும், “லவாமிஉல் பையினாத்” என்ற நூலிலும் இந்த விளக்கத்தை வரி வரியாக எழுதியுள்ளார்கள். ஒருவருடைய வசன நடையைக் கூடவா விளங்க முடியவில்லை? முதலாவதாக நீங்கள் குறிப்பிட்ட “லவாமிஉல் பையினாத்” எனும் நூலில் அவர்கள்
فصحّ أنّ قولنا لا إله إلا الله يفيد المقصود بظاهره من غير حاجة البتة إلى الإضمار،

எனவே, “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் எந்தவொரு “இழ்மார்” உம் இன்றி அதன் வெளிப்படையான வசனமே அதன் நோக்கத்தை தருகிறது என்ற கருத்து “ஸஹ்ஹ” சரியானது என்று குறிப்பிட்டுள்ளார்களே. அப்படியாயின் صَحَّ “ஸஹ்ஹ” – “ஸஹீஹ்” என்பதற்கு மாற்றமானது خَطَأٌ தவறானது என்றுதானே வரும். வேறோர் இடத்தில் أَوْلَى மேலானது என்று மிகைத்துப் பேசுவதால் அதைப் பிடித்துக் கொண்டு “மேலானது” என்றுதான் சொல்லியுள்ளார்கள். அதனால் அதற்கு மாற்றமாகச் சொல்வது தவறில்லை என்ற கருத்துதான் வரும் என்று வாதிடுவது அறிவுடமையல்ல.

அடுத்து “இலாஹ்” என்பதற்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்று இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் தங்களின் தப்ஸீர் நூல்களில் குறிப்பிட்ட வசனங்களை குறிப்பிடுகிறேன் என்று சில வசனங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவற்றின் அடிப்படையில் நீங்கள் “இலாஹ்” என்பதற்கு வலிந்துரையின்றியே “வணக்கத்திற்குரியவன்” என்ற கருத்து வரும் என்று பிரதானமாக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களின் அறிவுப் புலமையை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.

முதலில் “இலாஹ்” என்பதற்குரிய அர்த்தத்தை அறிய முன் திருக்கலிமாவில் அதற்கு முன்னதாகச் சொல்லப்படடுள்ள “லா” பற்றி அறிய வேண்டும். இது “தப்ரியா” உடை “லா” ஆகும். இந்த “லா”வுக்குப் பின்னால் “நகிரா”வான ஒரு “இஸ்ம்” வருமேயானால் அது அந்த இனத்தையே எடுத்துக் கொள்ளும். நீங்கள் ஏற்கனவே கேட்டது போல் “இலாஹ்” என்பது ஒரு இனமா? என்று அறபு மொழியறிவில்லாதவர் போல் இப்போதும் கேட்டு விடாதீர்கள். இங்கு இனம் என்பது அந்தப் பெயர் கொண்டு எது எதுவெல்லாம் புழக்கத்தில் அழைக்கப்படுகிறதோ அவற்றையெல்லாம் அது எடுத்துக் கொள்ளும். இல்லை அல்லாஹ் மட்டும்தான் “இலாஹ்” என்றால் திருக்கலிமாவில் உள்ள “இலாஹ்” என்பதற்கு “நஸ்ப்” செய்து “லா இலாஹ” என்று சொல்லத் தேவையில்லை.

நீங்கள் சொல்வது போல் “இலாஹ்” என்பதன் கருத்து வணக்கத்திற்குரியது என்றிருந்தால் திருக்கலிமாவின் கருத்து “அல்லாஹ் தவிர வணக்கத்திற்குரிய எந்த தெய்வமும் இல்லை” என்று வரும். இவ்வாறு சொல்வதால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டும்தான் என்ற கருத்து வரும் என்றுதான் ஆழமான அறிவில்லாதவர்கள் எண்ணுகிறார்கள். இவ்வாறு எண்ணுவது சரியா? பிழையா? என்பதை நீங்கள் இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்களின் கூற்றை சரியாக விளங்கியிருந்தால் புரிந்திருப்பீர்கள்.

இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் لَا إلهَ لَنَا எங்களுக்கு அல்லாஹ் தவிர எந்த இலாஹும் இல்லை என்று “இழ்மார்” செய்வதே பிழை என்று சொல்கிறார்கள். காரணம் அவ்வாறு சொன்னால் அனைத்துப் படைப்பினங்களுக்கும் அவனே “இலாஹ்” என்ற கருத்து வராது. அதனால்தான் إلهُكُمْ إلهٌ وَاحِدٌ என்று சொன்ன இறைவன் “உங்களுடைய” என்று மட்டும் யாரைப் பார்த்து விழிக்கப்பட்டதோ அவர்களுடைய இறைவன்தான் ஒருவன் என்ற கருத்து வந்துவிடும் என்பதனால் அதனைத் தொடர்ந்து لَا إلهَ إِلَّا هُوْ அவன் தவிர எந்த இலாஹும் இல்லை என்று கூறியுள்ளான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். உங்கள் வாதப்படி அல்லாஹ் “உங்களின் தெய்வம் ஒரே நாயன்தான்” என்று சொன்னதன் பிறகு அந்தக் கருத்து ஒரு சாராரை மட்டும் மட்டுப்படுத்திச் சொல்லப்படுவதால் அதையடுத்து “லா இலாஹ இல்லா ஹூ” என்று சொல்லாமல் إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ بَلْ إِلَهُ الْكُلِّ إلهٌ وَاحِدٌ “உங்களின் நாயன் ஒரே நாயனாவான். இல்லை அனைவரின் நாயனும் ஒரே நாயன்தான்” என்று சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லமால் “லா இலாஹ இல்லா ஹூ” என்று சொன்னமைக்கான காரணம் அனைவரும் அந்த ஒரே நாயனான அல்லாஹ்வை மட்டும் இலாஹ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. அந்நிலையில் அனைவரின் இலாஹூம் ஒரே நாயன்தான் என்றால் அது பொருத்தமற்றதாகும். மாறாக அவனுக்கு வேறான எந்த தெய்வமும் இல்லை என்றால் அந்த வசனம் அனைத்து தெய்வங்களையும், அனைவரின் தெய்வங்களையும் எடுத்துக் கொள்ளும். இதுவே பொருத்தம். நீங்கள் கருதுவது போல் “உங்களின் இலாஹ் ஒரே நாயன்தான்” என்பதைத் தொடர்ந்து “வணக்கத்தறிகுரியவன் அல்லாஹ்” என்றால் அது பொருத்தமற்ற தொடராகும். அல்லாஹ்வின் பேச்சு எமது பேச்சு போன்ற வீணான. அர்த்தமற்ற பேச்சல்ல.

அதேபோல் “லா இலாஹ பில் வுஜூதி இல்லல்லாஹ்” – “உள்ளமையில் அல்லாஹ் தவிர வேறு நாயன் இல்லை” என்று “தக்தீர்” செய்வதும் பிழை என்று சொல்கிறார்கள். நீங்களும் இவ்விரண்டையும் ஏற்றே எழுதியுள்ளீர்கள். உங்களின் வாதப்படி திருக்கலிமாவின் பொருள் “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் தவிர வேறு நாயன் இல்லை” என்றால் - அதாவது “இலாஹ்” என்பதன் பொருள் “வணக்கத்திற்குரியவன்” என்றிருந்தால் “லா இலாஹ பில் வஜூதி இல்லல்லாஹ்” என்று இழ்மார் செய்வது பிழையேயாகாது. அதனால் எவ்வித பாதிப்பும் வராது. இதை ஒரு வாதமாக எடுத்து அவர்கள் தனது நூல்களில் எழுதத் தேவையுமில்லை. “உள்ளமையில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்றால் அது பிழையே அல்ல.

அவர்கள் அவ்வாறு “தக்தீர்” செய்வது பிழை என்பதற்குக் கூறும் காரணம் “லா இலாஹ பில் வஜூதி இல்லல்லாஹ்” என்று நீங்கள் “தக்தீர்” வைத்தால் அது இரண்டாவதொரு “இலாஹ்” இல்லை என்பதையே காட்டும். மாறாக அதனுடைய “மாஹியத்”தை இல்லமலாக்காது. என்பதாகும்.

இது கொண்டு நீங்கள் எதனை விளங்குகிறீர்கள்? இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்களின் வசனங்களை நான் ஆதாரமாகக் காட்டிப் பேசியதை வைத்து எனது பொல்லை எடுத்து எனக்கே அடிக்கலாம் என்ற எண்ணத்தில்தானே கேள்விகளைத் தொடுக்கிறீர்கள்? உங்களுக்காக இல்லாவிட்டாலும் நீங்கள் பிரதிகன் என்று கோடிட்டவர்களின் நன்மை கருதி விளக்கி வைக்கிறேன். பின்வரும் உதாரணத்தை நன்றாக கவனியுங்கள்.

நான்கு நபர்கள் ஓரிடத்தில் உள்ளார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் “ஸைத்” என்பவன் மட்டுமே “ஆலிம்” ஆவான். ஆனால் அவர்கள் நால்வரையும் பார்க்கின்ற ஒரு பாமரன் அவர்கள் அனைவருமே “ஆலிம்”கள்தான் என்று கருதிவிடுவான் என்று நீங்கள் நினைத்து “லா ஆலிம இல்லா ஸைதுன்” ஸைத் தவிர எந்தவொரு ஆலிமும் இல்லை என்று கூறுகிறீர்கள். இதன் கருத்து என்னவெனில் ஸைத் மட்டுமே ஆலிம் என்பதாகும். அதாவது “லா ஆலிம பில் வுஜூதி இல்லா ஸைதுன்” உள்ளமையில் ஸைத் தவிர வேறு எவரும் ஆலிம் அல்ல என்பதாகும்.

நீங்கள் கூறும் கருத்துப்படி “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்ற கருத்தை விளக்கி வைக்க இந்த “தக்தீர்” போதுமானது. அது பிழையாகாது. ஆனால் இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் இந்த “தக்தீர்” தேவையில்லை. திருக்கலிமாவை அதன் நேரடி வசனத்தைக் கொண்டே விளங்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறுவதற்கான காரணம் என்ன? அதுமாத்திரமின்றி இவ்வாறு வலிந்துரை வைப்பது பிழை என்பதற்கு அவர்கள் கூறும் காரணத்தின் அடிப்படையில் உங்களின் வாதத்திற்கு அது ஒத்து வராது. “பில் வுஜூதி” என்று “தக்தீர்” வைத்தால் அதுவும் ஒரு மட்டுப்பாடுதான். அது அதன் “மாஹியத்”தை இல்லாமலாக்காது. என்று கூறுகிறார்கள். இதை விளங்குவதற்கு மேற்குறித்த உதாரணத்தை வைத்து விளங்க நீங்கள் முற்பட்டால் “மௌத்” மரணம் வரையும் உங்களால் அதை விளங்க முடியாது. நான் பின்னால் கூறும் வகையில் உதாரணத்தை கற்பனை பண்ணி சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவன் ஒரு நகைக் கடைக்குச் சென்று அங்கு பலவிதமான ஆபரணங்களை - பல எண்ணிக்கையிலான ஆபரணங்களை கண்டு வியந்து நிற்கிறான். இவன் அங்கு காணப்படும் ஒவ்வொன்றையும் தனித்தனியான ஒவ்வொரு சாமான் என்று நினைக்கிறான். இவனுடைய இந்த பேதமையை நீக்கி அவனின் உள்ளத்தை சூழ்ந்துள்ள இருளை அகற்ற நினைத்த நீங்கள் لَا حُلْيَةَ إِلَّا الذَّهَبُ தங்கத்தை தவிர எந்த ஆபரணமும் இல்லை என்று சொன்னால் இங்கு لا حلية فى الوجود إلا الذهب “உள்ளமையில் தங்கம் தவிர ஆபரணம் இல்லை” என்று “தக்தீர்” வைக்கத் தேவையில்லை. அவ்வாறு வைப்பதை விட அந்த வசனத்தை அதன் வெளிரங்கமான சொற்களை வைத்து விளங்குவதே ஆபரணங்கள் என்பதன் “மாஹியத்”தை இல்லாமலாக்கி அப்படியொரு சாமானே இல்லை, அவ்வாறு தோற்றுவது தங்கம்தான் என்று நிறுவ உதவும். இவ் உதாரணம்தான் இமாம் அவர்கள் கூறியது போன்று உள்ளமையில் இரண்டவதான “இலாஹ்” இல்லை என்று நிறுவாமல் அவர்களின் - மக்கத்து காபிர்களின் பேதமையில் காணப்பட்ட வேறான “இலாஹு”களின் “மாஹியத்”தையே இல்லாமலாக்குவது போல் தங்கம் போன்ற இன்னொரு தங்கம் இல்லை என்பதை நிறுவாமல் அந்த ஆபரணங்களின் “மாஹியத்”தையே இல்லமலாக்கும்.

இதேபோன்றுதான் திருக்கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனமுமாகும். மக்கத்து காபிர்கள் பெருமானார் திருக்கலிமாப் பிரகடனம் செய்த வேளை திரு “கஃபா”வினுள் 300க்கும் மேற்பட்ட விக்கிரகங்களை - தெய்வங்களை வைத்து வணங்கி வழிபட்டு வந்தார்கள். அவற்றை அவர்கள் தனித்தனியான ஒவ்வொரு “இலாஹ்” என்று நம்பியிருந்தார்கள். அவர்களிடம் காணப்பட்ட பேதமையை நீக்கவே “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா வந்தது. அவர்கள் அறபீகளாயிருந்ததால் அவர்கள் அதனை சரியாகவே விளங்கினார்கள். அதனால்தான் أَجَعَلَ الْآلِهَةَ إِلهًا وَاحِدًا “இந்த முஹம்மத் அனைத்து தெய்வங்களையும் ஒரே தெய்வம் என்றா ஆக்கிவிட்டார்?” என்று கேட்டு நின்றார்கள். இதனையே “ஷெய்குல் இஸ்லாம்” இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அடுத்து நீங்கள் இமாம் அவர்கள் “இலாஹ்” என்பதற்கு “வணக்கத்திற்குரியவன்” என்றுதான் தன்னுடைய “தப்ஸீர்” நூல்களில் எழுதியுள்ளார்கள் என்று சில வசனங்களை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அவற்றில் எதுவுமே “இலாஹ்” என்ற பதத்தை விளங்கப்படுத்தும் தனியான பாடமல்ல. முன் பின் தொடரின்றி இடை நடுவில் வசனத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். “சேம்பிள்” மாதிரிக்காக ஒரு சிலதை மட்டும் குறிப்பிடுகிறேன். அனைத்தையும் விளக்க முற்பட்டால் ஒரு நூல்தான் எழுத வேண்டியேற்படும். சுருங்கச் சொன்னால் நான் மேலே குறிப்பிட்டது போன்று இமாம் அவர்களின் வசன நடையை உங்களால் விளங்க முடியவில்லை என்பதே முடிவாகும். முதலாவதாக நீங்கள் குறிப்பிட்ட
لِأَنَّ الْإِلَهَ هُوَ الْمُسْتَحِقُّ لِلْعِبَادَةِ،
என்ற வசனத்தை எடுத்துப் பார்ப்போம். இமாம் அவர்கள் இவ்வாறு எழுதியிருப்பது வாஸ்தவம்தான். ஆனால் எதற்காக இதனை எழுதியுள்ளார்கள் என்பதை அறிய அந்த வசனத்தின் முன் பின் தொடர்களை கவனமாக வாசிக்க வேண்டும். இதோ உங்கள் கவனத்திற்கு தருகிறேன்.
بَلْ ذَكَرَ قَوْلَهُ (اللَّهَ) لِأَنَّ هَذَا الِاسْمَ أَبْلَغُ فِي كَوْنِهِ زَاجِرًا عَنِ الْمَعَاصِي مِنْ سَائِرِ الْأَسْمَاءِ وَالصِّفَاتِ لِأَنَّ الْإِلَهَ هُوَ الْمُسْتَحِقُّ لِلْعِبَادَةِ، وَلَا يَكُونُ كَذَلِكَ إِلَّا إِذَا كَانَ قَادِرًا عَلِيمًا حَكِيمًا فَقَوْلُهُ: (أَعُوذُ بِاللَّهِ) جَارٍ مَجْرَى أَنْ يَقُولَ أَعُوذُ بِالْقَادِرِ الْعَلِيمِ الْحَكِيمِ، وَهَذِهِ الصِّفَاتُ هِيَ النِّهَايَةُ فِي الزَّجْرِ،

சுருக்கம்: “அஊது பில்லாஹ்” என்ற வசனத்தில் வந்துள்ள “அல்லாஹ்” என்ற திருநாமம் ஏனைய திருநாமங்களை விட பாவங்களிலிருந்து தடுப்பதில் மேலானது. ஏனெனில் “அல் இலாஹ்” என்பது வணக்கத்திற்கு தகுதியானதாகும்.............

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் “அஊது பில்லாஹ்” என்ற வசனத்தில் “இலாஹ்” என்ற சொல் கூறப்படவில்லை. மாறாக “அல்லாஹ்” என்ற சொல்லே கூறப்பட்டுள்ளது. அந்த சொல் - திரு நாமம் பற்றி விபரிக்கும் போதுதான் நீங்கள் குறிப்பிட்ட வசனம் எழுதப்பட்டுள்ளது. இதை விளங்க நீங்கள் பின்வரும் விடயத்தை விளங்கினாலே போதும். திருக்கலிமாவில் “இலாஹ” என்று “அல்” – “அலிப், லாம்” இன்றி வந்தது போன்று “நகிரா”வாக கூறப்படவில்லை. மாறாக “அல் இலாஹ்” என்று “மஃரிபா”வாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விளங்கினாலே போதும் சத்தியத்தைக் கண்டு கொள்வீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போன்று “இலாஹ்” என்ற பதத்தை விளக்குவதுதான் நோக்கம் என்றிருந்தால் அது இந்த இடத்திற்குப் பொருத்தமற்றதாகும். இது போன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட ஏனைய ஆதாரங்களுமாகும்.

எனவே, மேற்குறித்த விளக்கங்களின் அடிப்படையில் “இலாஹ்” என்ற திருக்கலிமாவில் வரும் சொல்லுக்கு “வணக்கத்திற்குரியது” என்று பொருள் கூறுவது - ஒரு வர்ணனையில் “தக்ஸீஸ்” குறிப்பாக்கி பொருள் கூறுவது தவறாகும்.

திருக்கலிமாவுக்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று புழக்கத்தில் சொல்லப்படும் கருத்தை நிறுவுவதற்காக “இலாஹ்” என்ற சொல்லுக்கே “வணக்கத்திற்குரியது” என்ற பொருளைக் கொடுக்க வேண்டும் என்று பாடுபடுகிறீர்கள்.

ஆனால் இவ்வாறு பொருள் கூறும் நபர்கள் திருக்கலிமாவுக்கு அறபு மொழியிலக்கணப்படி تركيب கூறுகிறபோது “லா” என்பது “ஹர்புன் நபீF” என்றும், “இலாஹ” என்பது “லா” உடைய “இஸ்ம்” என்றும், “லா” உடைய “கபர்” “மஹ்தூப்” நீக்கப்பட்டுள்ளது. அது مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ “முஸ்தஹிக்குன் லில் இபாததி” என்றிருக்கும். குறித்த வசனம் முழுமையாக வருவதாயின் لَا إِلهَ مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ إِلَّا اللهُ என்று வரும் என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் இதை மறைத்து வேறோர் பாணியில் உங்கள் கருத்தை நிறுவ வருகிறீர்கள். அவ்வாறாயின் உங்கள் வாதப்படி திருக்கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்திற்கு அறபு மொழி இலக்கண அடிப்படையில் “தர்கீப்” எவ்வாறு அமையும் என்பதையும் கூறியிருக்க வேண்டும்.

நீங்கள் எந்தவொரு அகராதியை எடுத்துப் பார்த்தாலும் “இலாஹ்” என்ற சொல்லுக்கு كُلُّ مَعْبُوْدِ “வணங்கப்படக் கூடிய அனைத்தும்” என்றுதான் பொருள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதனுடைய “மப்ஹூம் மஃனா” பொதுவாகப் படைப்புக்களையும், படைத்தவனையும் எடுத்துக் கொள்ளும். இது தொடர்பான விளக்கம் “அல்ஹகீகா” எனும் நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதை நான் தொகுத்தெழுதிய “அல்பர்கதுல் பரீத்” எனும் நூலிலும் குறிப்பிட்டுள்ளேன். வாசித்துப் பயன் பெறுங்கள்.

உண்மையில் உங்களுக்கு சத்தியத்தை அறியும் நோக்கமிருந்தால் இறைஞானிகளின் நூல்களிலிருந்து நான் தொகுத்தெழுதிய الفرقد الفريد فى شرح كلمة التوحيد என்ற எனது நூலை தெளிவான உள்ளத்தோடு வாசியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நலவை நாடியிருந்தால் திருக்கலிமாவின் எதார்த்தமான விளக்கத்தை தருவான். தெகிட்டாத பானத்தைப் புகட்டுவான். இன்ஷா அல்லாஹ்!

குறிப்பு: திருக்கலிமாவில் வந்துள்ள “இலாஹ்” என்பதற்கே “வணக்கத்திற்குரியது” என்று கருத்துக் கொடுப்பது பிழை என்று சொல்கிறோமே தவிர பொதுவாக “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்” என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. நாம் திருக்கலிமாவுக்கு கூறும் விளக்கத்தை சரியாக அறிந்தால் அவன் அல்லாஹ் தவிர வேறெதையும் வணங்கவே மாட்டான். இதனாலேயே இஸ்லாத்தை ஏற்ற மக்கத்து காபிர்கள் விக்கிரக வணக்கத்தை விட்டும் ஒதுங்கினார்கள்.

மேலதிக குறிப்பு: لا إله إلا الله என்ற திருக்கலிமாவில் - வசனத்தில் முதலில் வந்துள்ள لَا - லா என்பது لَا الَّتِيْ لِنَفْيِ الْجِنْسِ ஜின்ஸை “நபீF” செய்கின்ற “லா”வாகும். இதன் பொருள் எந்த “இலாஹ்” தெய்வமும் (கடவுளும்) இல்லை என்பதேயாகும். உதாரணமாக لَا رَجُلَ فِى الْبَيْتِ வீட்டில் எந்த ஒரு மனிதனும் இல்லை என்பது போன்று.

رَجُلٌ
என்பது نَكِرَةٌ குறிப்பில்லாத ஒரு “இஸ்ம்” ஆகும். எவரெல்லாம் رَجُلٌ என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமானவரோ அவரெல்லாம் رَجُلٌ என்ற சொல்லில் அடங்கிவிடுவார்கள். இந்த விதிப்படி لَا رَجُلَ என்று வசனம் வந்தால் “எந்த ஒரு மனிதனும் இல்லை” என்றுதான் பொருள் வர வேண்டும். இவ்வசனத்துக்கு கட்டையான மனிதன் எவருமில்லை என்றோ, நெட்டையான மனிதன் எவருமில்லை என்றோ, சிவப்பான மனிதன் எவருமில்லை என்றோ பொருள் கொள்ள முடியாது. இவ்வாறு ஒன்றில் கட்டுப்படுத்திப் பொருள் கொண்டால் رَجُلٌ என்ற “இஸ்ம்” “நகிறா”வாக இருக்க முடியாது. அது تَخْصِيْصْ குறிப்பாக்குவதன் மூலம் “நகிறா” என்ற இடத்திலிருந்து வெளியாகிவிடும். “மஃரிபா” என்ற இடத்திற்கு வந்து விடும். “தப்ரியா” உடைய “லா” என்பது نكرة குறிப்பு எதுவுமில்லாத ஒரு இஸ்மில்தான் வரும். இந்த விபரத்தின் படி لا إلهَ என்றால் “எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை” என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். “வணக்கத்திற்குத் தகுதியான, வணக்கத்திற்குத் தகுதியில்லாத எந்த தெய்வமும் இல்லை” என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். பொதுவாக எந்த ஒரு “இலாஹ்” தெய்வமும் இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும். اَلْإلهُ الْمُسْتَحِقُّ لِلْعِبَادَةِ வணக்கத்திற்குத் தகுதியான எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லையென்று பொருள் கொள்வது பிழையாகிவிடும். இது “நஹ்வு” எனும் மொழியிலக்கணத்திற்கே பிழையாகிவிடும்.

மிக நுணுக்கமாக ஆய்வு செய்தால் إله என்ற சொல் தெய்வத்திற்கு மட்டுமன்றி படைப்புக்கும் பயன்படுத்தக் கூடிய பொதுச் சொல் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு சொல்லாகும். இந்த விபரம் மேலே நான் குறிப்பிட்ட, நான் தொகுத்தெழுதிய الفرقد الفريد என்ற நூலில் உள்ளது. நபீ பெருமானார் அவர்கள் لا إله إلا الله என்று முதலாவதாகச் சொன்ன போது அந்நேரம் “கஃபா”வினுள் இருந்த 300க்கும் அதிகமான வணங்கப்பட்டு வந்த தெய்வங்களையும், வணங்கப்படாமலிருந்த படைப்புக்களையும் உள்வாங்கிய கருத்திலேயே அவ்வாறு சொன்னார்கள். இதன்படி திருக்கலிமாவுக்கு அல்லாஹ் அல்லாத எந்தவொரு தெய்வமும் இல்லை என்று சொல்வதை விட அல்லாஹ் அல்லாத - அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு படைப்பும் (சிருட்டியும்) இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும்.

மேலும் நபீ பெருமானார் அவர்கள் முதன் முதலாக திருக்கலிமாவைச் சொன்ன போது திரு மக்கா நகரில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களில் அநேகர் படிப்பறிவு இல்லாதவர்களாகவே இருந்தார்கள். அவர்களுக்கு تَأْوِيْلْ என்றாலே என்னவென்று தெரியாமலிருந்தது. الإله المستحقّ للعبادة என்று வலிந்துரை கொள்வதற்கும், வேறு விதமாக வலிந்துரை கொள்வதற்கும் தெரியாதவர்களாகவே இருந்தனர். இதனால்தான் أجعل الآلهة إلها واحدا என்று வியந்தார்கள்.

பெருமானார் அவர்கள் بُعثَ فى الأمّيّين படிப்பறிவற்றவர்கள் மத்தியிலேயே நபீயாக வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு الإله المستحقّ للعبادة என்ற வலிந்துரையும் தெரிந்திருக்கவில்லை. இதனால்தான் لو أنكم دليتم بحبل إلى الأرض السفلى لهبط على الله என்று சொன்னவர்கள் பின்னால் هو الأول والآخر والظاهر والباطن என்று ஓதிக் காட்டினார்கள். அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை என்பதையே இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது. இங்குதான் எல்லாம் அவனே என்ற ஞானம் பிறக்கிறது.

அன்புத் தோழா! எந்த அறிஞர் எத்தகைய விளக்கம் கொடுத்தாலும், எழுதினாலும் “இல்ஹாம்”, “கஷ்பு”, “இல்முல்லதுன்னீ” வழங்கப்பட்ட مكاشفين களின் விளக்கமே சரியானதென்பதை நீங்களும், நாங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதிகள்: நீங்கள் பிரதிகள் என்று குறிப்பிட்ட அனைவரினது தொலைபேசி இலக்கங்களும் இல்லாததால் அனைவரும் பார்வையிடும் வகையில் எனது முகநூல் பக்கத்திலும் பதிவிடுகிறேன்.

بسم الله الرحمن الرحيم،
وعليكم السّلام ورحمة الله وبركاته،

يا أخي مولوي رئيس الدين! لماذا تُدندِن مع مَن يُدندِنُ؟ أترغبُ فى شُهرتِك بين النّاس؟ أو فى ميلهم إليك؟ أو ترغب فيما عندهم؟ وأسألك أن تجيبني للأسئلة الآتية، من قلبك لا من لسانك، لماذا أرسلتَ نسخ خطابك إلى جمعيّة العلماء وإلى بعض العلماء أيضا؟ وما مقصودُك بإرسالِها إليهم؟ قل الحقّ ولو كان مرّا أو سرّا أو جهرا، وأنا ممّن جاوز ثمانين، أنا أعرف بفراسة الوجه الصالح والطالح، والطّيّب والخبيث،

يا مولوي رئيس الدين! ما لي أراك حيران فى فهم معنى كلمة الحقّ وخلاصتِها، فأوصيك إن شئتَ الحقّ والصّواب بمطالعة كتب المكاشفين والملهمين من الأولياء، كالفتوحات المكيّة وفصوص الحكم للشّيخ الأكبر محي الدين ابن عربي، والإنسان الكامل والنّادرات العينيّة للشّيخ عبد الكريم الجيلي، والحقيقة للشّيخ عبد القادر العالم الحيدرآبادي، واليواقيت والجواهر والكبريت الأحمر فى بيان علوم الشّيخ الأكبر للشّيخ عبد الوهّاب الشّعراني، ومشكاة الأنوار للغزالي، وغيرها من الكتب التي صنّفها العارفون الكاملون الواصلون،

وإذا أردت تحقيق مسائل كلمة الحقّ ووحدة الوجود فأتني بعد الإذن منّي بقلب صاف خالص خال عن الكبر والعجب والخطرات الشيطانيّة إن شئت الذّوق منّي، وإلّا فاطلب لك من تريد،

والله يبارك لي ولك فى العلوم والمعارف والأسرار،
خادم القوم،
عبد الرؤوف بن عبد الجواد،
25.11.2024

வஹ்ததுல் வுஜூத்-  தத்துவார்த்த ரீதியான விளக்கம்.---------அனைத்து சிருஷ்டிகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவையாகும். அவன் அவ...
10/06/2024

வஹ்ததுல் வுஜூத்- தத்துவார்த்த ரீதியான விளக்கம்.
---------
அனைத்து சிருஷ்டிகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவையாகும். அவன் அவற்றை தன்னிலிருந்தே படைத்தான். தோற்றச்செய்தான். அவற்றுக்கு அவனே கரு – மூலப்பொருள் ஆவான்.
ஒரு வஸ்துவை அல்லாஹ் படைப்பதாயினும் அல்லது ஒரு வஸ்துவை ஒரு மனிதன் செய்வதாயினும் அதற்கு ஒரு மூலம் –கரு (ஆரம்பம்) அவசியமாகும். எதுவாயினும் அது அதன் மூலத்திலிருந்தே ஆரம்பமாகி வரவேண்டும். ஏனெனில், “அதம்” இல்லாமை என்பது உண்டாக முடியாது.
எனவே அந்த மூலப்பொருளே அந்த வஸ்த்துவுக்கு “வுஜூத்” ஆகும். அந்த வுஜூதுதான் “வுஜூதே ஹகீகீ” எதார்த்தத்தில் வுஜூத் ஆகும். சிருஷ்டிக்கு எதார்த்தத்தில் “வுஜூத்” இல்லை. ஆயினும், அதனை “வுஜூதே இழாபீ” ஒன்றுடன் சேர்த்துப்பாக்கும் வகையிலுள்ள “வுஜூத்” எனப்படுகிறது.

சிருஷ்டிக்கு அல்லாஹ்வுடைய வுஜூது-உள்ளமைதான் கருவாகவும் மூலமாகவுமிருப்பதால் ஒரு வஸ்த்து அதன் மூலத்தை விட்டும் பிரியமாட்டாதென்ற தத்துவப்படி சிருஷ்டி அதன் மூலமான அல்லாஹ்வின் உள்ளமையை விட்டும் ஒருபோதும் பிரியமாட்டாது. மேலும் ஒரு வஸ்த்து அதன் மூலத்துக்கு வேறாகாமல் அது தானானதாயிருப்பது போல் சிருஷ்டி அல்லாஹ்வின் உள்ளமைக்கு வேறாகவுமாட்டாது. இது அதுதான். அது இதுதான். மெய்ப்பொருள் என்ற அடிப்படையில் இரண்டும் வெவ்வேறல்ல. ஒன்றுதான்.
உதாரணமாக தங்கமோதிரம் போன்று.

மோதிரத்துக்கு மூலம் தங்கம்.
மோதிரம் என்பது தங்கத்திலிருந்து வந்துள்ளது. அந்த மூலம்தான் இந்த மோதிரத்தின் “வுஜூத்” ஆகும். அதுவே “வுஜூத் ஹகீகீ” எதார்த்தமான வுஜூத் ஆகும். மோதிரத்துக்கு எதார்த்தத்தில் வுஜூத் இல்லை. இருப்பதுபோல் தெரிவது “வுஜூது இழாபி” ஒன்றுடன் சேர்த்துப்பார்ப்பது கொண்டுள்ள வுஜூத் மட்டும்தான். இது பொய் “வுஜூத்” ஆகும்.
மோதிரத்துக்கு எதார்த்தமான வுஜூத் உண்டென்று யாராவது சொன்னால் மோதிரமென்று ஒரு வஸ்த்து எதார்த்தத்தில் தங்கத்தை விட்டும் வேறாகி தனியாக இருப்பதை அவர் காட்ட வேண்டும். அவ்வாறு காட்ட முடியாது அவர் காட்டுவதாயின் மோதிரத்தின் வடிவத்தை காட்டலாம். அது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஏனெனில், அது தங்கத்தின் வடிவமேயாகும். அந்த வடிவம் மோதிரம் என்ற பெயரைப் பெற்றதேயன்றி எதார்தத்தில் தங்கத்துக்கு வேறான தங்கத்தை விட்டும் பிரிந்த தனியான வடிவமல்ல அதாவது தங்கத்தை விட்டும் பிரிந்த தனியான மோதிரமல்ல.

இவ்வாறுதான் அல்லாஹ்வும் அவனுடைய சிருஷ்டிகளுமாகும்.
தங்கத்தை அல்லாஹ்வுக்கும் மோதிரத்தை சிருஷ்டிக்கும் உதாரணமாகக் கொண்டு ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.
மோதிரத்தின் மூலம் தங்கம்தான் என்றும், மோதிரம் தங்கத்தை விட்டும் பிரியவில்லை என்றும் மோதிரம் தங்கத்துக்கு வேறான தனியான ஒரு பொருள் அல்லவென்றும் சொல்வது தவறா? எதார்த்தத்துக்கு முரணா? அவ்வாறு சொன்னவனை பைத்தியக்காரனென்று சொல்வது புத்திசாலித்தனமா?

அல்லாஹ்வுக்கு அவனின் சிருஷ்டிக்குமுள்ள தொடர்பு தங்கத்துக்கும் மோதிரத்துக்கும் உள்ள தொடர்பு போன்றதேயன்றி மோதிரத்துக்கும் பொற்கொல்லனுக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல.
தங்கத்துக்கும் மோதிரத்துக்குமுள்ள தொடர்பு நிலையானதும் முடிவற்றதுமாகும்.
ஆனால் மோதிரத்துக்கும் பொற்கொல்லனுக்குமுள்ளதொடர்பு நிலையானதல்ல. மோதிர வேலைமுடிந்ததோடு அவனின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

எனவே அல்லாஹ்வுக்கும் சிருஷ்டிக்குமுள்ள தொடர்பு;
மோதிரத்துக்கும் தங்கத்துக்குமுள்ளதொடர்பு போன்று, அலைக்கும் நீருக்குமுள்ள தொடர்பு போன்று,
கானல் நீருக்கும் வெப்பக்காற்றுக்குமுள்ள தொடர்பு போன்று
என்றறிதல் அவசியம்.

அல்லாஹ் அனைத்து சிருஷ்டிகளையும் தன்னிலிருந்து படைத்தான்; வெளிப்படுத்தினான்; தோற்றச் செய்தான் என்றால் ஒரு பெட்டிக்குள்ளிருந்த பொருட்களை அப்பெட்டியிலிருந்து வெளிப்படுத்தியதுபோல் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இது இரண்டு உள்ளமையைக் குறிக்கும்.
ஒன்று: பெட்டி மற்றது அதிலுள்ள பொருட்கள்.

இரண்டு உள்ளமைகள் இல்லை என்பதே இஸ்லாத்தின் முடிவு. துவிதம் இஸ்லாம் அல்ல.
மேலும், தங்கம்-மோதிரம் என்ற உவமானம் இரண்டுக்குமிடையேயான ஒரு குறிப்பிட்ட மூலப்பொருள் ரீதியான ஒற்றுமையை விளக்க கூறப்பட்டதே தவிர வேறு பல அம்சங்களில் அவ்வுதாரணத்தை பொருத்திக் கொள்ளக்கூடாது.

உதாரணமாக தங்கம் விகாரப்பட்டுத்தான் மோதிரமாக வந்துள்ளது அதனால் அல்லாஹ்வுடைய தாத்-உள்ளமை விகாரப்பட்டு சிருஷ்டியாக வந்துள்ளது என்று எண்ணிவிடக்கூடாது.
“ஹுவல் ஆன கமா கான”
படைப்புகளை படைக்க முன்னர் அவன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே படைத்த பின்னரும் இருக்கின்றான்.

ஸூபிகளும் இறைஞானிகளும் வஹ்ததுல் வுஜூத் என்ற இறையியல் தத்துவத்தை கற்பனை செய்தோ அல்லது தமது சொந்த கருத்துக்களாகவோ சொல்லவில்லை. ஆயினும் அவர்கள் தமது இந்த வாதத்துக்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வாசகங்களையும் நபீமொழிகளையுமே கூறுகிறார்கள். குறிப்பாக லா இலாஹ இல்லல்லாஹு என்ற இஸ்லாமிய மூலப் பிரமாணமான திருக்கலிமாவை – திருவசனத்தை ஆதாரமாக கூறுகின்றார்கள்.
“லா இலாஹ இல்லல்லாஹு” என்ற மூலமந்திரமும், “தஸவ்வுப்” என்ற ஸூபிஸமும், அல் குர்ஆனில் குறிப்பிடப்படும் “ஹிக்மத்” என்ற இறைஞானமும் அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை; அவனுக்கு வேறான ஒன்றுமில்லை; எல்லாமாய் உள்ளவன் அவனே; உள்ளது ஒன்றே என்ற “வஹ்ததுல் வுஜூத்” (Oneness of being) தத்துவத்தையே கூறுகின்றன.

Address

Medina
00966

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஏகத்துவ மெய்ஞானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category