People's Voice

People's Voice கசத்தாலும் சொல்வது உண்மை!

“உங்கள் கலாசார அடையாளத்துடன் வாழ எந்த சமூகமும் அச்சப்படத் தேவையில்லை”🚨❤️ஜனாதிபதி அநுரகுமாரதமது கலாசார மற்றும் சமய அடையாள...
10/09/2026

“உங்கள் கலாசார அடையாளத்துடன் வாழ எந்த சமூகமும் அச்சப்படத் தேவையில்லை”🚨❤️

ஜனாதிபதி அநுரகுமார

தமது கலாசார மற்றும் சமய அடையாளங்களுடன் வாழ்வதற்கு நாட்டில் எந்தவொரு சமூகமும் அச்சப்படத் தேவையில்லாத சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

எந்தவொரு சமூகத்தினருக்கும் அவர்களின் கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பற்ற தன்மையோ அல்லது அச்சமோ ஏற்படாத வகையில் சூழலை உருவாக்குவதுடன், அவர்களின் உளவியல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படும் இனவாதப் போக்குகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல்களின் தன்மையை சரியாகப் புரிந்துகொள்வது அவசியம் எனவும், எதிர்காலத்தில் மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்படாத வகையில் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக, சீருடை தொடர்பான பிரச்சினைகள் போன்ற தொழில்நுட்ப அல்லது நிர்வாக ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் இனவாத அல்லது மத ரீதியான பதற்றங்கள் உருவாகாத வகையில் அவற்றை உரிய முறையில் புரிந்துகொண்டு தீர்வு காண்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காமல் அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

அதேபோன்று, நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதித்து வரும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கும் உலமா சபை தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் சமூகம் தமது சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

“எந்தவொரு சமூகமும் தனது கலாசார அடையாளம் காரணமாக பாதுகாப்பற்றதாகவோ அச்சத்துடனோ வாழ வேண்டிய நிலை ஏற்படாத சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்” என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

゚viralシ

12ஆம் திகதி மொட்டு கட்சி மேடையில் அர்ச்சுனா எம்.பி.! அரசுக்கெதிராக குரல் கொடுக்கப் போவதாகவும் அறிவிப்பு🚨எதிர்வரும் 12ஆம்...
10/09/2026

12ஆம் திகதி மொட்டு கட்சி மேடையில் அர்ச்சுனா எம்.பி.! அரசுக்கெதிராக குரல் கொடுக்கப் போவதாகவும் அறிவிப்பு🚨

எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) கூட்டத்தில் தான் பங்கேற்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் வழங்கிய பல்வேறு உறுதிமொழிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அர்ச்சுனா எம்.பி., அந்த விடயங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் நோக்கிலேயே எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தான் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அவற்றை வெளிப்படுத்துவதற்காகவே கூட்டத்தில் பங்கேற்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆளும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வரும் அர்ச்சுனா எம்.பி., எதிர்க்கட்சியான மொட்டு கட்சியின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

குறிப்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது அரசியல் செயற்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அதன் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு, அவரது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், கூட்டத்தில் பங்கேற்பது மொட்டு கட்சியில் இணைவதற்கான நடவடிக்கையா அல்லது வடக்கு மக்களின் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான அரசியல் நடவடிக்கையா என்பது தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.

எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. எந்த வகையில் கருத்துகளை முன்வைக்கப் போகிறார் என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

゚viralシ

நாமல் அரசியலில் இருந்து விலகினால் மனைவி லிமினி களமிறங்குவாரா?🚨தந்தையின் அதிரடி பதில்!சிறையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...
10/09/2026

நாமல் அரசியலில் இருந்து விலகினால் மனைவி லிமினி களமிறங்குவாரா?🚨

தந்தையின் அதிரடி பதில்!

சிறையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி வீரசிங்க எதிர்காலத்தில் தீவிர அரசியலில் களமிறங்கப் போவதாக வெளியாகும் தகவல்களை அவரது தந்தையும் வர்த்தகருமான திலக் வீரசிங்க நிராகரித்துள்ளார்.

‘Truth with Chamuditha’ YouTube நிகழ்ச்சிக்கு வழங்கிய விரிவான நேர்காணலில் அவர், எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள SLPP பேரணியில் லிமினி மேடையேறப் போவதாக தனக்கு எந்தத் தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் லிமினி அரசியல் மேடையில் தோன்றுவது பொருத்தமானதாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நேரத்தில் அவரது கடமை அரசியல் மேடையில் ஏறுவது அல்ல. குடும்பம், குழந்தைகள் மற்றும் நாமலை கவனித்துக்கொள்வதே அவரது பொறுப்பு” என திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ நீண்டகால சிறைத்தண்டனைக்கு உள்ளானால் லிமினி அரசியலுக்கு வருவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்க முடியுமா என கேட்கப்பட்டபோது, அது தற்போதைய நிலைமையிலிருந்து மாறுபட்ட சூழ்நிலை என அவர் பதிலளித்துள்ளார்.

அதேவேளை, நாமல் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் லிமினியை எதிர்கால ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் குடும்பத்திற்குள் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாமல் ராஜபக்ஷ தனது வர்த்தக நடவடிக்கைகளில் பங்குதாரராக இருந்ததாகவும், தனது நிறுவனங்கள் சட்டவிரோத பணத்தை சட்டபூர்வமான சொத்துகளாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் திலக் வீரசிங்க மறுத்துள்ளார்.

நாமல் தனது வர்த்தக நிறுவனங்களில் எந்தவொரு பங்கையும் கொண்டிருக்கவில்லை என்றும், நிறுவனங்களுக்கு வந்த நிதி அனைத்தும் சட்டபூர்வமான வழிகளிலேயே கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

゚viralシ

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சபாநாயகர் வேண்டாம், சான்றிதழ் இல்லாத ரன்வல வரவும்🚨நாடாளுமன்றத்தில் அமளிசபாநாயகர் கலாநிதி ஜ...
10/09/2026

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சபாநாயகர் வேண்டாம், சான்றிதழ் இல்லாத ரன்வல வரவும்🚨

நாடாளுமன்றத்தில் அமளி

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்க எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையால், நாடாளுமன்றச் சபையில் பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, சபாநாயகருக்கு எதிரான இந்த இலஞ்ச ஊழல் விசாரணை தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைச் சபையில் சமர்ப்பிக்க முயன்றபோதே இந்த அமளி தொடங்கியது.

அங்கு பாராளுமன்ற உறுப்பினரின் உரையை குறுக்கிட்ட சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன, அன்றைய நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பான விடயங்கள் குறித்துப் பேச இடமளிக்க முடியாது என்றும், உரிய தலைப்பின்கீழ் மட்டுமே கருத்துக்களைத் தெரிவிக்குமாறும் கூறினார். இல்லையெனில் உரையை நிறுத்த வேண்டிவரும் என்றும் சபாநாயகர் எச்சரித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த தயாசிறி ஜெயசேகர, சபாநாயகருக்கு எதிரான இலஞ்ச ஊழல் விசாரணை குறித்து அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ள பின்னணியில், அது குறித்துக் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிக்கு முழு உரிமை உண்டு எனச் சுட்டிக்காட்டினார்.

“விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் உங்களால் அந்தச் நாற்காலியில் அமர்ந்திருக்க முடியாது. இதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாவிட்டால், பிரதிச் சபாநாயகரிடம் நாற்காலியைக் ஒப்படைத்துவிட்டு வெளியே செல்லுங்கள்” என தயாசிறி ஜெயசேகர நேரடியாகச் சபாநாயகரிடம் கூறினார்.

அதன்பின்னர், பிரதிச் சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலியைப் பேசுமாறு சபாநாயகர் அறிவித்ததையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து “வெட்கக்கேடு… வெட்கக்கேடு…” எனக் கோஷமிட்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபாநாயகருக்கு எதிராக இவ்வாறான விசாரணை இடம்பெறும் வேளையில் அவர் அப்பதவியில் தொடர்வது ஒழுக்கநெறியல்ல என்றும், விசாரணைகளின் சுயாதீனத்தன்மைக்கு இடமளித்து அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என அரசாங்க மேடைகளில் கூறினாலும், நாடாளுமன்றத்திற்குள் சபாநாயகர் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி கொள்கைகளை மதித்து, தேவைப்பட்டால் மருத்துவருமான பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் சபாநாயகர் பதவியை ஒப்படைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பட்டச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் அசோக்க ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்திருக்க முடியும் என்றும், சான்றிதழ் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

゚viralシ

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை!🚨பிமல் ரத்நாயக்க அதிரடிஇலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் இனிவரும் காலங்களில் ...
10/09/2026

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை!🚨

பிமல் ரத்நாயக்க அதிரடி

இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ இல்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனிமேல் நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்‌ஷ அரசியல் கட்சிக்கு வந்துள்ளதால் அந்தக் கட்சிக்கான ஆதரவு இரட்டிப்பாகும் என சிலர் கூறுவது எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத வெறும் கதையாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்‌ஷ தரப்பினரும் தாங்கள் செய்த தவறுகளைத் தாங்களே உணர்ந்துள்ளதால்தான் தற்போது கைது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசுகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது நாட்டின் வேறு பகுதிகளில் கூட்டங்களை ஏற்பாடு செய்தாலும், நாட்டு மக்கள் ஏற்கனவே மிகவும் தெளிவானதொரு அரசியல் தீர்மானத்தை எடுத்துவிட்டதாகவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் நாடகங்களுக்கோ மேடைப் பேச்சுகளுக்கோ கட்டுப்பட்டு இலங்கையின் சுயாதீன நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்புகளையோ சட்ட நடவடிக்கைகளையோ ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, செப்டெம்பர் 12ஆம் திகதியோ அல்லது 13, 14, 15ஆம் திகதிகளிலோ ராஜபக்‌ஷ தரப்பினர் பேரணிகளையோ கூட்டங்களையோ நடத்தினாலும், அது அரசாங்கத்தின் செயற்பாடுகளிலோ அல்லது சட்ட நடவடிக்கைகளிலோ எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

゚viralシ

இனி ATM முன் மாற்றுத் திறனாளிகள் உதவி கேட்க வேண்டியதில்லை!❤️அனைத்து ATM-களிலும் புதிய வசதி!பார்வைக் குறைபாடுள்ளவர்கள் உள...
10/09/2026

இனி ATM முன் மாற்றுத் திறனாளிகள் உதவி கேட்க வேண்டியதில்லை!❤️

அனைத்து ATM-களிலும் புதிய வசதி!

பார்வைக் குறைபாடுள்ளவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளை பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வசதிகள் நடைமுறைக்கு வந்தால், பார்வைக் குறைபாடுள்ள மற்றும் ஏனைய மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்கள் பிறரின் உதவியின்றி தங்களது ATM மற்றும் வங்கிச் சேவைகளை சுயமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

குரல் வழிகாட்டல் மூலம் ATM பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், பிரெய்லி விசைப்பலகை மூலம் தேவையான கட்டளைகளை வழங்கவும் முடியும் என்பதால், வங்கிச் சேவைகளுக்கான அணுகல் மேலும் எளிதாகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் சமமான நிதிச் சேவைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த நடவடிக்கை, அனைவரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவையை நோக்கிய முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

​ ゚viralシ

கொத்தமல்லி விலையும் 100 கிராம் 125 ரூபாயாக அதிகரிப்பு🚨இரண்டு வருடங்களுக்கு முன்னர் 70 முதல் 80 ரூபா வரையான விலையில் விற்...
10/09/2026

கொத்தமல்லி விலையும் 100 கிராம் 125 ரூபாயாக அதிகரிப்பு🚨

இரண்டு வருடங்களுக்கு முன்னர் 70 முதல் 80 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட 100 கிராம் கொத்தமல்லியின் தற்போதைய சில்லறை விலை 125 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில்லறை சந்தையில் 100 கிராம் கொத்தமல்லி 125 ரூபாவாக காணப்படுகின்ற போதிலும், அதன் மொத்த விலை ஒரு கிலோகிராம் 450 ரூபா அல்லது அதற்கு அண்மித்த விலையாகக் காணப்படுவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யா, உக்ரைன், மொராக்கோ போன்ற நாடுகளில் இருந்து நாட்டிற்கு கொத்தமல்லி இறக்குமதி செய்யப்படுவதோடு, போர் நிலைமை மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக கொத்தமல்லியின் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சங்கமும் தெரிவித்துள்ளது.

゚viralシ

Breaking News🚨ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு🚨முன்னாள் ஜனாதிபதி மைத்த...
10/09/2026

Breaking News🚨

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு🚨

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியாகாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வ செல்லுபடித்தன்மை தொடர்பில் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த தீர்ப்பு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

゚viralシ

ஜனாதிபதி அநுரகுமார அறிவித்தபடி நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரணம் வழங்கப்பட்டது🚨நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வௌ்ளப்...
10/09/2026

ஜனாதிபதி அநுரகுமார அறிவித்தபடி நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரணம் வழங்கப்பட்டது🚨

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வௌ்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கை ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது.

கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி நேபாளத்தில் பாரிய வௌ்ளம் ஏற்பட்டது.

இந்த அனர்த்தத்தில் 1300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 5100 பேர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன் தமது வீடுகளையும், வர்த்தகங்களையும் இழந்து அங்குள்ள மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலுக்கு அமைய நேபாளத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் அண்மையில் வாக்குறுதி அளித்திருந்தது.

அதனை நிறைவேற்றும் வகையில், நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை நேபாள அரசாங்கத்திடம் இன்று (9) கையளித்துள்ளதாக காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

காத்மண்டுவில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து நேபாள வெளிவிவகார அமைச்சர் சிஷிர் கனாலிடம் (Shisir Khanal) இந்த நிதி உதவியானது உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது, தூதுவர் தெல்பிட்டிய இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நேபாள மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், பங்கினையும் மீண்டும் வலியுறுத்தியதுடன், பேரழிவில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தனது இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கும், நேபாள அரசாங்கத்தின் தற்போதைய மனிதநேய, நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பற்கும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியைக் கையளிப்பது இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீண்டகால நட்புறவு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேலும் பிரதிபலிக்கிறது.

ஆபத்தான காலங்களில் நேபாளத்துடனும் அதன் மக்களுடனும் உறுதுணையாக நிற்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை கடமைப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதுடன், தற்போதைய நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான பொருத்தமான வழிகளை ஆராயும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

゚viralシ

“நல்ல தொடுகை – மோசமான தொடுகை” குறித்து மீண்டும் பேச வேண்டிய நேரம்🚨எல்லோருக்குமான விழிப்புணர்வுப் பதிவு!பொது நிகழ்வொன்றில...
09/09/2026

“நல்ல தொடுகை – மோசமான தொடுகை” குறித்து மீண்டும் பேச வேண்டிய நேரம்🚨

எல்லோருக்குமான விழிப்புணர்வுப் பதிவு!

பொது நிகழ்வொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் அரசியல்வாதி ஒருவருக்கு வெற்றிலைத் தாம்பூலம் வழங்கும் சந்தர்ப்பத்தில், அவர் அந்தச் சிறுமியின் கையைப் பிடித்திருந்த விதத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இலங்கையில் மீண்டும் ஒருமுறை “நல்ல தொடுகை – மோசமான தொடுகை” (Good Touch – Bad Touch) தொடர்பில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, குறித்த அரசியல்வாதியின் இதுபோன்ற நடத்தைகளைக் காட்டுவதாகக் கூறப்படும் பழைய புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

எவ்வாறாயினும், இது ஒரு தனிநபர் மீது மட்டும் குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டு கடந்து செல்லக்கூடிய சம்பவம் அல்ல. சிலவேளைகளில் அவருக்கும் இவ்விடயம் தொடர்பில் போதிய புரிதல் இல்லாமல் இருக்கலாம்; அதுகுறித்த அறிவும் விழிப்புணர்வும் குறைவாக இருக்கலாம்.

சில தரப்பினர் இதனை வெறுமனே தந்தை பாசம் அல்லது அன்பின் வெளிப்பாடாக கருத முயற்சித்தாலும், மற்றொரு தரப்பினர் இது குழந்தைகளின் தனிப்பட்ட உடல் எல்லைகளை (Physical Boundaries) மதிக்காத ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையை வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், அரசியல் மேடையில் ஆளும் தரப்பும் எதிர்க்கட்சியும் தங்களுக்கிடையே விவாதங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சமூகமாக நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது அதைவிட முக்கியமான ஒரு விடயத்தின் மீதே.

அதாவது, குழந்தைகளுக்கு தமது உடல் தொடர்பில் இருக்கும் சுயாதீன உரிமை (Body Autonomy), தனிப்பட்ட எல்லைகள் மற்றும் சம்மதம் (Consent) தொடர்பில் பெரியவர்கள் மத்தியிலும் காணப்படும் போதிய புரிதலின்மையே அது.

“நல்ல தொடுகை – மோசமான தொடுகை” என்றால் என்ன?

இந்தக் கருத்து வெறுமனே ஒரு ஒழுக்கப் போதனை அல்ல. ஒரு குழந்தை தனது உடல் தொடர்பான சுயாதீனத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படை வாழ்க்கைத் திறன்களில் ஒன்றாகும்.

உள்ளாடை விதி (Swimsuit / Underwear Rule)

நீச்சல் உடை அல்லது உள்ளாடையால் மூடப்படும் உடலின் பகுதிகள் மிகவும் தனிப்பட்டவை என்பதை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
மருத்துவத் தேவையின் காரணமாக, பெற்றோரின் முன்னிலையில் மருத்துவர் மேற்கொள்ளும் பரிசோதனை போன்ற அவசியமான சூழ்நிலைகளைத் தவிர, வேறு எவருக்கும் அந்தப் பகுதிகளைத் தொடவோ, பார்க்கவோ அல்லது காட்டுமாறு குழந்தையை கட்டாயப்படுத்தவோ உரிமை இல்லை என்பதை குழந்தை அறிந்திருக்க வேண்டும்.

“வேண்டாம்” என்று சொல்லும் உரிமை (Right to Say “NO”)

யாராவது தன்னைத் தொடும்போது, கட்டிப்பிடிக்கும்போது அல்லது கையைப் பிடிக்கும்போது தனக்கு அசௌகரியம், பயம் அல்லது விருப்பமின்மை ஏற்படுமானால், அந்த நபர் எவ்வளவு அதிகாரம் கொண்டவராக இருந்தாலும், ஆசிரியராக இருந்தாலும், மதிப்பிற்குரிய நபராக இருந்தாலும் அல்லது நெருங்கிய உறவினராக இருந்தாலும் “வேண்டாம்” என்று கூறவும், அங்கிருந்து விலகிச் செல்லவும் தனக்கு முழுமையான உரிமை உண்டு என்பதை குழந்தை அறிந்திருக்க வேண்டும்.

புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் அச்சமூட்டும் உண்மை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் குழந்தைகள் தொடர்பான 5,523 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றில்:
* குழந்தைகள் மீதான கொடுமைகள் தொடர்பான 1,100 முறைப்பாடுகள்
* பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான 213 முறைப்பாடுகள்
* கடத்தல் தொடர்பான 99 முறைப்பாடுகள்
* குழந்தைகளை வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 100 சம்பவங்கள்
அடங்குகின்றன.

எனினும், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மையான நிலைமையின் மேற்பரப்பில் தெரியும் சிறிய பகுதி — “பனிப்பாறையின் நுனி” (Tip of the iceberg) — மட்டுமே என்பதாகும்.

இலங்கையில் இடம்பெறும் மொத்த சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் சட்டத்தின் முன் பதிவாகின்றவை வெறும் 0.15 சதவீதம் என்ற மிகக் குறைந்த விகிதத்தில் இருப்பதாகக் கூறப்படுவதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

ஆபத்து பெரும்பாலும் அந்நியர்களிடமிருந்து வருவதில்லை

பல பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு “தெரியாதவர்களிடம் (Strangers) எச்சரிக்கையாக இருங்கள்” என்று கற்றுக்கொடுக்கின்றனர்.
ஆனால், உண்மை நிலைமை இதற்கு முற்றிலும் மாறானது.

உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் இடம்பெறும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை குழந்தைக்கு நன்கு தெரிந்த, நம்பிக்கைக்குரிய நபர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

அவர் உறவினராகவோ, அயலவராகவோ, ஆசிரியராகவோ, தனிப்பட்ட வகுப்பு ஆசிரியராகவோ அல்லது மதத் தலைவராகவோ இருக்கலாம்.

கொழும்பில் உள்ள போதனா வைத்தியசாலை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு 2015–2019 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான ஆய்வில், அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளில் 94.5 சதவீதமானவர்கள் குழந்தைக்கு நன்கு தெரிந்த நபர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே ஆய்வில், சம்பவங்கள் இடம்பெற்ற முதல் வாரத்துக்குள் வெறும் 42.7 சதவீதமான சம்பவங்கள் மட்டுமே பெரியவரொருவரிடம் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், 28.7 சதவீதமான குழந்தைகளில் கடுமையான உளவியல் பின்விளைவுகள் (Psychological Sequelae) காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகளில் 99.9 சதவீதமானவர்கள் ஆண்கள் எனவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

“இது நமது ரகசியம்” — ஆபத்தான உளவியல் பொறி

குற்றவாளிகள் குழந்தைகளை கட்டுப்படுத்துவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தும் உளவியல் உத்திகளில் ஒன்று:

“இது நமது ரகசியம்.”

எனவே, குழந்தைகளுக்கு “ரகசியம்” (Secret) மற்றும் “ஆச்சரியம்” (Surprise) ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.

பெற்றோரிடமோ அல்லது நம்பிக்கைக்குரிய பெரியவரிடமோ சொல்லாமல் மறைத்து வைக்க வேண்டிய எந்தவொரு “உடல் தொடர்பான ரகசியமும்” இல்லை என்பதை குழந்தைக்கு தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்.

மேற்கண்ட ஆய்வின்படி, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான குழந்தைகளில் சம்பவம் இடம்பெற்ற ஒரு வாரத்துக்குள் அதுகுறித்து பெரியவரொருவரிடம் தெரிவித்தவர்கள் 42.7 சதவீதம் மட்டுமே.

அவமானம், பயமுறுத்தல் மற்றும் குற்றவாளி சமூகத்தில் ‘அதிகாரம் கொண்டவர்’ என்ற நிலை போன்ற காரணங்களால், குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்ததை வெளிப்படுத்துவதில் தாமதிக்கின்றனர்.
இதன் விளைவாக, 28 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான உளவியல் பின்விளைவுகள் உள்ளிட்ட தீவிரமான மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

குழந்தைகளுக்கு முன்னர் பெரியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

இலங்கையில் காணப்படும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று, குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து கற்றுக்கொடுக்கும் அதே நேரத்தில், பெரியவர்கள் அவர்களின் உடல் எல்லைகளைப் புறக்கணித்து நடந்து கொள்வதாகும்.

வெற்றிலைத் தாம்பூலம் வழங்கும் சிறுமியின் கையைப் பிடித்திருப்பது போன்ற சம்பவங்களை “தந்தை பாசம்” என்று கூறி இயல்பான ஒன்றாக மாற்ற முயற்சிப்பது, பிறரின் உடல் எல்லைகளை மதிப்பதில் ஒரு சமூகமாக நாம் இன்னும் எந்தளவுக்கு பின்தங்கியிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக பாடசாலைகள், பொது நிகழ்வுகள் அல்லது குடும்ப சந்திப்புகளில், குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை கட்டிப்பிடிப்பது, தூக்குவது அல்லது தொடுவது போன்ற செயல்கள் இன்னமும் எமது கலாசாரத்தில் “அன்பின் வெளிப்பாடு” என்றே பார்க்கப்படுகின்றன.

அதேபோன்று, அண்மையில் அனுராதபுரம் பகுதியில் பிரபலமான மதஸ்தலம் ஒன்றையும் பிக்குவொருவரையும் மையமாகக் கொண்டு பதிவான சம்பவம் உள்ளிட்ட, சமூகத்தில் உயர்ந்த மரியாதையைப் பெற்ற பல்வேறு நபர்கள் தொடர்பாக அவ்வப்போது முன்வரும் குற்றச்சாட்டுகளும் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகின்றன.

ஆபத்து பெரும்பாலும் நாம் கண்மூடித்தனமாக நம்பும் ‘மரியாதைக்குரிய’ நபர்கள் மற்றும் சூழல்களிலிருந்தே வரக்கூடும்.

இலங்கை பெற்றோர்கள் 385 பேரை உள்ளடக்கிய ஆய்வொன்றில், அவர்களில் 67.3 சதவீதமானவர்களுக்கு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அது தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து போதிய அறிவு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

குழந்தைகளுடன் பாலியல் சுகாதாரம் அல்லது உடல் பாதுகாப்பு தொடர்பில் பேசுவது இன்னமும் பல குடும்பங்களில் “வெட்கப்பட வேண்டிய விடயம்” என்றே கருதப்படுகிறது.

ஒரு குழந்தை தனக்கு நேர்ந்த துஷ்பிரயோகம் குறித்து கூறும்போது, குடும்பத்தின் அல்லது நிறுவனத்தின் “கௌரவத்தைப் பாதுகாக்கும்” நோக்கில் “வாயை மூடிக்கொண்டு இரு” என்று குழந்தையை கட்டுப்படுத்துவதும், நடந்த சம்பவத்திற்கே குழந்தையைப் பொறுப்பாக்குவதும் (Victim Blaming) ஆயிரக்கணக்கான குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் அந்த வலியை மனதுக்குள் புதைத்துக்கொண்டு அமைதியாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளுகின்றன.

நாம் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகள் பாதுகாப்பு என்பது சமூக ஊடகங்களில் ஒரு காணொளியைப் பார்த்து சில நாட்கள் ஆவேசமாகப் பேசிவிட்டு பின்னர் மறந்துவிட வேண்டிய ஒரு விடயம் அல்ல.

வெளிப்படையாகப் பேசுங்கள்
உடலின் தனிப்பட்ட உறுப்புகளின் சரியான பெயர்கள் மற்றும் அவற்றின் எல்லைகள் குறித்து குழந்தைகளுடன் வெட்கமின்றி, திறந்த மனதுடன் பேசுங்கள்.

குழந்தையை நம்புங்கள்
யாராவது ஒருவர் தன்னை விசித்திரமாக நடத்துவதாகவோ, தேவையற்ற முறையில் தொடுவதாகவோ ஒரு குழந்தை சிறிய அறிகுறியைக் கூட வெளிப்படுத்தினால், அந்த நபர் எவ்வளவு அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் அல்லது குடும்பத்திற்கு நெருக்கமானவராக இருந்தாலும், அதை அலட்சியப்படுத்தாமல் குழந்தை சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.

குழந்தையின் எல்லைகளை மதியுங்கள்
ஒரு குழந்தைக்கு விருப்பம் இல்லையென்றால் யாருக்கும் வணக்கம் செலுத்தவோ, கைகுலுக்கவோ அல்லது கட்டிப்பிடிக்கவோ கட்டாயப்படுத்த வேண்டாம்.

தனது உடல் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது என்பதை குழந்தைக்கு நடைமுறையிலேயே உணர்த்துங்கள்.

உங்களுக்கோ உங்கள் குழந்தைக்கோ அவசர உதவி தேவைப்பட்டால்
குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவி தேவைப்பட்டாலோ, கீழ்க்கண்ட சேவைகள் மூலம் உடனடியாக முறைப்பாடு செய்யுங்கள்.

1929 — தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 24 மணி நேர இலவச சிறுவர் உதவி தொலைபேசி சேவை (Childline)
109 — சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகம்
119 — பொலிஸ் அவசர தொலைபேசி சேவை

மின்னஞ்சல்: [email protected]

குறிப்பு: நீங்கள் வழங்கும் தகவல்களும் உங்கள் அடையாளமும் அதிகபட்ச ரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.

Source - The Leader Sinhala News

゚viralシ

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when People's Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share