Imayavaramban

Imayavaramban Tamil poet · Literary commentator · Translator · Pencil artist

பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் சமய தத்துவங்களைப் பற்றியும் நான் அறிந்தவற்றைக் கட்டுரையாகவும் கவிதை நடையிலும் தமிழன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்.

குருவருள் நமைக்காக்கும் சோதி🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆கவிதை : இமயவரம்பன் (பல்லவி)குருவருள் நமைக்காக்கும் சோதி - நெஞ்சில்… குவியிருள் தன...
07/29/2026

குருவருள் நமைக்காக்கும் சோதி
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

கவிதை : இமயவரம்பன்

(பல்லவி)
குருவருள் நமைக்காக்கும் சோதி - நெஞ்சில்
… குவியிருள் தனைப்போக்கும் சோதி

(அனு பல்லவி)
ஒருதுயர்ப் புயல்சூழ்ந்த போதும் - நம்பும்
… உளத்தினில் அணையாத சோதி

(சரணம்)
மிகுந்திடும் பயமொழிய விழிப்பூட்டும் சோதி
அகந்தையின் மிகையொழிய அறிவேற்றும் சோதி
செகம்தரும் மயலொழியத் தெளிவூட்டும் சோதி
அகம்புறம் மறுவொழிய அறம்நாட்டும் சோதி. (1) (குருவருள்)

கலங்கிடும் உளங்களுக்கோர் கதியாகும் சோதி
கலங்கரை விளக்கமென வழிகாட்டும் சோதி
மலர்ந்திடும் முழுநிலவாய் மகிழ்கூட்டும் சோதி
நலந்திகழ் இறையுணர்வில் நமையாழ்த்தும் சோதி. (2) (குருவருள்)

- இமயவரம்பன்

YouTube link in first comment

கொட்டும் முரசொலிக்க, வெற்றிக் கொடி பறக்க, பட்டம் பெறுவோரைப் பாராட்டி மாபெரும் விழாக் கண்ட மாசசூசெட்ஸ் தமிழ்ச் சங்கத்தார்...
07/11/2026

கொட்டும் முரசொலிக்க, வெற்றிக் கொடி பறக்க, பட்டம் பெறுவோரைப் பாராட்டி மாபெரும் விழாக் கண்ட மாசசூசெட்ஸ் தமிழ்ச் சங்கத்தார்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இந்த விழாவை முன்னிட்டு நான் எழுதிய இந்த ஊக்கக் கவிதையை இங்கே பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! 🙏

பட்டம் பெறும் மாணவர்களுக்காக ஊக்கமூட்டும் அழகிய கவிதையைப் படைத்து, எங்கள் பட்டமளிப்பு விழாவிற்கு இலக்கியச் சிறப்பைச் சேர்த்த திரு. இமயவரம்பன் Anand Ramanujam அவர்களுக்கு மாசசூசெட்ஸ் தமிழ்ச் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்!!

In Audio Format: https://suno.com/s/RkWcKBIwWn9KzUCX

அரங்க நகர் உறை பெருமாளே! - திருமால் திருப்புகழ்🔆🔆🔆🔆🔆🔆(“கரம் கமலம்” என்னும் திருப்புகழ்ப் பாட்டின் மெட்டில் அமைந்த திருமா...
06/24/2026

அரங்க நகர் உறை பெருமாளே! - திருமால் திருப்புகழ்
🔆🔆🔆🔆🔆🔆
(“கரம் கமலம்” என்னும் திருப்புகழ்ப் பாட்டின் மெட்டில் அமைந்த திருமால் துதி)

பாடல்: இமயவரம்பன்
🔆🔆🔆🔆🔆

அருந்தும் உணவுடன் விரும்பு பொருள்பல
அடைந்து சுகமுற - அலையாமல்
அடர்ந்த இருள்கெட நடந்து புவியினை
அளந்த திருவடி - பணியேனோ!

விரைந்து கரியிடர் களைந்த உனதருள்
வியந்து விரிபுகழ் - மொழியேனோ
மிகுந்த துயருற மெலிந்த மனமதில்
மிளிர்ந்த திருவுரு - நினையேனோ

சிரங்கள் தசமவை சரிந்து விழவொரு
சிவந்த சரமழை - பொழிவோனே!
திரண்ட தயிர்வெண்ணெய் நிறைந்த குடமது
திறந்து திருடிடும் - இனியானே!

அரும்பு நறுமலர் விளங்கு திருமகள்
அமர்ந்து நிலைபெறும் - அணிமார்வா!
அனந்தன் அணைமிசை உறங்கு மலையென
அரங்க நகருறை - பெருமாளே!

- இமயவரம்பன்
🔆
YouTube link in first comment
🙏

நெஞ்சுக்கு இதமாம் நம்பிக்கை🔆 🔆 🔆(பல்லவி)நெஞ்சுக்கு இதமாம் நம்பிக்கை - என்றும்நீங்காத் துணையாம் நம்பிக்கை.(அனு பல்லவி)அஞ்...
06/20/2026

நெஞ்சுக்கு இதமாம் நம்பிக்கை
🔆 🔆 🔆

(பல்லவி)
நெஞ்சுக்கு இதமாம் நம்பிக்கை - என்றும்
நீங்காத் துணையாம் நம்பிக்கை.

(அனு பல்லவி)
அஞ்சும் இதயம் அமைதிபெற - வரும்
அன்பின் ஒளியாம் நம்பிக்கை.

🔆 🔆 🔆

(சரணம்)
கனவுகள் பலித்திடச் சுவடுகள் பதித்திடக்
கதவுகள் திறந்திடும் நம்பிக்கை - நம்
மனதினில் நினைத்ததை நிறைவுடன் முடித்திட
வலிமையை வழங்கிடும் நம்பிக்கை. (1) (நெஞ்சுக்கு)

🔆 🔆 🔆

முழுப் பாடலை YouTube-ல் காணலாம். இணைப்பு முதல் comment-ல்.

Full song in YouTube. Link in first comment. 🙏

அரங்கனைக் கண்டேன் ---------------------பாடல் : இமயவரம்பன்--------------------🌸(பல்லவி)அரங்கனைக் கண்டேன் அகமகிழ்ந்தேன் - ...
06/12/2026

அரங்கனைக் கண்டேன்
---------------------
பாடல் : இமயவரம்பன்
--------------------
🌸
(பல்லவி)
அரங்கனைக் கண்டேன் அகமகிழ்ந்தேன் - அவன்
… அருள்மிகு வடிவில் எனைமறந்தேன்

(அனு பல்லவி)
கரங்களைக் குவித்துக் கழல்பணிந்தேன் - மனம்
… கனிந்திட உருகிக் கரைந்துநின்றேன்
🌸
(சரணம்)
மதியினை நிகர்க்கும் ஒளிமுகத்தில் - எழில்
… மலர்விழி இரண்டின் செழுமைகண்டேன்
மதுவென இனிக்கும் மணித்தமிழாம் - அதை
… மகிழ்வுற மடுக்கும் செவிகள்கண்டேன். (அரங்கனை) (1)
🌸
மலையினில் மிளிரும் அருவியைப்போல் - ஒளிர்
… மார்பினில் மாலை தழையக்கண்டேன்
அலைமிகு பொன்னி அடிவருட - அவன்
… அறிதுயில் புரியும் அழகைக்கண்டேன். (அரங்கனை) (2)
🌸
மலர்மகள் நாதன் மகிமையினால் - நெஞ்சில்
… மயக்கமும் சோர்வும் மறையக்கண்டேன்
நலமிகு கோவில் தரிசனத்தால் - எனை
… நலித்திடும் சோகம் விலகக்கண்டேன். (அரங்கனை) (3)
🌸
இரவுடன் பகலாம் இருபொழுதும் - புகழ்
… இசைத்திடும் அடியார் அடிதொழுதேன்
இருவகை வினையாம் இருளொழிந்தேன் - அந்த
… எழுவகைப் பிறப்பும் கடந்துவிட்டேன். (அரங்கனை) (4)
🌸
- இமயவரம்பன்

🔆🔆🔆🔆🔆🔆
இப்பாடலின் Youtube link முதல் comment-ல் 🙏
🔆🔆🔆🔆🔆🔆

#ஶ்ரீரங்கம் #ரங்கநாதர்

ஹவாய் என்னும் அற்புதம் - பயணக் கவிதை----------------------------------------கவிதைகள் : இமயவரம்பன்🌸1. அவனியின் திலகம் ஹவா...
05/31/2026

ஹவாய் என்னும் அற்புதம் - பயணக் கவிதை
----------------------------------------
கவிதைகள் : இமயவரம்பன்
🌸

1. அவனியின் திலகம் ஹவாய்

அவாவுறும் சுகங்கள் எல்லாம்
… அளித்திடும் சுவர்க்கத் திற்கே
சவாலிடும் வகையில் எங்கும்
… தழைத்தநல் வளங்கள் தாங்கி,
நவீனமும் மரபும் சேர்ந்து
… நலமெலாம் நிறைந்து நின்ற
ஹவாயெனும் அழகுப் பூமி
… அவனியின் திலகம் தானே!
🌸

2. அழகில் ஓங்கும் ஹவாய்மகள்

திசையெலாம் உலவும் சோதிச்
… செங்கதிர்க் கரங்கள் தீண்ட,
பசுநிறம் கலந்த நீலம்
… பளிச்சிடும் கடலின் மேலே,
அசைவினால் வசியம் செய்யும்
… அலைத்திரள் நடனம் ஆட,
அசைவிலாப் புகழில் ஓங்கும்
… ஹவாய்மகள் இனிது வாழ்க!
🌸

3. ஹவாயின் ஓசை

வான்வரை தெறித்து எழும்பும்
… மலைநிகர் அலையின் ஓசை,
தேன்மலர்த் தென்றல் தீண்டத்
… தென்னைகள் சிலிர்க்கும் ஓசை,
ஊன்உயிர் உருக்கு கின்ற
… உகுலேலே இசையின் ஓசை,
கானவேய்ங் குழலின் ஓசை,
… கவின்ஹவாய் ஓசை, அம்மா!
🌸

4. ஹவாயின் ஆட்டம்

அலைகடல் நிகர்த்த கூட்டம்
… ஆர்ப்பரித்து அமர்ந்து பார்க்க,
கலைவளர் ஹூலா என்னும்
… களிமிகு நடனம் கண்டேன்;
அலர்நிகர் அடிகட்கு ஏற்ப
… அசைந்திடும் இடையின் சீரால்
நலமிகு கதைகள் சாற்றும்
… நல்-ஹவாய் பெருமை வாழ்க!
🌸

5. உயர்ந்தேன் தாழ்ந்தேன்

வானிலே உயர்ந்தேன், ஓடம்
… வலித்திடும் குடையைப் பற்றி
நால்நிலத்து எழிலைக் கண்டேன்,
… நான்எனை மறந்தேன்; பின்னர்
தான்ஒளிர் பவளப் பாறை
… தழைகடல் தரையில் தாழ்ந்து,
மீனுடன் உலவிச் சென்றேன்
… வியன்பெரும் ஹவாயில் இன்றே.

குறிப்பு :
ஓடம் வலித்திடும் குடை = parasailing என்று சொல்லப்படும் வான்குடைப் பறப்பு
கடல் தரையில் உலவுதல் = snorkeling என்று அழைக்கப்படும் ஆழ்கடல் நீச்சல்
🌸

6. அரண்மனைக் காட்சி

அருநிலத்து உரிமை எல்லாம்
… அயலவர் கவர, பின்னர்
அரசையும் பறிகொ டுத்த
… அவலத்தை உணர்த்தும் வண்ணம்
அரியணை அழகைக் காட்டி
… அணிதிகழ் அறைகள் காட்டி
ஒருகொடுஞ் சிறையும் காட்டும்
… அரண்மனை அதனைக் கண்டேன்.

குறிப்பு :

வெளிநாட்டவரிடம் தமது ஆட்சியைப் பறிகொடுத்த ஹவாய் அரச குடும்பத்தினரின் பரிதாப நிலையைக் கண்டு வருந்தும் பாடல்.
🌸

அஷ்டலட்சுமி விருத்தம்🪷பாடல் வரிகள் : இமயவரம்பன்🪷அற்புத வடிவே அடியவர் கதியே… அச்சுதன் அகமகிழ் அமுதேகற்பகத் தருவே கனகமா நி...
05/23/2026

அஷ்டலட்சுமி விருத்தம்
🪷
பாடல் வரிகள் : இமயவரம்பன்
🪷
அற்புத வடிவே அடியவர் கதியே
… அச்சுதன் அகமகிழ் அமுதே
கற்பகத் தருவே கனகமா நிதியே
… கடல்நிகர் கருணையின் நிறைவே
வற்புறு வினைகள் அற்றிட வருவாய்
… வருந்துயர் மறைந்திட அருள்வாய்
சற்குணர் வணங்கும் ஆதிலட் சுமியே!
… தரணியில் ஆள்கவுன் அருளே! (1)
🪷
கலியுகம் இதிலே கதிரெனச் சுடர்வாய்
… காரிருட் கவலைகள் களைவாய்
நலமிகு மறையின் உருவெனத் திகழ்வாய்
… நவின்றிடும் கலைகளில் நிறைவாய்
அலைகடல் அதிலே அமுதெனப் பிறந்தாய்
… அரியவன் அகத்தினில் நிறைந்தாய்
உலைவினைத் தடுக்கும் தான்யலட் சுமியே
… உலகினில் ஆள்கவுன் னருளே! (2)
🪷
மயக்கமும் இருளும் ஒழித்திட வருவாய்
… மந்திர வடிவெனப் பொலிவாய்
ஜெயத்தினை விளைக்கும் செயல்திறன் அளிப்பாய்
… ஜெகத்தினில் செழும்புகழ் வளர்ப்பாய்
துயர்ப்பகை மறைய அருள்மழை பொழிவாய்
… சுகத்தினை அகத்தினில் நிறைப்பாய்
பயத்தினை அகற்றும் தைர்யலட் சுமியே
… பார்மிசை ஆள்கவுன் அருளே! (3)
🪷
அல்லவை அழிப்பாய் அறத்தினை வளர்ப்பாய்
… அருவரம் குறைவற அளிப்பாய்
வல்லமை உடைய புரவிகள் மிகுத்தாய்
… வாரணப் படையுடன் சிறப்பாய்
மல்லிகை மணக்கும் மாலைகள் தரிப்பாய்
… மாயவன் மனத்தினில் இனிப்பாய்
நல்வளம் நல்கும் கஜலட் சுமியே
… ஞாலத்தில் ஆள்கவுன் அருளே! (4)
🪷
சிறகுகள் சிறக்கும் கருடனி லமர்ந்தாய்
… சீதரன் மார்பினில் உறைந்தாய்
திறல்மிகு கரத்தில் சக்கரம் அணிந்தாய்
… செவியுறும் அறிவெனப் பொலிந்தாய்
மறையவர் முழங்கும் ஒலிதனில் இருப்பாய்
… மதியினில் தெளிவினை அளிப்பாய்
நிறைநலம் வழங்கும் சந்தானத் திருவே
… நிலமெங்கும் ஆள்கவுன் அருளே! (5)
🪷
பங்கய மலர்மேல் பொலிவுடன் ஒளிர்வாய்
… பழிகளும் பாவமும் கடிவாய்
குங்குமம் திகழும் அணிமுகம் உடையாய்
… குண்டலம் குலவிடும் செவியாய்
சங்கர முனிவன் உன்புகழ் மொழியத்
… தங்கமும் மணிகளும் பொழிந்தாய்
மங்கலம் நிறையும் விஜயலட் சுமியே
… வையத்தில் ஆள்கவுன் அருளே! (6)
🪷
உமையவள் புகழக் கலைமகள் பரவ
… உயர்நலம் உடையபொன் மகளே
இமிழ்கடல் உலகம் இறைஞ்சிடும் ஒளியே
… எதனிலும் நிறைந்திடும் எழிலே
தமிழெனும் அமுதாய்த் தழைத்திடும் சுவையே
… தளிர்மலர்த் தாமரைத் திருவே
அமரர்கள் பணியும் வித்யாலட் சுமியே
… அவனியில் ஆள்கவுன் அருளே. (7)
🪷
திமிதிமி எனவே துந்துபி முழங்க
… திரண்டெழும் இசையினில் நிறைவாய்
குமகும குமவென் றொலித்திடும் சங்கில்
… குலவிடும் சுரங்களில் மகிழ்வாய்
கமழ்மலர்க் கமலம் அதன்மிசை அமர்வாய்
… கவின்மிகும் உருவினில் திகழ்வாய்
எமதிடர் விலக்கும் தனலட் சுமியே
… எங்கணும் ஆள்கவுன் அருளே! (8)

- இமயவரம்பன்

The YouTube link to this song is in the first comment 🙏

05/13/2026

அன்பின் பெயரே கடவுள்
🔆🔆🔆🔆🔆
(கவிதை : இமயவரம்பன்)

அன்பின் பெயரே கடவுள் - சுடர்
அறிவின் தெளிவே கடவுள்
தன்சேய் நலனே நினையும் - ஒரு
தாயின் பரிவே கடவுள்

என்றும் மகிழ்வே நிறையும் - புது
இதயப் பொலிவே கடவுள்
துன்பம் அலைபோல் வரினும் - மனம்
துவளாத் துணிவே கடவுள்

மண்டும் இனிமை தவழும் - எழில்
மழலைச் சிரிப்பே கடவுள்
மண்மேல் எவரும் உறவாம் - எனும்
மனதின் விரிவே கடவுள்

தன்னை அறியும் அறிவால் - வரும்
சாந்த நிலையே கடவுள்
கன்னல் தமிழின் கவிபோல் - எழும்
காதல் கனிவே கடவுள்

- இமயவரம்பன்

இந்தப் பாடலின் youtube link-ஐ முதல் comment-ல் காணவும். 🙏

Address

Boston, MA

Alerts

Be the first to know and let us send you an email when Imayavaramban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imayavaramban:

Shortcuts

Share