Imayavaramban

Imayavaramban Tamil poet · Literary commentator · Translator · Pencil artist

பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் சமய தத்துவங்களைப் பற்றியும் நான் அறிந்தவற்றைக் கட்டுரையாகவும் கவிதை நடையிலும் தமிழன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்.

பாரதியின் பரசிவ வெள்ளம் - கவிதை விளக்கம்🔆🔆🔆“உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்உருவெடுப்பது கவிதைதெள்ளத் தெளிந்த தமிழில் – உண...
09/18/2025

பாரதியின் பரசிவ வெள்ளம் - கவிதை விளக்கம்
🔆🔆🔆

“உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை.”
என்பார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. உள்ளத்தால் உணர்ந்து அறிந்த உண்மையை இன்பச் சுவை பொங்கத் தெளிவான தமிழில் எடுத்துரைப்பதில் வல்லவன் பாரதி. அறிவிலே தெளிவு மட்டுமன்றி, நெஞ்சிலே உறுதியும் இடைவிடாத இறைநினைப்பும் கொண்ட மகா சித்தன் அவன். கடவுள் உணர்விலே சிறந்து விளங்கும் அவனது கவிதைகளில் கவின்மிகுந்த கலைஞானத்துடன் அருள்மிகுந்த மெய்ஞ்ஞானமும் மிளிர்வதைக் காணலாம்.

“ஒன்று பிரமம் உளது உண்மை; அஃது உன் உணர்வு” என்று முழங்கும் வேதாந்த சிங்கமான பாரதி, எங்கெங்கும் நிறைந்து பாயும் உள்ளுணர்வாகவே இறைவனைக் கண்டான். தான் கண்டுணர்ந்த கடவுளை உலக மக்கள் யாவரும் அனுபவித்து வாழ்வதற்கான வழியை எடுத்து ஓத வேண்டும் என்னும் மிகப்பெரிய விருப்பம் அவன் நெஞ்சில் எழுந்தது. அந்த ஆர்வத்தில் பிறந்த ஆரமுதமாக எழில் மிகுந்த இக்கவிதை உதித்தது.

பரசிவ வெள்ளம் என்னும் இக்கவிதை பாரதியின் கடவுள் உணர்வைத் தனியே எடுத்துக் காட்டும் கண்ணாடி; தான் கண்ட இன்பம் பெறுக இவ்வையகம் என்று அருள்கொண்டு எழுந்த மகாகவிஞனின் உள்ள ஓவியம்; வேதாந்தமாக விரித்துப் பொருள் உணர வல்லவர்களின் மனத்துக்கு ஓர் அற்புத அருள்விருந்து.

வேதாந்தத்தின் சாரத்தை உள்ளடக்கிய இக்கவிதையின் பொருளை நான் உணர்ந்தவாறு இப்பதிவில் விளக்கி இருக்கிறேன். பதிவைப் படித்துக் கருத்துரைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

👇
https://www.imayavaramban.com/parasiva-vellam/

🙏

வாரண மாமுகத்தான் - விநாயகர் துதி🌻(நொண்டிச் சிந்து)(சந்தம்தானன தானனனா - தனதானன தானன தானனனா)🌻வாரண மாமுகத்தான் - எழில்… வாய...
08/26/2025

வாரண மாமுகத்தான் - விநாயகர் துதி
🌻
(நொண்டிச் சிந்து)
(சந்தம்
தானன தானனனா - தன
தானன தானன தானனனா)
🌻
வாரண மாமுகத்தான் - எழில்
… வாய்ந்திடும் மூடிக வாகனத்தான்
பூரண மோதகத்தான் - மறை
… போற்றிடும் ஓர்புழை யார்கரத்தான்
பார்வளர் சீர்வயிற்றான் - புகழ்
… பாரதம் ஆக்கிடு கூரெயிற்றான்
கார்மழை போல்மதத்தான் - அவன்
… கால்தொழ ஏதிடர் மாநிலத்தே.
🌻
பொருள்:
வாரணம் = யானை
மூடிக = மூஷிக
மோதகம் = கொழுக்கட்டை
புழை ஆர் கரம் = துளைகளையுடைய கை = துதிக்கை
பார் வளர் = உலகத்தை உள்ளொடுக்கிய
பாரதம் = மகாபாரதம்
ஆக்கிடு = எழுதிய
கூர் எயிற்றான் = கூர்மையான தந்தத்தை உடையவன்
மதத்தான் = பொழிகின்ற (யானையின்) மதத்தை உடையவன்
மாநிலத்தே = இந்தப் பெரிய நிலவுலகத்தில்.
🌻
#விநாயகர்சதுர்த்தி #விநாயகர்_சதுர்த்தி #பிள்ளையார்

கண்ணன் அவன்பெயர் கருமை (சிந்துப் பாட்டு)🌸கண்ணன் அவன்பெயர் கருமை - எழில்… காட்டும் உருவமும் கருமைவிண்ணின் முகில்நிறக் குழ...
08/16/2025

கண்ணன் அவன்பெயர் கருமை
(சிந்துப் பாட்டு)

🌸
கண்ணன் அவன்பெயர் கருமை - எழில்
… காட்டும் உருவமும் கருமை
விண்ணின் முகில்நிறக் குழவி - இலை
… மீது துயில்கடல் கருமை
அண்ணல் களிநடம் புரியும் - விடம்
… ஆர்ந்த அரவமும் கருமை
எண்ணம் அதிலிருள் கடியும் - கழல்
… ஏந்த விழைமனம் கருமை.
🌸

குறிப்புகள்:
கண்ணன் அவன் பெயர் கருமை = “கிருஷ்ணன்” என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்குக் “கரியவன்” என்று பொருள்;
இலை = ஆலிலை;
அரவம் = காளிங்கன்

- இமயவரம்பன்

ஓங்கார வேல்நாமம் ஓது ---------------------திருப்பரங்குன்றம் முருகன் துதி(சிந்துப் பாடல் - ஆனந்தக் களிப்பு)(தானான தானான த...
08/12/2025

ஓங்கார வேல்நாமம் ஓது
---------------------
திருப்பரங்குன்றம் முருகன் துதி
(சிந்துப் பாடல் - ஆனந்தக் களிப்பு)

(தானான தானான தானா - தான. தானான தானான தானான தானா - என்ற சந்தம்)

------------------------------
பல்லவி
ஓங்கார வேல்நாமம் ஓது – வேலின். ஓவாப் புகழ்பாட ஓர்துன்பம் ஏது
------------------------------

சரணம்
1.
திண்ணாரும் ஈராறு தோளன் – சிந்து. தேனார் மலர்நாறு சீரார்ந்த தாளன்
விண்ணார்ந்(து) உயர்வெற்றி வேலன் – என்றும். மீளா வினைக்கோள் அறுக்கின்ற சீலன். (ஓங்கார வேல்)
🌸
2.
கொற்றக் கொடிக்கோழி கொண்டான் – மோது. கூடார் படச்சீறு போரார்ந்த செண்டான்
உற்றுள் தெளிந்தார்க்(கு) ஒளிர்வான் – அந்த. ஒற்றை எழுத்தின் பொருள்முற் றருள்வான். (ஓங்கார வேல்)
🌸
3.
காரார் குழல்வள்ளி காந்தன் – கெண்டை. காட்டும் கவின்கண்ணி தெய்வானை வேந்தன்
ஏரார்ந்த வான்பூங் கடம்பன் – போற்றி. என்பார் மனத்தே வசிக்கின்ற அன்பன் (ஓங்கார வேல்)
🌸
4.
பற்றென் றடைந்தார்க்(கு) அளிப்பான் – கூறு. பத்தர் வருத்தம் துடைத்(து)ஆத ரிப்பான்
குற்றங்கள் முற்றும் பொறுப்பான் – நீதி. கோணாத கோலேந்தி ஞாலம் புரப்பான். (ஓங்கார வேல்)
🌸
5.
தண்ணார் அருள்மாரி பெய்வான் – தீதில். தண்டாயு தத்தால் தமர்நோய் களைவான்
கண்ணார் மயில்மேவும் ஏகன் – ஓங்கு. கானார் பரங்குன்(று) அமர்ஞான யோகன். (ஓங்கார வேல்)

🙏

சொற்பொருள்:
-------------
திண் ஆரும் = வலிமை வாய்ந்த
தேன் ஆர் = தேன் நிறைந்த
நாறு = கமழும்
சீர் ஆர்ந்த = சிறப்பு வாய்ந்த
தாளன் = திருவடிகளை உடையவன்
விண் ஆர்ந்து உயர் = வானளாவிய
மீளா = தப்பித்து மீள முடியாத
வினைக் கோள் = கர்ம வினைகளின் பிடி
கொற்ற = வெற்றியுடன் கூடிய
கொடிக் கோழி = சேவல் கொடி
கூடார் = பகைவர்கள்
பட = மாய்ந்து அழிய
போர் ஆர்ந்த = போரில் பராக்கிரமம் வாய்ந்த
செண்டான் = செண்டு என்னும் ஆயுதத்தை ஏந்தியவன்
உற்று உள் தெளிந்தார்க்கு ஒளிர்வான் = உள்ளத்தில் ஆழ்ந்து நோக்கித் தெளிந்தவர்களுக்குப் பிரத்யட்சம் ஆவான்
ஒற்றை எழுத்தின் = ஓங்காரத்தின்
பொருள் முற்று அருள்வான் = உட்பொருள் முழுதும் உணரும்வண்ணம் ஓதி அருள்வான்
கார் ஆர் = கருமை மிகுந்த
குழல் = கூந்தலை உடைய
காந்தன் = கணவன்
கெண்டை காட்டும் = கெண்டை மீன் போலத் தோற்றம் கொண்ட
கவின் கண்ணி = அழகிய கண்களை உடைய
வேந்தன் = நாயகன்
ஏர் ஆர்ந்த = அழகு மிகுந்த
வான் பூங் கடம்பன் = பெருமை மிக்க கடம்ப மலர் மாலை அணிந்தவன்
போற்றி என்பார் = என்று போற்றித் துதிப்பவர்கள்
பற்று என்று அடைந்தார்க்கு = சரணம் அடைந்தவர்களுக்கு
அளிப்பான் = தனது திருவடி நிழலை அளித்துக் காப்பான்.
கூறு = புகழ்பாடுகின்ற
கோணாத = வளையாத (தவறாத)
கோலோடு = செங்கோலோடு (நல்லாட்சியோடு)
ஞாலம் புரப்பான் = உலகத்தைக் காப்பான்
தண் ஆர் = குளிர்ச்சிப் பொருந்திய
தமர் = அடியவர்/பக்தர்கள்
கண் ஆர் = அழகிய
மயில் மேவும் = மயில் மேல் வீற்றிருக்கும்
ஏகன் = ஒப்பற்றவன்
கான் ஆர் = காடுகள் நிறைந்த
பரங்குன்று = திருப்பரங்குன்றத்தில்
அமர் ஞான யோகன் = தவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் ஞான யோகியாகிய முருகபெருமான்

🌸
———————-
சந்தத்தோடு பாடுவதற்கு:
—————————
பல்லவி
ஓங்கார வேல்நாமம் ஓது – வேலின். ஓவாப் புகழ்பாட ஓர்துன்பம் ஏது

சரணம்
1.
திண்ணாரும் ஈராறு தோளன் – சிந்து. தேனார்ம லர்நாறு சீரார்ந்த தாளன்
விண்ணார்ந்து யர்வெற்றி வேலன் – என்றும். மீளாவி னைக்கோள றுக்கின்ற சீலன். (ஓங்கார வேல்)

2.
கொற்றக்கொ டிக்கோழி கொண்டான் – மோது. கூடார்ப டச்சீறு போரார்ந்த செண்டான்
உற்றுட்டெ ளிந்தார்க்கொ ளிர்வான் – அந்த. ஒற்றையெ ழுத்தின்பொ ருள்முற்ற ருள்வான். (ஓங்கார வேல்)

3.
காரார்கு ழல்வள்ளி காந்தன் – கெண்டை. காட்டுங்க வின்கண்ணி தெய்வானை வேந்தன்
ஏரார்ந்த வான்பூங் கடம்பன் – போற்றி. என்பார்ம னத்தேவ சிக்கின்ற அன்பன் (ஓங்கார வேல்)

4.
பற்றென்ற டைந்தார்க்க ளிப்பான் – கூறு. பத்தர்வ ருத்தம்து டைத்தாத ரிப்பான்
குற்றங்கள் முற்றும்பொ றுப்பான் – நீதி. கோணாத கோலேந்தி ஞாலம்பு ரப்பான். (ஓங்கார வேல்)

5.
தண்ணார் அருள்மாரி பெய்வான் – தீதில். தண்டாயு தத்தால்த மர்நோய்க ளைவான்
கண்ணார்ம யில்மேவும் ஏகன் – ஓங்கு. கானார்ப ரங்குன்ற மர்ஞான யோகன். (ஓங்கார வேல்)

- இமயவரம்பன்

திருமால் திருப்புகழ் -திருப்பதி வேங்கடவன் துதி---------------------🌸கவிதை: இமயவரம்பன் (வண்ணவிருத்தம்;தனத்தன தனத்தன தனத்த...
07/31/2025

திருமால் திருப்புகழ் -
திருப்பதி வேங்கடவன் துதி
---------------------
🌸
கவிதை: இமயவரம்பன்
(வண்ணவிருத்தம்;
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன .. தனதான)
(இருப்பவல் திருப்புகழ் - திருத்தணித் திருப்புகழ்ப் பாட்டின் மெட்டு)

🌸

இழிப்புறு பிறப்புடன் இறப்பெனும் அலைத்திரள். .. இறைத்தெழும் இடர்க்கடல் - உழல்வேனை. இறுக்கிடும் வினைக்கயி றறுத்துயர் வளித்திடும். .. இணைக்கழல் எனக்கினி - தருளாயோ

அழைத்திடு கரிக்கருள் அடற்படை சுழற்றியென். .. அகத்துயர் அழித்திட - வருவாயோ. அடர்த்திடும் மருட்பகை தடுத்தரண் அளித்திருள். .. அகற்றிடும் விளக்கென - ஒளிராயோ

மழைக்குடல் நடுக்குறு பசுக்குலம் அளித்திட. .. மலைக்குடை எடுத்திடும் - அருளாளா. மனத்துறு செருக்குடை மடத்தச முகத்தனை. .. வதைத்திடு செருக்கிளர் - சிலையாளா

செழிப்புடை மலர்ப்பொழில் வசித்திடும் இசைக்குயில். .. செவித்தலம் இனித்திடு - தமிழ்பாடத். திளைத்திடு மயிற்கணம் நடித்தெழில் விளைத்திடு. .. திருப்பதி மலைத்தலம் - உடையானே.

🌸

பதம் பிரித்து:
——————
இழிப்பு உறு பிறப்புடன் இறப்பு எனும் அலைத்திரள். .. இறைத்து எழும் இடர்க்கடல் - உழல்வேனை. இறுக்கிடும் வினைக்கயிறு அறுத்து உயர்வு அளித்திடும். .. இணைக்கழல் எனக்கு இனிது - அருளாயோ

அழைத்திடு கரிக்கு அருள் அடல் படை சுழற்றி என். .. அகத்துயர் அழித்திட - வருவாயோ. அடர்த்திடும் மருள் பகை தடுத்து அரண் அளித்து இருள். .. அகற்றிடும் விளக்கென - ஒளிராயோ

மழைக்கு உடல் நடுக்கு உறு பசுக்குலம் அளித்திட. .. மலைக் குடை எடுத்திடும் - அருளாளா. மனத்து உறு செருக்கு உடை மடத் தச முகத்தனை. .. வதைத்திடு செருக் கிளர் - சிலையாளா

செழிப்பு உடை மலர்ப்பொழில் வசித்திடும் இசைக்குயில். .. செவித் தலம் இனித்திடு - தமிழ்பாடத். திளைத்திடும் மயில் கணம் நடித்து எழில் விளைத்திடு . .. திருப்பதி மலைத்தலம் - உடையானே.

🌸

பொருள்:
————-
இழிப்புறு = இழிவான;
உழல்வேனை = துன்பப்படும் என்னை
வினைக்கயிறு = கயிறு போலக் கட்டிப் பிணிக்கும் கர்ம வினைகள்;
இணைக் கழல் = இரண்டு திருவடிகள்;
அழைத்திடு கரிக்கு அருள் அடல் படை = அழைத்த யானைக்கு அன்று அருள்செய்த வலிமைவாய்ந்த சக்கரப்படை;
மழைக்கு = மழையினால் (உருபு மயக்கம்);
அளித்திட = காத்திட;
மனத்து உறு செருக்கு உடை = மனத்தில் மிகுந்த செருக்கைக் கொண்டவனான;
மடத் தசமுகத்தன் = அறியாமை மிக்க பத்துத் தலைகள் கொண்டவனான இராவனன்;
செருக்கிளர் = போரில் பராக்கிரமத்தைக் காட்டும்;
சிலையாளா = வில் வீரனே;
செவித்தலம் = செவிகள்;
மயில் கணம் = மயில் கூட்டம்;
நடித்து = நடனம் ஆடி;

🌸

#திருமால்திருப்புகழ்

🌺 வடுவூர் இராமன் வடிவு 🌺வடுவூர் இராமன் ஆண்டாள் திருக்கோலத்தைப் போற்றிப் பாடும் வெண்பா🌸கோதை திருவழகும் கோதண்டத் தோளழகும்க...
07/29/2025

🌺 வடுவூர் இராமன் வடிவு 🌺

வடுவூர் இராமன் ஆண்டாள் திருக்கோலத்தைப் போற்றிப் பாடும் வெண்பா

🌸

கோதை திருவழகும் கோதண்டத் தோளழகும்
காதற் கிளியழகும் காட்டுமே - ஓதக்
கடல்சூழ் இலங்கை கனற்கணையால் வென்ற
வடுவூர் இராமன் வடிவு.

🌸

- இமயவரம்பன்

🌻 திருவானைக்கா பஞ்சகம் 🌻கவிதைகள் : இமயவரம்பன்👇
07/20/2025

🌻 திருவானைக்கா பஞ்சகம் 🌻

கவிதைகள் : இமயவரம்பன்

👇

Thiruvanaikaval Thuthi - திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் துதி

🌻🩸 சீர்மலி தாள் அடைவோம் - சிவத்துதி 🩸🌻(வண்ணப் பாடல் :தானன தானனனா - தனதானன தானனனா)கூர்மலி வேல்விழியாள் - ஒரு… கோலமர் கூறு...
07/17/2025

🌻🩸 சீர்மலி தாள் அடைவோம் - சிவத்துதி 🩸🌻

(வண்ணப் பாடல் :
தானன தானனனா - தன
தானன தானனனா)

கூர்மலி வேல்விழியாள் - ஒரு
… கோலமர் கூறுடையான்
நீர்மலி வார்சடையான் - வரை
… நேர்மழு நீள்படையான்
ஏர்மலி மானுடையான் - சின
… ஏறதில் ஏறிடுவான்
சீர்மலி தாளடைவார் - அவர்
… தீவினை தேய்வுறுமே.

🌸
சொற்பொருள்:
கூர்மலி = கூர்மை மிகுந்த;
கோலமர் = கோலம் + அமர் = அழகு வாய்ந்த;
கூறு உடையான் = பாகமாக உடையவன்;
நீர் மலி = கங்கை நீர் விளங்கும்;
வார் சடையான் = விரிந்த சடை உடையவன்;
வரை நேர் = மலை போன்ற;
ஏர் மலி = அழகிய;
சின ஏறு = சினம் மிகுந்த காளை;
சீர் மலி = சிறப்பு மிகுந்த;
தேய்வு உறும் = மறைந்து விடும்
🌸
கவிதை : இமயவரம்பன்
🙏

🦚நாலாயிரத்தில் வேலாயுதன் 🦚நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முருக கடவுளைப் பல்வேறு அழகிய பெயர்களில் ஆழ்வார்கள் குறிப்பிட்டுப...
07/10/2025

🦚நாலாயிரத்தில் வேலாயுதன் 🦚

நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முருக கடவுளைப் பல்வேறு அழகிய பெயர்களில் ஆழ்வார்கள் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்கள். அந்நூலில் ஆறு இடங்களில் ஆறுமுகனின் திருப்பெயர்களை அடியேன் கண்டறிந்தேன்.

அந்தப் பெயர்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்:

🦚 1. 'திறல் முருகன்' 🦚
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமொழி ஏழாம் பத்தில் ‘திறல்முருகன் அனையார்’ என்று தொடங்கும் பாசுரத்தில் முருகபெருமான் திறல் முருகன் என்னும் பெயரில் சக்திவாய்ந்தவராகப் போற்றப்படுகிறார்.

🦚 2. 'மருவிய மயிலினன் அறுமுகன்'🦚
தொண்டரப்பொடி ஆழ்வார் பாடிய திருப்பள்ளியெழுச்சியில் 'இரவியர் மணிநெடும்' என்று தொடங்கும் ஆறாம் பாடலில் ஆறுமுகப்பெருமான் மயில் வாகனனாகப் போற்றப்படுகிறார்.

🦚 3. 'கொடிக் கோழி கொண்டான்' 🦚
நம்மாழ்வார் திருவாய்மொழியின் ஏழாம் பத்தின் எட்டாம் பாசுரத்தில் முருகவேள் கோழிக் கொடி உடையவராகக் குறிப்பிடப்படுகிறார்.

🦚 4. 'கார்த்திகையான்' 🦚
இராமனுச நூற்றந்தாதியில் ‘கார்த்திகையானும் கரிமுகத்தானும்’ என்று தொடங்கும் பாசுரத்தில் முருகபெருமான் கார்த்திகை மைந்தனாகக் குறிப்பிடப்படுகிறார்.

🦚 5. 'வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேல் உய்த்த வேள்' 🦚
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகத்தில் ‘பெரிய கடலின் நடுவில் இருந்த மலையைத் (வெற்பைத்) தகர்க்கும் ஒப்பற்ற(தனி) வேலை எறிந்த(உய்த்த) தலைவர்’ என்று குறிப்பிடப்படுகிறார் முருகபெருமான்.

🦚 6. 'வள்ளி கொழுநன்' 🦚
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழியின் ஆறாம் பத்தில் ‘வள்ளி கொழுநன் முதலாய’ என்னும் பாடலில் வள்ளி மணவாளராக வருகிறார் ஆறுமுகர்.

#பிரபந்தம் #முருகன்

🎆 வான வெளியில் ஒரு வண்ண நாட்டியம்வான வேடிக்கையின் அழகைப் போற்றும் கவிதை(வண்ண விருத்தம் : தனத்தன தனத்தன தனத்தன தனந்த)கவித...
07/08/2025

🎆 வான வெளியில் ஒரு வண்ண நாட்டியம்

வான வேடிக்கையின் அழகைப் போற்றும் கவிதை
(வண்ண விருத்தம் : தனத்தன தனத்தன தனத்தன தனந்த)
கவிதை : இமயவரம்பன்
🎇

உடுக்களின் ஒளித்திரள் ஒருப்பட இணைந்து
மிடுக்கொடு கொடுத்திடும் விழிக்கொரு விருந்து
வெடிப்பொலி நடத்தினை நிகழ்த்திடும் விசும்பு
சுடர்ப்பொறி கிளர்த்திடும் மலர்த்தொகை சொரிந்து.

🎇
சொற்பொருள்:
உடுக்களின் = நட்சத்திரங்களின்
நடத்தினை = நடனத்தை
விசும்பு = வானம்
கிளர்த்திடும் = எழுப்பிடும்
மலர்த்தொகை = மலர்க்கொத்துகள்
சொரிந்து = பொழிந்து
🎇

#வண்ணவிருத்தம்

🔆சிற்றம்பல பஞ்சகம்🔆(கட்டளைக் கலிவிருத்தம் - தேமா கூவிளம் கூவிளம் கூவிளம்)(கவிதைகள் - இமயவரம்பன்)✴️ 1.பண்ணின் நேர்மொழி யா...
07/08/2025

🔆சிற்றம்பல பஞ்சகம்🔆
(கட்டளைக் கலிவிருத்தம் - தேமா கூவிளம் கூவிளம் கூவிளம்)

(கவிதைகள் - இமயவரம்பன்)

✴️ 1.
பண்ணின் நேர்மொழி யாளுமை பாகனார்
சுண்ண நீறொளிர் சுந்தர மேனியர்
அண்ணு வார்க்கருள் தில்லைச்சிற் றம்பலத்(து)
அண்ண லாரென ஆரிடர் தீருமே.

பதம் பிரித்து:
பண்ணின் நேர் மொழியாள் உமை பாகனார்
சுண்ண நீறு ஒளிர் சுந்தர மேனியர்
அண்ணுவார்க்கு அருள் தில்லைச் சிற்றம்பலத்து
அண்ணலார் என ஆர் இடர் தீருமே.

சொற்பொருள்:
பண்ணின் நேர் = பண்ணைப் (ராகத்தைப்) போன்ற இனிமையான
மொழியாள் = வார்த்தைகளைப் பேசும்
உமை பாகனார் = உமையாளைப் பாகமாகக் கொண்டவர்
சுண்ண நீறு ஒளிர் = திருநீற்றுப் பொடி ஒளி வீசுகின்ற
சுந்தர மேனியன் = அழகிய திருமேனியை உடையவர்
அண்ணுவார்க்கு அருள் = அணுகி வந்து தொழுபவர்களுக்கு அருள் செய்கின்ற
தில்லைச் சிற்றம்பலத்(து) அண்ணலார் என = தில்லையில் எழுந்தருளியுள்ள எம் தலைவராகிய நடராசர் என்று சொல்ல
ஆர் இடர் தீருமே = அரிய பெரிய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்

✴️ 2.
அப்ப ணிந்த அவிர்சுடர் வேணியர்
முப்பு ரஞ்செறும் மொய்ம்புடைத் தோளினர்
செப்ப ரும்புகழ்த் தில்லைச்சிற் றம்பலத்(து)
அப்பர் என்றிட அற்றிடும் அற்றமே.

பதம் பிரித்து:
அப்பு அணிந்த அவிர் சுடர் வேணியர்
முப்புரம் செறும் மொய்ம்பு உடைத் தோளினர்
செப்ப அரும் புகழ்த் தில்லைச் சிற்றம்பலத்து
அப்பர் என்றிட அற்றிடும் அற்றமே.

சொற்பொருள்:
அப்பு அணிந்த = கங்கை நீரைத் தரித்த
அவிர் சுடர் = ஒளிவீசும் சுடர் போன்ற
வேணியர் = சடைமுடியை உடையவர்
முப்புரம் செறும் = முப்புரங்களையும் வெற்றி கொண்ட
மொய்ம்புடைத் தோளினர் = சக்திவாய்ந்த தோளை உடையவர்
செப்ப அரும் புகழ் = சொல்வதற்கு அரிய புகழ் வாய்ந்த
தில்லைச் சிற்றம்பலத்(து) அப்பர் என்றிட = தில்லையில் எழுந்தருளியுள்ள எம் தந்தை என்று சொல்ல
அற்றிடும் அற்றமே = துயரங்கள் எல்லாம் மறைந்துவிடும்

✴️ 3.
தூய வான்மதி சூடிடும் சென்னியர்
ஆய சீர்நடம் ஆடிடும் மன்னவர்
தேய்வி லாவெழில் தில்லைச்சிற் றம்பலக்
கோயி லார்எனக் கூடும் வளங்களே.

பதம் பிரித்து:
தூய வான் மதி சூடிடும் சென்னியர்
ஆய சீர் நடம் ஆடுடும் மன்னவர்
தேய்வு இலா எழில் தில்லைச் சிற்றம்பலக்
கோயிலார் எனக் கூடும் வளங்களே.

சொற்பொருள்:
தூய வான்மதி சூடிடும் சென்னியர் = தூய நிலவைச் சூடும் சடைமுடியை உடையவர்;
ஆய சீர்நடம் ஆடுடும் மன்னவர் = சிறப்பு மிக்க நடனத்தை ஆடும் அரசர்;
தேய்வு இலா எழில் = குறைவில்லாத அழகு வாய்ந்த
தில்லைச் சிற்றம்பலக் கோயிலார் என = தில்லைச் சிற்றம்பலத்தைக் கோயிலாக உடையவர் என்று சொல்ல
கூடும் வளங்களே = (வாழ்வில்) வளங்கள் அதிகரிக்கும்.

✴️ 4.
காதல் கங்கை கரந்த சடைதனில்
கோதில் நாள்மலர்க் கொன்றை அணிந்தவர்
தீதி லாத்திருத் தில்லைச்சிற் றம்பல
நாத னாரென நம்வினை மாளுமே.

பதம் பிரித்து:
காதல் கங்கை கரந்த சடைதனில்
கோதில் நாள் மலர்க் கொன்றை அணிந்தவர்
தீது இலாத் திருத் தில்லைச் சிற்றம்பல
நாத னார் என நம் வினை மாளுமே.

சொற்பொருள்:
காதல் கங்கை = தமது அன்புக்குப் பாத்திரமான கங்கை நதியை
கரந்த சடைதனில் = மறைத்து வைத்திருக்கின்ற சடையில்
கோது இல் = குற்றம் அற்ற
நாள் மலர் கொன்றை அணிந்தவர் = இன்று புதிதாகப் பூத்தது போல் எப்போது இளமை மாறாத கொன்றை மலரை அணிந்தவர்
தீதிலாத் திருத் தில்லைச் சிற்றம்பல = தீமைகள் எதுவும் நெருங்காத தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள
நாதனார் என = எமது தலைவர் நடராசர் என்று சொல்ல
நம்வினை மாளுமே = நமது தீவினைகள் எல்லாம் அழியும்.

✴️ 5.
மைய மர்ந்த மணிமிடற் றார்அடற்
கைய மர்ந்த கணிச்சிப் படையினார்
செய்ய மர்ந்தொளிர் தில்லைச்சிற் றம்பலத்(து)
ஐயர் என்ன அழிந்திடும் அல்லலே.

பதம் பிரித்து:
மை அமர்ந்த மணி மிடற்றார் அடல்
கை அமர்ந்த கணிச்சிப் படையினார்
செய் அமர்ந்து ஒளிர் தில்லைச் சிற்றம்பலத்(து)
ஐயர் என்ன அழிந்திடும் அல்லலே.

சொற்பொருள்:
மை அமர்ந்த = கருமை அமைந்த
மணி மிடற்றார் = அழகிய திருக்கழுத்தை உடையவர்;
அடற் கை அமர்ந்த = வலிமைவாய்ந்த திருக்கரத்தில் ஏந்திய
கணிச்சிப் படையினார் = மழுவாயுதத்தை உடையவர்;
செய் அமர்ந்த = வயல்கள் நிறைந்த
தில்லைச் சிற்றம்பலத்(து) ஐயர் என்ன = தில்லையில் எழுந்தருளியுள்ள எம் தலைவராகிய நடராசர் என்று சொல்ல
அழிந்திடும் அல்லலே = நம் அல்லல்கள் எல்லாம் அழிந்துவிடும்.

🌸🌸🌸

#சிதம்பரம் #தில்லைச்சிற்றம்பலம் #பஞ்சகம்

🌸 ஶ்ரீ தணிகாசல தோடகம் 🌸(சந்த விருத்தம் : "தனனா தனனா தனனா தனனா”)1.உறவென் றுனசீ ருருவே நினைவேன்நறவென் றுனபேர் நிதம்நான் நவ...
07/04/2025

🌸 ஶ்ரீ தணிகாசல தோடகம் 🌸
(சந்த விருத்தம் : "தனனா தனனா தனனா தனனா”)

1.
உறவென் றுனசீ ருருவே நினைவேன்
நறவென் றுனபேர் நிதம்நான் நவில்வேன்
குறவள் ளியவள் கொழுநா! குமரா!
மறுவில் தணிகா சலம்வாழ் குகனே.

பதம் பிரித்து:
உறவு என்று உன(து) சீர் உருவே நினைவேன்
நறவு என்று உன(து) பேர் நிதம் நான் நவில்வேன்
குறவள்ளி அவள் கொழுநா! குமரா!
மறு இல் தணிகாசலம் வாழ் குகனே.

சொற்பொருள்:
உறவு என்று = எனது உண்மையான உறவு நீயே என்று
உனசீர் உருவே = உனது மேன்மை மிகுந்த திருவுருவத்தையே
நினைவேன் = எப்போதும் மனத்தால் நினைத்துக்கொண்டிருப்பேன்.
நறவு என்று = தேன் என்று;
உனபேர் = உனது பேரை
நிதம் நான் நவில்வேன் = எப்போதும் ஓதிக்கொண்டிருப்பேன்
குறவள்ளி அவள் கொழுநா = குறவள்ளியின் கணவனே;
மறு இல் = குற்றமற்ற

2.
துயரார் பிறவிக் கடலிற் சுழல்வேன்
பயனில் கருமம் பலசெய்(து) அயர்வேன்
மயர்வே மிகுபுன் மதியேன் உயவே
தயைநீ புரியாய் தணிகா சலனே.

சொற்பொருள்:
துயரார் = துன்பம் நிறைந்த;
பயனில் கருமம் = பயனற்ற செயல்கள்;
அயர்வேன் = சோர்ந்துபோகிறேன்;
மயர்வு = மயக்கம்/குழப்பம்;
புன்மதியேன் = சிறுமை மிகுந்த மதியை உடையவனான நான்;
உயவே = உய்யவே = தப்பிப் பிழைத்திடவே;

3.
ஒருசொல் கனிவாய் ஒருவர்க்(கு) உரையேன்
எரிபோல் சினமே இதயத்(து) உடையேன்
இருள்சேர் புலனால் இழிவேற்(கு) அருளாய்
விரிசீர்த் தணிகா சலவே லவனே.

சொற்பொருள்:
ஒருவர்க்கு = ஒருவருக்கு(ம்);
இருள்சேர் புலனால் = அறியாமை என்னும் இருள் சூழ்ந்த ஐம்புலன்களின் செயல்களால்
இழிவேற்கு = இழிவேனுக்கு = இழிவடையும் எனக்கு;
விரி சீர் = புகழ் விரிந்த;

4.
எழிலார் குறமா மடவாட்(கு) இனியாய்!
அழியாப் புகழ்சேர் அடல்வேற் படையாய்!
கழிபே ரிடர்தீர் கழலே அருளாய்!
பொழில்சூழ் தணிகா சலபூ பதியே.

சொற்பொருள்:
எழில் ஆர் = அழகு மிகுந்த;
மடவாட்கு = மடவாளுக்கு= இளம்பெண்ணுக்கு;
கழிபேர் இடர் தீர் = (அடியவர் வாழ்வில்) மிகுதியான இடர்ப்பாடுகளை நீக்கவல்ல;
கழல் = திருவடிகள்;

5.
“கதிநீ” எனவா னவர்கால் பணியக்
கதிர்போல் சுடர்வேல் கரமேந் திடுவாய்
துதிசெய் தமருற் றிடுதொல் வினையை
மிதிசெய் தணிகை மலைமே யவனே.

பதம் பிரித்து:
“கதிநீ” என வானவர் கால் பணியக்
கதிர்போல் சுடர்வேல் கரம் ஏந்திடுவாய்
துதி செய் தமர் உற்றிடு தொல் வினையை
மிதிசெய் தணிகை மலை மேயவனே.

சொற்பொருள்:
தமர் உற்றிடு = அடியவர்கள் அடைகின்ற;
தொல் வினையை = பழமையான வினைகளையெல்லாம்;
மிதி செய் = மிதித்து அழிக்கின்ற வல்லமை வாய்ந்த
மேயவனே = மேவியவனே = எழுந்தருளிருப்பவனே

6.
வளியாய் மரமாய் வளர்வான் மடிய
ஒளிர்வேல் படையொன்(று) எறிபே ருரவோய்!
களிசேர் மயிலோய்! கவலை களையாய்
வளமார் தணிகை மலைமா மணியே.

சொற்பொருள்:
வளியாய் மரமாய் வளர்வான் = சூறாவளிக் காற்றாகவும் மரமாகவும் உருமாற்றம் கொண்ட சூர பத்மன்;
பேருரவோய் = பெரிய வலிமை மிக்கவனே;
களிசேர் = களிப்புமிகுந்த;
வளம் ஆர் = வளம் நிறைந்த

🌸

குறிப்பு: தோடகம் என்பது ஒரு சமஸ்கிருத பாடல் அமைப்பு.
"தனனா தனனா தனனா தனனா” என்ற சந்தம்
எடுத்துக்காட்டு : சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - “சடையாய் எனுமால் சரணீ எனுமால்”
(கந்தர் அனுபூதியில் பல பாடல்களும் இச்சந்தமே)

- இமயவரம்பன்

#தோடகம் #தணிகாசலம்

Address

Boston, MA

Website

https://linktr.ee/imayavaramban.books

Alerts

Be the first to know and let us send you an email when Imayavaramban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imayavaramban:

Share